நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்/இஸ்லாத்தின் வளர்ச்சி

விக்கிமூலம் இலிருந்து

7. இஸ்லாத்தின் வளர்ச்சி

கி. பி. 611ல் இஸ்லாம் சமயத்தைச் சீர்திருத்தி, அதன் ஒரே தலைவராகத் தனித்து நின்றவர் நாயகம் அவர்கள், 614ல் நாற்பது பேர் சேர்ந்தனர். 624ல் அதன் எண்ணிக்கை முந்நூறாகி, 625ல் ஆயிரமாக உயர்ந்து: 634ல் ஒரு இலட்சம் பேராகக் காட்சியளித்தனர். இன்று இஸ்லாமிய சமயத்தினர் எண்ணிக்கை தொண்ணூறு கோடியாக உயர்ந்திருக்கிறது. அதாவது, இன்றைய உலக மக்களின் எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பங்கு. நூறு மக்களில் 20 பேர் இஸ்லாமிய சமயத்தைத் தழுவி நிற்பவர். இது நபிகள் நாயகத்தின் பேராற்றலையும், இஸ்லாமிய சமயத்தின் தத்துவத்தையும் விளக்கிக் காட்டுவதாகும்.


8. கடைசி நபி

இஸ்லாமியப் பெருமக்களின் அழுத்தமாள கொள்கைகளில் ஒன்று எம்பெருமான் முகம்மது நபி அவர்களைக் கடைசி நபி எனக் கருதுவது. நபி என்ற சொல்லுக்கு இறைவனுடைய தூதர் என்று பொருள்.

மக்களுக்கு நன்மை செய்ய ஆண்டவன் விரும்பி, அவ்வப்போது தன் திருத்தூதர்களை அனுப்புவது வழக்கம் என்றும், இந்து சைவ, வைணவ, பெளத்த, சமண, கிறிஸ்தவ சமயங்களில் காணப்படுகின்ற, கூறப்படுகின்ற அவதார புருஷர்கள் என்பவர்களெல்லாம், உண்மையில் இவ்வுலகுக்கு இறைவனால் அனுப்பப்பட்ட திருத்தூதர்களாகிய நபிமார்களே எனவும், இஸ்லாம் ஒப்புக் கொள்கிறது. இது, அதன் பரந்து விரிந்த மனப்பான்மையையே காட்டுவதாகும். இம்முறையில் இறைவனால் கடைசியாக அனுப்பப்பட்ட திருத்தூதர் முகமது நபி அவர்கள் என்பதே இஸ்லாமியக் கோட்பாடுகளில் தலை சிறந்தது. இவ்வுலகில் இதுவரை தோன்றியுள்ள எல்லா நபிகளுக்கும்