அறிவுக் கதைகள்/திரைப்படங்கள்

விக்கிமூலம் இலிருந்து

28. திரைப்படங்கள்

அண்மையில் வந்த திரைப்படத்தில் ஒரு காட்சி, வில்லன் ஒருவன் பதக்கத்தைப் பறித்துக்கொண்டு ஒடுகிறான். பறிகொடுத்த நாயகன் எப்படி மீட்பது என்று யோசித்தான அன்று இரவு வில்லன் வீட்டில் சன்னல் வழியே கம்பியைவிட்டுத் தொங்கிய சட்டையை இழுத்தான். அதில் பதக்கம் இருந்தது; மகிழ்ச்சியாக எடுத்துக் கொண்டு வீடு திரும்பினான்—இதுதான் காட்சி.

அடுத்து ஒரே நாள் இரவில் சென்னை தியாகராய நகரில் பல இடங்களில் திருட்டு—எப்படி? கம்பிகளை சன்னல் வழியே விட்டு பேன்ட், சட்டை, பட்டுப்புடைவை விலை உயர்ந்த துணிமணிகள் எல்லாம் கனவு போயின. இப்படித்தான்—

சுமார் 85 ஆண்டுகட்கு முன்பாக, மேலை நாட்டிலே லண்டன் மாநகருக்கு அருகிலே ஒரு பெரிய ரயில் கொள்ளை நடந்தது. அதில் சுமார் 40 பேர் குதிரைமீது வந்து இரயிலை வழிமறித்து நிறுத்தித் துப்பாக்கியைக் காட்டிப் பயணிகளிடம் உள்ள பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

இரயில்வே போலீசார் எவ்வளவோ முயன்றும் ஐந்தாறு மாதங்களாகியும் துப்புத் துலங்கவில்லை. கொள்ளையரையோ, பொருள்களையோ கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் மிகவும் கஷ்டப்பட்டு எப்படியோ போலீசார் அவர்களைப் பிடித்து வழக்குத் தொடர்ந்தனர்.

அந்த நாற்பது கொள்ளையரில் அனைவரும் 18 முதல் 21 வயதிற்குட்பட்ட இளைஞர்களே! அவர்களில் வசதியான குடும்பத்துப் பிள்ளைகள், படித்தவர்கள், செல்வச் சீமானின் பிள்ளைகள், ஏன் வழக்கறிஞரின் பிள்ளையும் இருப்பதைக் கண்ட நீதிபதி, பெருவியப்பு அடைந்தார். அவர்களை விசாரிக்கவும் செய்தார்.

“நீங்கள் பரம்பரைத் திருடர்களல்ல, திருடித்தான் வாழவேண்டும் என்ற நிலையில் உள்ளவர்களும் அல்ல. அப்படி இருக்கும்போது, எப்படி உங்களுக்கு இந்த எண்ணம் உணடாயிற்று?” என்று கேட்டார் .

அதற்கு அவர்கள், “அண்மையில் புகழ்பெற்ற ரயில் கொள்ளை’ என்ற படக்காட்சியைப் பார்த்தோம், அதிலிருந்து நாமும் அப்படிக் செய்தால் என்ன? வெற்றி பெற முடியுமா? என்று சோதித்துப் பார்த்தோம். வெற்றியும் பெற்றோம்” என்றனர். இதிலிருந்து நாடு திருந்த வேண்டுமானால் முதலில் நமது திரைப்படங்கள் திருந்தவேண்டும் என்பது பல்வேறு சீர்கேடுகளுக்குத் திரைப்படங்களும் காரணமாகின்றன என்பது நன்கு தெரிகிறது. இதற்கு என்ன செய்யலாம்!