நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/மதீனாவிலிருந்து யூதர்கள் வெளியேறுதல்

விக்கிமூலம் இலிருந்து

103. மதீனாவிலிருந்து யூதர்கள் வெளியேறுதல்

பனூ நலீர் கூட்டத்தினருக்குப் பலமான கோட்டைகள் இருந்ததாலும், அவர்களுக்கு உதவி செய்வதாக, “முனாபிகூன்” என்ற நயவஞ்சகர்கள் வாக்குறுதி அளித்திருந்ததாலும், அவர்கள் முஸ்லிம்களுக்குத் தீங்கு செய்யத் துணிந்திருந்தார்கள்.

அவர்கள் ஓயாது, முஸ்லிம்களுக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். பெருமானார் அவர்களின் உயிருக்கும் ஆபத்து உண்டாக்க இரகசியமாகச் சூழ்ச்சி செய்து வந்தார்கள்.

அவர்களை அடக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பெருமானார் சில தோழர்களுடன் சென்று, அவர்களுடைய கோட்டைகளை முற்றுகை இட்டார்கள். பதினைந்து மாதங்கள் வரை முற்றுகை நீடித்தது.

பனூ நலீர் கூட்டத்தார் தப்புவதற்கு வழி இல்லாததால், பெருமானாரிடம் ஒரு தூது அனுப்பினார்கள். அதாவது மதீனாவை விட்டுத் தாங்கள் வெளிநாட்டுக்குப் போய் விடுவதாகவும், ஆனால் தங்கள் ஒட்டகைகள் சுமக்கும் அளவுக்குப் பொருள்களை மட்டும் எடுத்துச் செல்வதற்கு அனுமதி தர வேண்டும் என்று சொல்லி அனுப்பினர்.

அதற்குப் பெருமானார் அவர்கள் சம்மதம் அளித்தார்கள்.

பனூ நலீர் கூட்டத்தினர் ஏராளமான பொருட்களையும் வீட்டுக் கதவுகளைக் கூடப் பெயர்த்து எடுத்துக் கொண்டும், வெளியேறி சிலர் கைபரிலும், சிலர் ஸிரியாவிலும் சென்று குடியேறினார்கள். அவர்கள் போகும் போது சிறிது கூட வருத்தமின்றி மகிழ்ச்சியோடும், வாத்தியங்களை முழங்கிக் கொண்டும் சென்றார்கள்.

கைபரில் செல்வாக்குப் பெற்ற அவர்களே தலைமை இடத்தைப் பெற்றனர்.