அறிவுக் கதைகள்/சவாரிக் குதிரை

விக்கிமூலம் இலிருந்து
47. சவாரிக் குதிரை

இங்கிலாந்தை ஆண்ட மகாராணி விக்டோரியா வுக்கு ஒரு நாள் ஒர் ஆசை—தன் பேரனைத் (ஐந்தாம் ஜார்ஜு) தூக்கி மகிழவேண்டும் என்பது.

அதைப் பிறர் யாரேனும் பார்க்கப்படாதே என்ற அச்சம் வேறு இருந்தது. என் செய்வார்? சிறு குழந்தையைத் தூக்க ஆசை.

மகாராணியாயிற்றே! யாரும் இல்லாத நேரம், ஒரு நாள் தான் பேரனைத் தன் தலைக்கு மேல்தூக்கி வைத்துக் கொஞ்சத் தொடங்கினார்.

இதனை, அந்த அரண்மனை ஆள் எங்கிருந்தோ பார்த்துவிட்டான் மகாராணியிடம் ஒடோடி வந்தான்.

குழந்தையைத் தூக்கிய மகாராணி, கீழே வைப்பதைக் கண்டான்.

சொன்னான்— “உலகத்தை ஆளுகின்ற சக்கரவர்த்தியாக இருந்தாலும். தன் பேரக் குழந்தைகட்கு முதல் சவாரிக் குதிரை அவர்கள்தான்"—

என்று கூறி நகைத்தான்.

மகாராணியும் நகைத்தாள்!

இது பேரப்பிள்ளைகட்கும் பாட்டிக்கும் உள்ள தொடர்பைக் காட்டுகிறது. இப்பொழுதும் தன் பிள்ளைகளைத் தூக்கி மகிழாத பெற்றோர்கள் பலர், பேரப் பிள்ளைகளைத் துக்கி மகிழ்வதைக் காணலாம்.

—இது ஒரு சமுதாய அமைப்பு போலும்!