நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்/தீர்க்கதரிசி

விக்கிமூலம் இலிருந்து

5. தீர்க்கதரிசி

தீர்க்கதரிசி என்றால், பின்னால் வருவதை முன்னால் அறிபவர் என்றாகும். நபி என்றால், இறைவனுடைய திருத்தூதர் என்றாகும். எத்தனையோ தீர்க்கதரிசிகள், நபிமார்கள் உலகத்தில் தோன்றினார்கள் என்று எல்லாச் சமயத்தினரும் கூறுகிறார்கள். ஆனால் தீர்க்கதரிசி என்ற சொல்லுக்கு உரியவர்கள் நம்முடைய நபிகள் நாயகம் ஒருவர்தான். இது என்னுடைய முடிபு. ஞானி ஒருவன் பின்னாலே வரப் போகின்ற செய்திகளை முன்னாலே அறியும் ஆற்றல் படைத்தவத்தவன். அந்தப் பேராற்றல் நாயகம் அவர்களுக்கு முழுதும் இருந்தது.

பெண் கல்வி

இப்பொழுது பாருங்கள். அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்று இன்னும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே ஆணுக்கும், பெண்ணுக்கும் படிப்புத் தேவை என்று நாயகம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். அவர்கள் தீர்க்கதரிசியா இல்லையா என்று எண்ணிப் பாருங்கள்.

சொத்துரிமை

பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்ற சட்டம் இப்பொழுதுதான் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டுமென்று சட்டம் செய்திருக்கிறாரே அவர் தீர்க்கதரிசியா அல்லவா என்று எண்ணிப் பாருங்கள்.

விதவை மணம்

விதவைகளுக்கு மறுமணம் தேவை என்ற சட்டம், சட்டசபையில் இன்றைக்கு உள்ளே போகிறது, வெளியே வருகிறது. இன்னும் இழுபறியாக இழுத்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே, விதவைகளுக்கு மறுமணம் தேவையெனச் சட்டம் செய்திருக்கிறாரே! அவர் தீர்க்கதரிசியா அல்லவா? என்பதை எண்ணிப் பாருங்கள்.

மது விலக்கு

நம் நாட்டில் இப்பொழுதுதான் மதுளிலக்குச் சட்டம் நிறைவேறியது. அதுவும் மாறி மறைந்து கொண்டிருக்கிறது. ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே மது விலக்குச் சட்டம் நிறைவேற்றியிருக்கிறார் என்றால், அவர் தீர்க்கதரிசியா அல்லவா? என்பதை எண்ணிப் பாருங்கள்.

ஆலயப் பிரவேசம்

நம் நாட்டில் இராஜாஜி அவர்கள் காலத்தில்தான், ஆலயப் பிரவேசச் சட்டம் செய்து கோவில்கள் அனைவருக்கும் திறந்து வைக்கப் பெற்றிருக்கின்றன. ஆனால் நாயகம் அவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்பே, பள்ளி வாசல்களுக்குக் கதவுகளே இல்லாமல் எல்லோருக்கும் திறந்து வைக்கச் செய்திருக்கிறார்கள். அவர்கள் தீர்க்கதரிசியா? அல்லவா என்பதை எண்ணிப் பாருங்கள்.