நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/ஆண்டவனும் நம்மோடு இருக்கிறான்

விக்கிமூலம் இலிருந்து

57. ஆண்டவனும் நம்மோடு இருக்கிறான்

காலையில் அலி அவர்கள் எழுந்து வெளியே வந்தார்கள்.

பெருமானார் அவர்களைக் காணாமல் ஏமாற்றம் அடைந்து கொடிய குறைஷிகள் மிகுந்த கோபத்தோடு அலி அவர்களை நோக்கி, “உம்முடைய நண்பர் எங்கே?” எனக் கேட்டார்கள்.

“இறைவனின் தூதரைப் பற்றி இறைவனுக்கே தெரியும்” என்று பதில் அளித்தார்கள் அலி அவர்கள்.

பின்னர், ஆத்திரத்தோடு நாலா பக்கமும் தேடிப் புறப்பட்டனர்.

எங்கேயும் அவர்களைக் காணாததால், பெருமானார் அவர்களையாவது அபூபக்கரையாவது பிடித்துத் தருபவர்களுக்கு நூறு ஒட்டகங்கள் பரிசு அளிப்பதாக அறிவித்தனர் குறைஷிகள்.

பரிசுக்கு ஆசைப்பட்டு பலர் தேடி அலைந்தார்கள். அவர்களில் சிலர் தெளர் குகைக்கு அருகாமையில் தற்செயலாக வந்துவிட்டனர்.

குகைக்கு வெளியே மனிதர்களின் நடமாட்டத்தை உணர்ந்த அபூபக்கர் அவர்கள், தங்களுடைய உயிரைக் கூடப் பொருட்படுத்தாமல், பெருமானார் அவர்களுக்கு ஆபத்து நேர்ந்து விடக் கூடாதே என்பதில் கண்ணுங் கருத்துமாக இருந்தார்கள். மிகுந்த அச்சத்தோடு அவர்கள் நாயகத்திடம் “நாம் இருவர் மட்டுமே இங்கே இருக்கிறோம்; பகைவர்களோ பலர் வெளியே சூழ்ந்து நிற்கிறார்கள்’ என்று கூறினார்கள்.

“பயப்படாதீர். நாம் இருவர் மட்டும் அல்ல. ஆண்டவனும் நம்மோடு இருக்கிறான்” என்றார்கள் பெருமானார் அவர்கள்.

அவர்கள் குகைக்குள் இருக்கக் கூடுமோ எனக் கருதிய குறைஷிகள் குகை வாயிலுக்கு வந்தார்கள். அப்பொழுது குகை வாயிலில் ஒரு சிலந்தி வலை பின்னியிருந்தது. புறா கூடு கட்டி, முட்டையிட்டு இருந்தது. அதைப் பார்த்ததும் அவர்கள் அங்கே இருக்க முடியாது என்று கருதி குறைஷிகள் திரும்பி விட்டார்கள்.

பெருமானார் அவர்களும், அபூபக்கர் அவர்களும் மூன்று நாட்கள் குகையில் தங்கி இருந்தார்கள்.

அபூபக்கர் அவர்கள் வீட்டிலிருந்து மூன்று நாட்களும் இரவு வேளைகளில் அவர்களுக்கு உணவு வந்து கொண்டிருந்தது.