நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/புறப்படும்படி கட்டளை

விக்கிமூலம் இலிருந்து

55. புறப்படும்படி கட்டளை

ஆண்டவனுடைய கட்டளையை நாயகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பெருமானார் அவர்களைத் தாங்கள் பாதுகாத்துக் கொள்வதாகவும், தங்களிடம் வந்து தங்கும்படியும் மக்காவின் சுற்றுப்புறத்தில் உள்ள முஸ்லிம்கள் வேண்டிக் கொண்டனர். ஆனால் அவர்களுடைய கோரிக்கைகளுக்கெல்லாம் பெருமானார் அவர்கள் இணங்கவில்லை.

பெருமானார் அவர்களைப் பாதுகாக்கும் பெருமை, மதீனாவில் வாழும் அன்ஸாரிகளுக்கு ஆண்டவன் ஏற்படுத்தியிருக்கும் போது, அவர்கள் வேறு எங்கே போக முடியும்?

நபிப் பட்டம் கிடைத்த பதின்மூன்றாவது ஆண்டுத் தொடக்கத்தில், பெருமானார் அவர்களை மதீனாவுக்குப் புறப்பட்டுச் செல்லும்படி ஆண்டவனிடமிருந்து உத்தரவு கிடைத்தது.

உடனே அவர்கள், அபூபக்கர் அவர்களிடம் சென்று, ஆண்டவன் உத்தரவைக் கூறினார்கள்.

“நானும் தங்களைத் தொடர்ந்து வரும் பாக்கியத்தைப் பெறுவேனா?” என்று கேட்டார்கள். பெருமானார் அவர்களும் அதற்கு இசைந்தார்கள்.