நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/தலைமைப் பதவிக்கு ஆசைப்பட்டவர்

விக்கிமூலம் இலிருந்து

50. தலைமைப் பதவிக்கு ஆசைப்பட்டவர்

ஆண்டு தோறும், அரேபியா நாட்டின் முக்கியமான பகுதிகளில், விழாக்கள் நடைபெறும்,

விழாக்கள் நிகழும் இடங்களுக்குச் சென்று, பெருமானார் அவர்கள் இஸ்லாத்தைப் பற்றி எடுத்துரைப்பார்கள்.

ஒரு சமயம், உக்கால் என்னும் இடத்தில் வழக்கமாக ஆண்டு தோறும் நடைபெறும் விழா வந்தது. அரபு நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பெரிய குடும்பத்தினரெல்லாம் அங்கே வந்திருந்தனர். பெருமானார் அவர்கள் அங்கே சென்று போதனை செய்தார்கள்.

அதைக் கண்ட நாயகத்தின் பெரிய தந்தையான அபூலஹப், அவர்களுக்குப் பின்னே சென்று, மக்களைப்பார்த்து, “இவர் நேரான வழியை விட்டுத் தவறி விட்டார். இன்னும் பொய்தான் சொல்கிறார்” என்று கூறினார்.

பனூ ஆமிர் என்னும் குடும்பத்தாரிடையே பெருமானார் அவர்கள் சென்று, இஸ்லாத்தை எடுத்துரைத்த போது, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பர்ராஸ் என்பவர் பெருமானார் அவர்களின் வாக்கின் சிறப்பைக் கண்டு, “இவர் மட்டும் எனக்குக் கிடைப்பாரானால், அரபியா தேசம் முழுவதையும், நான் வசப்படுத்தி விடுவேன்” என்று தம்மைச் சேர்ந்தவர்களிடம் கூறினார்.

மேலும், பெருமானார் அவர்களிடம், “நான் உங்களுக்குத் துணையாக இருந்து, உங்களுடைய பகைவர்களை எல்லாம் வென்று விட்டால், உங்களுக்குப் பிறகு தலைமைப் பதவி எனக்குக் கிடைக்குமா?” என்று வினவினார்.

அதற்குப் பெருமானார் அவர்கள்: “அது ஆண்டவன் கையில் இருக்கிறது” என்று சொன்னார்கள். உடனே அவர், “என்னுடைய மார்பை, அரேபியர்களின் அம்புக்குக் குறியாக்கிக் கொள்ளவும், ஆட்சியை வேறு ஒருவர் வசம் விட்டு விடவும் நான் விரும்பவில்லை” என்று கூறி, புறப்பட்டு விட்டார்.