பாரதியின் இலக்கியப் பார்வை/மணி மாலை

விக்கிமூலம் இலிருந்து

மணி மாலை

மணிகள் ஒன்பது வகைப்படும். மணிமாலைகளில் சிறந்தது ஒன்பான் மணிமாலை (நலமணிமாலை).சிலம்பு அதனினும் ஒரு படி மேலோங்கிய மாலை. இம்மாலையின்மணிகளை ஆங்காங்கு தனித்தனியே கண்டோம். ஒரு தொகுப்பில் தொடர்ந்து காண்பது மாலையாகக் காண்பதாகும்.

அதனையும், சிலப்பதிகாரத்தில் கோக்கப்பட்டுள்ள வரிசையில் மாலையாகக் காணலாம்:

“மணியே எங்கோ” சிலம்பு: காதை: 2 அடி:
“ஒரு மல் மணி”
“திரு மா மணி”
“மா மணிக்கொழுந்து”
“முத்தக மணி”
“மணியுடை அரி”
“அணி மணிக் காற்சிலம்பு”
“தெரித்தது மணி”
“மணி கண்டு”
“திருத்தகு மாமணிக் கொழுந்து”
—இவை சிலம்பில் ஆங்காங்கே

ஒளிர்ந்தாலும் இவ்வாறு கோத்துக் காணத்தக்கவை. கோத்த மணிமாலையில் எத்துணை மணிகள் உள்ளன. எண்ணினால் பத்து மணிகள் ஒளிரும். ஒன்பான் மணிமாலை சிறந்ததுதான். அதற்கும் ஒரு தனி மணியாக-தொங்கும். பதக்கம் ஒன்று வேண்டாவா? கண்ணகியார் தமிழப் பெண்களின் கற்புப் பதக்கம் ஆவாள். அவரையும் பதக்கமாக ஒன்பான் மணிமாலையில் இணைத்து ‘பதிண்மணிமாலை’யாகச் சிலப்பதிகாரத்தைக் கொள்ளலாம்.

இப்படி ஒரு பார்வையைப் பாரதியார் சிலப்பதிகார இலக்கியத்தில் ஒட்டியிருக்கலாம்; ஒட்டாமலும் இருக்கலாம்.

மேலே சிலப்பதிகாரத்தில் தொகுக்கப்பட்ட மணி அமைப்புகளை இளங்கோவடிகளார் திட்டமிட்டு அமைத்துள்ளார் என்று உறுதியாகச் சொல்ல இயலாது என்றாலும். அப்படியொரு அருமையான அமைப்பு உள்ளது. 

சான்றோர்தம் கைப்போக்கில் பல அருமையான அமைப்புகள் திட்டமிடப்படாமலே பதிந்துவிடும். அவ்வகையில் இவ்வமைப்பைக் கொள்ளலாம்.

இதுபோன்றே, பாரதியின் நேர்முகப் பார்வை இவ்வகையில் பதியாது போயிருப்பினும், அவரது உள்ளுணர்வு பார்வை திட்டமின்றியே கண்டிருக்கும். அஃது அவரது மேதைக்குச் சான்று. ஆயினும் அவரது உணர்வில் இவ்வமைப்பு அறிந்தோ அறியாமலோ பட்டமையால்தான் சிலம்பைப் பற்றிப் பாட எழுந்ததும் உணர்வைக் குழைத்த பொருளில்,

“நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” -என்று தமது நெஞ்சைப் பறிகொடுத்துப் பாடினார். அவ்வாறு நெஞ்சை அள்ள வைத்தது இம்மணிமாலை அமைப்பாகவும் இருக்கும் என்பதை குறிப்பது போன்றுதான் அடுத்தெழுந்த தொடர்

“... ...............சிலப்பதிகாரம்
என்றோர் மணி ஆரம் படைத்த தமிழ்நாடு”-என்று அமைந்தது போலும்.

எனவே, “மணி ஆரம்” என்ற தொடர் ஒரு திறவு கோலாக இங்கு சிலப்பதிகார மணிப்பேழையைத் திறக்க வைத்து அணிந்து மகிழ வைக்கின்றது. பாரதியார் கோத்த மணி என்னும் சொல் சிலம்பில் இத்துணைக் கருத்துக்களையும் எண்ணத் தூண்டியது. இவ்வகையில் பாரதியார் -சிலப்பதிகாரத்திற்கும் ஒருவகையான திறவுகோலர் ஆகிறார்.

சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்களில் மட்டுமன்று எளிய நாடோடி இலக்கியங்களிலும் பாரதியார் நெஞ்சை அள்ளிவிடுபவர். அவற்றில் அமைந்த சொற்சித்திரங்களையும் சுவைப்பவர்.

ஏற்றப்பாட்டு முதலிய நாட்டுப் பாடல்களைக் கேட்டு அவர் கொண்ட உணர்வை,

“நெஞ்சைப் பறிகொடுத்தேன்”
-எனப் பாடினார். அவரது

இலக்கிய உணர்வைப் பொருத்தவரை பேரிலக்கியங்கள் போன்றே. நாட்டிலக்கியங்களும் நெஞ்சத்தை ஈர்த்தன; கவர்ந்தன: அள்ளின; பறித்தன.

நாட்டுப்பாடல்களின் இசையில் ஒன்றிய நேரத்திலேயே அவற்றில் அமைந்த இனிய சொற்களிலும் ஈடுபட்டார். அவற்றின் கவிதைப்பாங்கை நோட்ட மிட்டிருக்கின்றார். அவை, “கொச்சைச் சொற்களையும்” கொண்டிருந்தாலும்

“கொச்சை மொழிகளும் ரசக் குறைவும் மலிந்த பாட்டுக்களென்று சொன்னோம். ஆனாலும். ஒரு கூடைப் பதரில் ஒருளக்கு அரிசியகப்படும். அதை நாம் இழந்துவிடக் கூடாது.”
(பெண்ணின் பாட்டு கட்டுரையில்)
—என அவற்றிலும் சுவை கண்டார்.

ஒரு சிறு அளவு இலக்கியப் போக்கு தென்படினும் அதனையும் இழந்துவிட மனமில்லாதவர் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

எளிய பாடல்கள் என்று கவனமின்றிக் கேட்டுவிடக் கூடாது. அவற்றையும் இலக்கிய உணர்வோடு பார்க்க வேண்டும் என்பது அவரது கோட்பாடு. “பெண்ணின் பாட்டு” என்னும் அக்கட்டுரையிலே,

“கவிதைத் தேட்டம் உடையோர் நமது பெண்களின் பாட்டைக் தேடிப் பார்த்தால், சிற்சிலவிடங்களில் நல்ல கவிதை கிடைக்கும்.

“நலங்குப் பாட்டு, கும்மி முதலியவற்றிலேகூடச் சில இடங்களிலே முத்துப் போல வார்த்தைகள் அகப்படும். தொழிற்பெண்களின் பாட்டு மிகவும் ரசமானது; சந்தமும் இன்பம். ஒன்றுக்குப் பாதி நல்ல கவிதை.”
-என்றெழுதினார். இதுகொண்டு
நாட்டுப் பாடல்களாம் எளிய பாடல்களையும் அவர் இலக்கிய நோக்கில் கண்டதை உணரலாம். அவற்றிலும் சொற்களைச் சுவைத்து “முத்தான” சொற்கள் என்றார். கவிதைப் பாங்கையும் கண்டார்.