பாரதியின் இலக்கியப் பார்வை/இலக்கியத் திறவுகோல்

விக்கிமூலம் இலிருந்து
பாரதியின் இலக்கியப் பார்வை



இலக்கியத் திறவுகோல்.


நிலவின் ஒளியில் நித்திலத்தைப் பிசைந்து, முல்லை இதழின் மென்மையைக் குழைத்து உருவாக்கிய குழந்தை எனலாம். அத்தகைய ஒரு குழந்தையைத் தன் மருங்குலில் தாங்கி நின்றாள் ஒரு சிறுமி. இடைக்கு மேல் அவளது மெல்லுடல் ஒசிந்திருந்தது. எல்லா வகையாலும் அவள் அந்தக் குழந்தையின் அக்கையே எனலாம். குழந்தையினது தலை அக்கையின் தோளை நோக்கிச் சாய்ந்த வண்ணமிருந்தது. பிஞ்சுக்கழுத்தின் நெளிவில் பொன்னிற வாழைக் குருத்தின் புன்னகை ஒளிர்ந்தது. முகத்தின் மலர்ச்சி குவியத் தொடங்கித் தூக்கத்திற்குப் பாயிரம் பாடியது. கண்களில் தூக்கத்தின் நிழலாடியது. அதில் கவர்ச்சியின் இழை யோட்டம் ஆட்சி செய்தது.

அப்பக்கம் வந்த ஒரு தாய் நின்று கண்டாள்; தன்னை மறந்து ஒரு தாலாட்டுப் பாடினாள். தொடர்ந்து வந்த ஒரு தந்தையின் கைகள் தாமே உயர்ந்தன; தூக்கத்தை ஊக்கி விடுவது போன்று குழந்தையினது முதுகைத் தடவ முனைந்தன. தந்தையுடன் வந்த ஒரு குழந்தை தந்தை மேல் சாய்ந்து தூக்கத்தின் குறியைக்காட்டியது. மறைந்து வந்த கீழ்மகன் ஒருவன் அக்குழந்தையின் தூக்கம் கலையக் கூடாதே என்ற புதுஉணர்வுடன் ஒதுங்கி மெல்ல நடந்தான்.

எதிலோ உள்ளத்தைச் சுற்றவிட்டவாறே வந்த ஒரு கவிஞன் அக்குழந்தையைக் கண்டதும் உணர்வையெல்லாம் மீட்டி,


“வண்ணச் சிறுவிழி வாட்டமிதோ? - வான்
வட்டிலில் வெண்முகில் ஆடைபடும்
தண்ணில வாகிய பாலமுதோ? - தேன்
தண்டமிழ்ப் பாடலின் தண்ணிழலோ?”

- என வாய்விட்டுப் பாடினான்.

‘வடிவழகை என்னென்பேன்! உள்ளத்தின் அடித் தளத்தைக் கல்லிக் கிளுகிளுக்க வைக்கிறதே’ - என்றொரு கலைஞன் பேசினான்.

இக்குழந்தையின் எழிலையெல்லாம் ஓவியமாக்குவேன். ஆனால், அக்கண்களில் தூக்கம் நிழல் ஆடி வட்டமிடுகிறதே; அதை எவ்வாறு, அவ்வாறே வரைவேன்’ எனத்தன் தோல்வியை முன்கூட்டியே ஒப்புக்கொண்டு, நுணுக்கத்தை உணர இயலாமல் தடுமாற்றத்தோடு பேசினான் ஓர்ஓவியன்.

கண்ணின் கடையைச் செதுக்கிய உளி கூர்ந்தட்டை உருவினது. இமைகளை வடித்திடக் கையாண்ட ஊசி வைரம் பதிந்தது. வெள்ளை விழிகளில் பாவிய உளி அதே வெண்சலவைக் கல்லால் ஆகியது. இந்தச் சலவைக் கல் லும் இணைந்து நின்று ஒத்துழைத்துள்ளது. இவை கொண்டுதான் இக்குழந்தை வடிவை வடித்த சிலைக் கலைஞன் தூக்க நிழலைக் கண்களில் தூவிவைத்துள்ளான், - என்றுமுடித்தான், கூர்ந்துநோக்கிய ஒரு சிலைக்கலைஞன்.

ஆம், அஃது ஒரு சிலை. அதிலும் பளிங்குக் கல்லால் ஆக்கப்பட்ட சிலையே. சென்னை அடையாற்றங்கரையில் ‘கலை நிலைய’த்துச் சோலைக் கூடத்தில் உள்ள ஒரு சிலை அது. காண்போரை அவரவரது தன்மைக்கேற்ப இளக வைப்பதாக அது அமைந்திருந்தது.

சிலைக் கலையின் உயிரோட்டத்தில் பழகிய ஒரு கலைஞன் அதை வடித்தான். சிலைக்கலையின் நாடித்துடிப்பறிந்த ஒருகலைஞன் அதனைக் கலைப்பாங்கோடு உணர்ந்து நோட்டம் கூறினான். ஏனையோர் சுவைக்கத்தான் முடித்தது; உள்ளத்தை அள்ளிக் கொடுக்கத்தான் முடிந்தது.

ஒரு சிலைக் கலைஞனால்தான் முந்தையச் சிலைக் கலைஞனின் உள்ளத்தைத் தொட்டுப்பார்த்து, உணர்ந்து, உண்மையான நோட்டங் கூற முடியும். இஃது எல்லா வகைக்கும் பொருந்தக் கூடியதே.

தாய்மையைத் தாய்மையால்தான் உணர்ந்திடமுடியும். பருவத் துடிப்பின் ஆழத்தைச் சிறுவர் சிறுமியரோ காண்பர்? இசை நுணுக்கத்தை இசை நுண் கலைஞனால்தான் ஓர்ந்து கொள்ளமுடியும். அன்றிற் பேடையின் முணகலுக்கு அன்றிற் போத்துத்தானே பொருள் கூறும்? இவையொப்ப ஒரு கவிஞனின் இலக்கியப் படைப்பின் நுண்மையை மற்றொரு கவிஞனால்தான் தெளிவாகப் படம் பிடிக்கமுடியும். இஃது அத்துணைக்கத்துணை பேருண்மை.

இப்பேருண்மையைக் கருவியாகக் கொண்டு ஓர் இலக்கியத்தின் நுண்மைப் பொலிவை நுகர்ந்து உவக்கலாம்; உண்மைச் சுவையை உண்டு களிக்கலாம்.

இதற்கும் ஒரு கவனம் வேண்டும். அக்கவனம் கருவியைத் தேர்ந்தெடுப்பதில் செலுத்தப்படவேண்டும். எண்ணிய செயலுக்கேற்ற நுண்ணியதும் திண்ணியதுமான கருவியாலன்றோ எடுத்த செயல் பெருமையடையும்? தகுதி நிறைந்த கருவியைக் கண்டுகொண்டு தக்கவாறு பயன்படுத்தினால் செயல் எளிதிலும் கைக்கூடும். திருவள்ளுவப் பெருந்தகையும்[1] ‘காலமறிந்து செயலாற்றுபவன் தக்க கருவி யால் செய்யின் செய்வதற்கு அருமையான செயல்களும் உளவோ’ என்றன்றோ அறிவுறுத்தினார்!

அதற்கேற்ப, ஒரு பேரிலக்கியத்தின் அமைப்பையும், அழகையும், செஞ்சுவையையும் காண உரிய கருவியொன்றைத் தேர்ந்தெடுக்கலாம். முன்னர்க் குறித்தாங்கு, அக்கருவி ஒரு கவிஞனாக அமைவதே தெளிவு.

ஒரு கவிஞன் மற்றொரு பெருங் கவிஞனின் தோட்டக் காரணாகலாம். அவனே அவ்விலக்கியத்தின் திறவுகோலாய் நின்று உரியவற்றைத் தெளிவாகத் திறந்து அறிவிப்பான்.

நாமும் அத்திறவுகோல் கவிஞன் துணைக் கொண்டு இலக்கியப் பேழையைத் திறந்து அதனுள் நிறைந்து மிளிரும் மணியணிகளை அணிந்து அழகுறலாம்; கணி அமுதைச் சுவைத்துச் செம்மாக்கலாம்.

தமிழகத்து இறவா இலக்கியங்களை ஈன்றோருள் பலர் கால எல்லைக்குள் அகப்படாதவர். பலர் அகப்படுவார் போல் வேடிக்கை காட்டுபவர். பலர் கால எல்லையில் நின்று பேசுபவர். யாவராயினும் அவரவர்க்குப் பின்னர் தோன்றிய படைப்பாளர்கள், முந்தையோர் எவர்க்கேனும் ஒரு திறவுகோலராக விளங்கினர்.

மணிமேகலையில் ஆபுத்திரனைப் படைத்த தண்டமிழ் ஆசான் சாத்தனார் திருவள்ளுவப் பெருமானுக்கு ஒரு திறவுகோலர். இவரேபோல் வள்ளுவப் பெருந்தகையார்க்குப் பின் வந்தோர் எல்லாரும் அத்தமிழ்த் தந்தைக்கு ஒவ்வொரு வகையான திறவுகோலராக முந்திக் கொண்டனர்.

சங்க இலக்கிய அகத்துறைப் புலவர்களுக்கு முத்தொள்ளாயிர ஆசிரியர் ஒரு திறவுகோலர். தேவார மூவர்க்கு ஒரு சேக்கிழார். வாதவூர் அடிகளுக்கு ஒரு வடலூர் வள்ளலார். கம்பர்க்கும், கச்சியப்பர்க்கும் கரையிலாப் புலமையேறுமீனாட்சிசுந்தரனார். கவிமாமன்னர்பாரதியார்க்கு ஒரு பாவேந்தர் பாரதிதாசனார். சுருக்கங் கருதி இவ்வளவில் நிறுத்தலாம். ஆயின், உண்மைப் பட்டியல் பல்கிப் பெருகும்.

இவ்வகையே, கவிமன்னர் பாரதியாரைக் கூர்ந்து நோக்கினால் அவரும் ஒரு தேர்ந்த இலக்கியத் திறவு கோலராய் மிளிர்கிறார்.

பாரதியாரின் தமிழ்ப்பற்றும், இலக்கியப் பேரார்வமும் ஓர்ந்து கண்டு மகிழத்தக்கவை. அவர் தமக்குக் கிட்டிய தமிழ் இலக்கியங்களை ஆர்வ உள்ளத்தோடு அணுகினர்: அமுதச் சுவைகளை நுகர்ந்தார்; நுகர்ந்தவற்றை எண்ணி எண்ணிப் பெருமிதங்கொண்டார்.

தான் சுவைத்த இலக்கியங்களை உணர்வு என்னும் சல்லடையால் சலித்துச் சலித்துக் குவித்தார். குவித்தவற்றில் தேர்ந்து தேர்ந்து எடுத்தார். எடுத்த வற்றில் தட்டித் தட்டிப் பொறுக்கினார். பொறுக்கியவற்றில் சுண்டிச் சுண்டி ஏந்தினார். மூன்று பேரிலக்கியங்களைக் கொண்டார். அப்பொன்மணிப் பேழைகள் திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் என்னும் மூன்றுமாம். அவற்றை நோக்கி நோக்கி அகமகிழ்ந்தார். பன்னிப் பன்னிப் பேசிப் பூரித்தார். சுவைத்துச் செம்மாந்தார். இவைகள் நத்தம் பைந்தமிழ்ப் பேழைகள் என்று பெருமிதங் கொண்டார்.

இவ்வாறு அவர் நிலை கொள்ளாப் பெருமிதங்கொள்ளக் காரணம், அவள் சுவைத்த வழி உணர்வு வழியாயமைந்ததே அதனினும், அவ்விலக்கியங்களைப் படைத்த புலமைச் சான்றோரது உள்ளத்தில் புகுந்து நின்று அவரவரது இலக்கியங்களை உணர்ந்ததே.

இதனை அவர் பெருமித உணர்வோடு பேசத்துவங்குவதை “யாம் அறிந்த” என்ற தன்னிறைவுத் தொடரால் அறியலாம்.

இலக்கியங்களை ஈந்த புலவரது உள்ளத்தே நின்று இலக்கியங்களைக் கண்டவர் பாரதியார் என்பதை யாமறிந்த, நூல்களிலே’ என்று தொடங்காது “யாமறிந்த புலவரிலே” என்று தொடங்குவதனின்றும் உணரலாம். தொடர்பவர் கம்பரையும், வள்ளுவரையும் இளங்கோவையும் உள்ளத்திலிருந்து நாமுனையிலே கொண்டுவந்து அமர்த்தி இந்த உலகை ஒரு சுற்றுப் பார்த்தார்.

தாம் கண்டறிந்த மேலைநாடு, கீழைநாடு, வடநாட்டுப் புலவர்களில் மேம்பட்டவர்கள் எல்லாரும் தென்பட்டனர். அவர்களை இம்மூவரோடும் ஒப்பிட்டுப் பார்த்து ஒதுக்கி விட்டுப் பேசினார்.

“யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல்
பூமிதனில் யாங்கனுமே பிறந்ததிலை”

-என்று முழங்கிப் பாடினார். மூலை முடுக்கெல்லாம் சென்று மூட்டிய இம் முழக்கங் கேட்டு ஒரு மூலையிலிருந்து ‘என்ன’ என்று ஒரு முனகல் கேட்பதாக உணர்ந்தார் போலும். உடனே ‘உண்மை’ என்று ஒரு முத்திரை வைத்தார். ‘அப்படியோ!’ என்றொரு மறுப்புக் குறியைக் கண்டார் போலும், ‘வெறும் புகழ்ச்சியில்லை’ என்று அந்த முத்திரைக்கு அரணிட்டு முடித்தார்.

உலகப் பார்வையை இழுத்து உள்நாட்டைப் பார்த்தார் பெருமிதமெல்லாம் குலைந்தது. அம்மூன்று புலவர்க்கும் அருந்தமிழர்க்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்தார்; தலை கவிழ்ந்தார். ‘அந்தோ’ இப்பெரும் புலவர்கள் வழங்கிய பேழைகளின் அணிகளை அணுகாமலும், அணியாமலும், மகிழாமலும் உள்ளனரே' என்று கவன்றார். அவ்விலக்கியங்களின் சுவையை வாயாரப் பேசுகின்றிலரே; செவியாரக் கேட்கின்றிலரே; கண்ணாரக் காண்கின்றிலரே என்று ஏங்கினார். தானும் அவர்களோடு சேர்ந்து நிற்பவராய்க் கொண்டு பாட்டைத் தொடர்ந்தார்.

“ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம்”
-என்று குரல் தாழ்த்திப் பாடினார்.

இவ்விடத்தில் தான் அவர் இலக்கியத்தின் திறவுகோலராக வெளிப்படுகிறார். அவர் புகழ்ந்த புலவர்களையும் அவர்கள்தம் இலக்கியங்களை அணுகாதவர்களையும்அறிமுகப் படுத்தியுள்ள முறையைப் பொதுவாகவும், சிறப்பாகவும் சிந்தித்தால் ஓர் இலக்கியத் திறவுகோல் கிடைக்கும். ஓர் இலக்கியத்தின் முழுப்பயனையும் பெற அதனை முதலில் வாயாரப் பேசி, அடுத்துச் செவிகுளிரக் கேட்டுப் பின் கண் குளிரக் கண்டு பயின்று சுவைக்க வேண்டும் என்ற குறிப்பை ‘ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்’ என்பதனுள் வைத்துள்ளார். இக்குறிப்பு இலக்கியங்களைப் பொதுவாக அணுகுவதற்கும், சுவைப்பதற்கும் அவர் கொடுக்கும் திறவுகோல்.

இதற்குமேலும் அவர்தம் சொல்லமைப்புகளைக் கூர்ந்து நோக்கினால் மற்றொரு திறவுகோலையும் தருவார்.

மூன்று புலவர்களை அறிவித்த அவர் அம் மூவரை அணுகாதவர்களை மூவகையினராக அறிவித்தமையைக் கூர்ந்து நோக்கவேண்டும். அவர்களை அமைத்துள்ள வரிசையை நிரலே காணவேண்டும். கம்பரை அணுகாதவர் ஊமையராம்; வள்ளுவரை அணுகாதவர் செவிடர்களாம்; இளங்கோவை அணுகாதவர் குருடர்களாம்.

கம்பரது கலை இலக்கியத்தைச் சுவைத்துப் பயன் கொள்ள அவ்விருத்தங்களை வாயாரப் பாடவேண்டும் பேசவேண்டும் என்கிறார். வள்ளுவரது அறவுரை இலக்கியத்தைச் செவியாரக் கேட்டு அக்கேள்வியறிவால் வாழ்வைச் செம்மை செய்து கொள்ளவேண்டும் என்கிறார். இளங்கோவடிகளது நாடக இலக்கியத்தை மனக்கண்குளிரக் கண்டு மகிழ வேண்டும் என்கிறார்.

இந்நூல்களை இவ்வாறு பயின்று பயன் கொள்ளாமல் தமிழர் ஊமையும் செவிடும் குருடும் ஆகிக் குறை மனிதர் ஆயினர்; நிறை மனிதத் தன்மையை இழந்தனர்; இழந்து ‘பாமரராய், விலங்குகளாய்’ ஆயினர் என்று கண்டார்.

இவ்வைைகயாய்த் தமிழர் பான்மை கெட்டுப் போதல் கூடாது; நலம்பெற வேண்டும் என்னும் தனது ஆர்வத்தினைத் தமிழர்க்கு உணர்த்த எண்ணி மிகக் கனிவோடு,

“ஒரு சொற் கேளிர்”
- என்று வேண்டுகின்றார்.

வேண்டி, சேமம்- நலம்பெற வழிசொல்வாராய்,

“சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ்முழக்கஞ் செழிக்கச் செய்வீர்"
-என முடித்துக் காட்டுகிறார்.

‘தமிழர் நலம்பெற வேண்டுமென்றால் தமிழ் இலக்கியங்களைப் பயில வேண்டும்; பயின்றவற்றைத் தெருவில் உள்ளோர்க்கெல்லாம் பயிற்றிப் பரப்பு வேண்டும்; பரப்பித் தமிழ் முழக்கத்தை எழுப்ப வேண்டும்’ என்பது பாரதியின் பேரவா. இவ்வொரு பாடலின் முற்பகுதியில் இலக்கியத் திறவுகோலராய் முந்துகின்ற பாரதி, பிற்பகுதியால் தமிழர் தம் வாழ்வினுக்குத் தாமே அமைத்துக்கொண்ட பூட்டைத் திறக்கும் திறவுகோல் தரும் வாழ்வியல் திறவுகோலர் ஆகிறார்.


  1. அருவினை யென்ப உளவோ, கருவியான்
    கால மறிந்து செயின்.

    - திருக்குறள் : 488.