நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/அன்பும் ஆதரவும் மறைந்தது

விக்கிமூலம் இலிருந்து

41. அன்பும் ஆதரவும் மறைந்தது

பெருமானார் அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் அவர்கள் செலுத்திய அன்புக்கும் செய்த தியாகங்களுக்கும் அளவில்லை.

அதனால் அவர்கள், அரேபியர்களுடைய பகைமையைப் பெறவேண்டியதாயிற்று.

பெருமானார் அவர்களும் அளவற்ற அன்பு கொண்டிருந்தார்கள்.

ஒரு சமயம், அபூதாலிப் அவர்கள் நோயுற்றிருந்த போது அவர்களைக் காண சென்றார்கள் பெருமானார் அவர்கள்.

அப்பொழுது, “என் சகோதரர் குமாரரே! எந்த ஆண்டவன் உம்மை நபியாக அனுப்பியிருக்கிறானோ அந்த ஆண்டவனிடம், என்னுடைய நோய் குணமாகும்படி நீர் பிரார்த்தனை செய்யக் கூடாதா?’ என்று கேட்டுக் கொண்டார் அபூதாலிப்.

அவ்வாறே பெருமானார் அவர்கள், “ஆண்டவனிடம் பிரார்த்தளை செய்தார்கள்”. நோய் குணமாகியதும், “ஆண்டவன் உம்முடைய பிரார்த்தனையை அங்கீகரிக்கிறான்” என்றார் அபூதாலிப்.

“ஆண்டவனுடைய கட்டளைகளுக்கு நீங்களும் கீழ்ப்படிந்து நடந்து கொள்வீர்களானால், உங்களுடைய பிரார்த்தனைகளையும் அவன் அங்கீகரிப்பான்” என்று கூறினார்கள் பெருமானார் அவர்கள்.

அபூதாலிப் அவர்கள் மரணத் தறுவாயில், தங்களைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் அழைத்து, “நீங்கள் எல்லோரும் முஹம்மது அவர்களுடன் நட்புறவோடு நடந்து கொள்ள வேண்டும் என்று உங்களுக்கு இறுதியாகச் சொல்லுகிறேன். ஏனெனில், அவர் குறைஷிகளின் நம்பிக்கையைக் காப்பாற்றுவார். அரபு தேசத்தின் சத்திய சந்தர் அவரே அவர் கொண்டு வந்திருக்கும் மதத்தை என் மனம் ஏற்றுக் கொள்கிறது. ஆனால் மற்றவர்கள் பழிப்பார்களே என்ற அச்சத்தால், நாவானது அதை ஒப்புக்கொள்ள மறுக்கின்றது” என்றார்கள்.

அபூதாலிப் அவர்கள் உயிரோடு இருக்கும் வரையில், பெருமானார் அவர்களிடம் மிகுந்த அன்பு பாராட்டி வந்ததோடு, பெரிய ஆதரவாகவும் இருந்து வந்தார்கள்.

அதனால், குறைஷிகள் துன்புறுத்தல்கள் ஈடேற முடியாமல் போயிற்று.

அபூதாலிப் அவர்கள் மரணம் அடைந்தவுடன், குறைஷிகளுக்கு இருந்த சிறிய அச்சமும் அகன்றுவிட்டது.

பெரிய தந்தையின் மரணமானது, பெருமானார் அவர்களுக்குப் பெரிய இழப்பாயிற்று. முஸ்லிம்களும் மிகுந்த துக்கத்தில் ஆழ்ந்தார்கள்.