அறிவுக் கதைகள்/பெண் கேட்டல்

விக்கிமூலம் இலிருந்து
11. பெண் கேட்டல்!

பெரிய கடைவீதியில் நடந்து போய்க்கொண்டிருந்த ஒருவரிடம் மற்றொருவன் சென்று குறுக்கிட்டு, என்னவோ கேட்டான். அவர் நின்று, ‘பளிர்’ என்று அவன் கன்னத் தில் ஓங்கி அறைந்தார்.

அதைக்கண்ட மற்றவர்கள், ‘ஏன் ஐயா, அவரை அடிக்கிறீர்கள்?’ என்று கேட்டனர்.

அதற்கு அவர், ‘இவன் என்ன சாதி? நான் என்ன சாதி இவனுக்கு என்ன (அந்தஸ்து) தரம்? இது என்ன இடம்? வீதியில் போய்க் கொண்டிருக்கிற போதா திடீரென்று வந்து பெண் கேட்பது?’—என்றார்.

கூடியிருந்தவர்கள், அடிப்பட்டவனை நோக்கி, “ஏம்பா, இம்மாதிரித் தவறு செய்யலாமா? நம் வீட்டுப் பெண்களுடன் அவர் வீட்டுக்குச்சென்று கேட்கிறது என்ற ஒருமுறை இருக்கிறதே! இப்படி நடுரோட்டில், சே!—நீ கேட்கலாமா?”—என்றார்கள்.

அடிப்பட்டவன் கன்னத்தைத் தடவிக் கொண்டே; “நான் அவரைப் பெண் ஒன்றும் கேட்க வரவில்லை, சட்டைப் பையில் இருக்கிற பேனாவைத்தான் எழுதக் கேட்டேன். ‘பேனா’ என்றிருந்தால்: இது நடந்திருக்காது— ஆங்கிலத்தில் ‘பென்’ (Pen) என்று கேட்டதனால் வந்த வினை இது.”

இது அவர் வினை மட்டுமல்ல. பிறமொழிச் சொற் களைத் தம்மொழியுடன் கலந்து பேசுவதால் இன்னும் வரும் வம்புகள் எவ்வளவோ!