அறிவுக் கதைகள்/தலை தீபாவளி

விக்கிமூலம் இலிருந்து
20. தலைத் தீபாவளி

தலைத் தீபாவளிக்கு மகளையும் மாப்பிள்ளையையும் அழைக்கவந்த சம்பந்தியிடம். “உங்கள் மகளை மட்டும் இப்போது அழைத்துப் போங்கள். மாப்பிள்ளையைப் பிறகு அனுப்பிவைக்கிறோம்” என்றார் பையனின் தந்தை அவரும், தன் மகளுடன் புறப்பட்டுப் போய் விட்டார்.

பிறகு ஒருநாள். தந்தை தன் மகனை அழைத்து, “இப்போது நீ தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டுக்கு. சந்தோஷமாகப் போய் வா. “பெரியவர்களைக் கண்டால் வணங்கு” என்று அறிவுரை கூறி அனுப்பினார்.

அவனும் இது மறக்காமலிருக்க மார்பிலே குத்திக் கொண்டு மனப்பாடம் செய்துகொண்டே போனான்.

வழியில், ஒரிடத்தில், நாட்டாண்மைக்காரர் ஒருவர் பஞ்சாயத்தில் விசாரணை செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இவனையும், இவன் பேச்சையும் கேட்டு, “என்னினும் பெரியவர் யாரடா? ‘என்னைப் கண்டு அஞ்சடா”’ என்று சொல்லவே,

தந்தை சொன்னதை மறந்து, இப்படியே சொல்லிக் கொண்டு போகும்போது, வழியில் திருடர்கள் கூட்டம் ஒன்று, அவர்கள் களவாடிய பொருள்களைப் பங்கிட்டுக் கொண்டிருக்கும் சமயம், இவனைப் பார்த்துவிட்டார்கள். முதலில் பயந்த அவர்கள், பிறகு இவன் பேச்சைக் கேட்டுச் செம்மையாக உதைத்து, ‘“இதையும் கொண்டு வந்து வைத்து இன்னொன்றையும் கொள்ளையடிச்சு வரணும்”’ என்று அவர்கள் கூறினர்.

இப்போது, இதுவே அவனுக்கு மனப்பாடமாகச் சொல்லிக்கொண்டே சென்றான். அந்த வழியில் ஒரு கிராமத் தலைவருக்கு இரட்டைக் குழந்தை. அதில் ஒன்று விஷக் காய்ச்சலில் இறந்துவிடவே, அதைப் பாடையில் எடுத்து வந்து கொண்டிருந்தனர். இதையறியாத மாப்பிள்ளை, “இதையும் கொண்டு வந்து வைத்துவிட்டு, இன்னொன்றையும் கொண்டுபோகணும்” என்று சொல்வதைக் கேட்ட கிராமத் தலைவன் திகிலடைந்து, நன்றாக உதைக்கச் செய்து, “இன்னும் ‘விருத்தியாகணும்”’ என்று சொல்லச் செய்தான்.

இவனும் இப்படியே சொல்லிக்கொண்டு போக, அடுத்த ஊரில் மணப்பந்தல் ஒன்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. எல்லோரும் அதை அணைக்க முயலும்போது, இவன் மட்டும், இன்னும் விருத்தியாகணும்’ என்று கூறவே, அங்கிருந்தவர்கள் ‘“தண்ணீரை ஊற்றித் தடியால் அடிக்கச்”’ சொல்லாமல் இப்படிச் சொல்கிறானே என்று சொல்லி நன்றாக உதைத்து அனுப்பினார்கள்.

பிறகு அதையே திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டு சென்றான். அங்கு ஒரிடத்தில் குயவன் தன் மகனுக்கு மண்ணைப் பிசைந்து சட்டி பானை செய்யப் பழகிக் கொண்டிருந்தான். இவன் அங்குப்போய். ‘தண்ணீரை ஊற்றித் தடியால் அடிக்கணும்’ என்று சொல்ல, குயவனும் இவனை நையப் புடைத்து ‘“அரைப் படி முக்கால் படி, ஒரு படி”’ என்று பானைகளை சுட்டிக் காண்பித்தான்.

மிகவும் வேதனையுடன் ஒரு வழியாக மாமனார் ஊர் வந்து சேர்ந்தான். அங்கே ஆற்றங்கரையில் வழவழ. வென்று மழித்த தலையுடன் நாலைந்து பேர் வரிசையாக அமர்ந்து இறைவனை வழிபட்டுக் கொண்டிருக்கவும், உடனே, இவனுக்குப் பானை நினைவு வந்துவிட்டது. உடனே, ஒரு வாழை மட்டையை எடுத்து, ஒவ்வொருவரை யும், இது அரைப்படி இது முக்கால்படி, இது முழுப்படி என்று தட்ட ஆரம்பித்தான்.

இதை எதிர்பாராத அவர்கள், அலறிப் புடைத்து எழுந்து, அவன் செயலைக் கண்டு இரங்கி, “அடேய்? ‘பெரியவர்களைக் கண்டால் வணங்க வேண்டும்”’ என்று கூறினர்.

அப்போதுதான், இவனுக்குத் தன் தந்தை கூறியது நினைவுக்கு வந்தது. மறுபடியும் அதைச் சொல்லிக் கொண்டே மாமியார் வீடு போய்ச்சேர்ந்தான்.

மருமகனது பேச்சையும், அவனது உடம்பையும் கண்ட மாமனார்க்கு, அவனது “அறிவுக் கூர்மை” நன்கு விளங்கியது. பெரிதும் வருந்தினார்.