எனது நண்பர்கள்/வழக்கறிஞர் வன்னிய சிங்கம்

விக்கிமூலம் இலிருந்து
 
வழக்கறிஞர் வன்னிய சிங்கம்

1911 –ஆவது ஆண்டை எவராலும் மறக்க இயலாது. ஏனெனில், அது ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்திக்குப்பட்டம் கட்டிய ஆண்டும். அறிஞர் திரு. கு. வன்னிய சிங்கம் அவர்கள் பிறந்த ஆண்டுமாகும், அவர்கள் பிறந்தநாள் அக்டோபர் மாதம் 18–ஆம் தேதி. திரு. வன்னியசிங்கம் அமரரான நாள் 1959–ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17–ஆம் தேதி வியாழக்கிழமை. தமிழகத்தில் வாழ்ந்து, தமிழ்த் தொண்டும் அரசியற்றொண்டும் புரிந்த தமிழ்த் தென்றல் திரு. வி. க. அவர்களும் அமரரான தினம் செப்டம்பர் மாதம் 17–ஆம் தேதி வியாழக்கிழமையே யாகும். இதிலும் சிறப்பாகத் தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் வேறு என்ன ஒற்றுமை தான் இருக்க முடியும்!

அவரது இவ்வுலக வாழ்வு 49 ஆண்டுகளே. அதிலும் அவர் அன்பு மனைவியுடன் வாழ்ந்த குடும்ப வாழ்வு 16 ஆண்டுகளே. அதிலும் அவருடைய அரசியல் வாழ்வு 12 ஆண்டுகள் மட்டுமே. அதிலும் அவருடன் எனது நட்பு ஆண்டுகள் 7 மட்டுமே. அதிலும் கடைசி முறையாக என்னிடம் அவர் பேசி மகிழ்ந்ததற்கும், அவருடைய வாழ்வு மறைந்ததற்கும் இடையில் உள்ள நாட்கள் 7 மட்டுமே.

அன்பர் திரு. வன்னியசிங்கம் அவர்கள் உயர்ந்த . அறிவாளி, சிறந்த எழுத்தாளி, நல்ல பேச்சாளி, அரிய கருத்தாளி, கடின உழைப்பாளி, சிறிய முதலாளி, பெரிய கொடையாளி என வாழ்ந்து வந்தவர். அவரது தன்னலமற்ற தொண்டு இலங்கையில் மட்டுமல்ல, இந்தியாவிலும் பரவியுள்ளது. அவரது நாட்டுப்பற்றும், இனப்பற்றும், மொழிப் பற்றும் பாராட்டக்கூடியது மட்டுமல்ல, ஒவ்வொருவராலும் பின்பற்றக் கூடியதும் ஆகும.

அன்னியராக ஆளவந்த போர்த்துக்கேசியருடன் அரசுரிமைக்குப் போராடிய பாழ்ப்பாணத்தின் கடைசித் தமிழ் மன்னன் சங்கிலியரசன் இராசதானி விற்றிருந்த நல்லூர் நகரம் கைப்பற்றப்பட்டதும், அம்மன்னன் இறுதியில் விரைந்து கோட்டை கட்டி ஆண்ட நகரமும் கோப்பாய். திரு வன்னிய சிங்கம் அவர்களை முதல் உறுப்பினராகத் தெரிந்தெடுத்ததும் கோப்பாய். அவருக்குப் பெண் வழங்கியதும் கோப்பாய். அதனால் அவர் இயல்பாகவே கோப்பாய் கோமகனானார்.

1947–இல் நடந்த முதல் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக முன்பு வெற்றி பெற்றதும் கோப்பாய் தொகுதியே. அந்த வெற்றி அவர் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து அவர் அமரராகும் வரைக்கும் 12 ஆண்டுகள் பாராளுமன்றத்தில், நாடு, மொழி, இன நலம் கருதி முழக்கிய உரிமை முழக்கம் இன்றும் நமது காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

1949ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18ஆம் நாள் தமிழ் மக்களால் மறக்க முடியாத நாள். அன்றுதான் மாவிட்டபுரத்தில் தமிழ்க்கடவுளான முருகன் முன்னிலையில், மும்மூர்த்திகள், தலைவர் செல்வநாயம், அறிஞர் நாகநாதன், அன்பர் வன்னியசிங்கம் ஆகியோரால் நடாத்தப்பெற்ற ஒரு பொதுக் கூட்டமே, தமிழரசுக் கட்சி தோன்றுவதற்கு மூலமாக அமைந்தது. திரு வன்னியசிங்கம் இல்லாவிடில் தமிழரசுக்கட்சி தோன்றியிருக்கவும் முடியாது. இந்த அளவு வளர்ந்திருக்கவும் முடியாது” என்று கூறுவது நானல்ல, அது தலைவர் செல்வநாயம் அவர்களது வாய்மொழி. 1952ல் நடந்த தேர்தலில் வடமாகாணத்திலிருந்து தமிழரசுக் கட்சியின் ஒரே உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அன்பர் வன்னியசிங்கம் அவர்களே. சில காலம் தமிழரசுக் கட்சி யின் பொதுச் செயலாளராக இருந்து பணியாற்றிய அவர், கட்சியின் தனலவராக 1953 ஆம் ஆண்டு தொடங்கி 1958ஆம் ஆண்டுவரை இருந்ததாக என் நினைவு. சிங்களறு போராட்டத்தில் அவர் ஆற்றிய தொண்டும் மறக்க முடியாததாகும்.

சரித்திரப் பிரசித்தி பெற்ற மாவிட்டபுரத்தின் மேற்குப் பகுதியான கொல்லங்கலட்டியில், நல்ல முறையில் நல்வாழ்வு வாழ்ந்து வந்த பெரும் வழக்கறிஞர் குடும்பத்திற் பிறந்த அவர், பொது வாழ்வில் புகுந்து பிறர் வாழ்வுக்காகத் தொண்டு செய்து இரு முறை சிறை வாழ்வும் வாழ்ந்திருக்கிறார்.

1959ஆம் ஆண்டில் இடைக்காடு என்னுமிடத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் நாங்கள் இருவரும் பங்குபெற்றோம். மேடையில் பேசிய பேச்சின் அளவு சிறிது; அதற்கு முன்பும் பின்பும் நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த பேச்சுக்கள் பெரிய அளவில் இருந்தன. அந்த உரையாடல் அவருக்குள்ள இலக்கிய அறிவை எனக்கு நன்கு விளக்கியது. இவரது கேள்விகளனைத்தும் குறளைப் பற்றியே இருந்ததுடன்,அவரது திருக்குறள் ஆராய்ச்சியையும் நன்கு விளக்கியது. அவரது அன்பும் பண்பும் எங்களது நட்பை மேலும் வளர்ததன.

யாழ்ப்பாண நகரிலிருந்து நான்கு மைல் தொலைவிலுள்ள உரும்பிராய் ஊரிலுள்ள வணிகரான திரு நடேசலிங்கம் எனது நீண்ட நாள் நண்பர். அவர் தமது இல்லத்தில் ஒரு நாள் எனக்கும் திரு வன்னியசிங்கம் அவர்களுக்கும் ஒருமித்து விருந்தளித்தார். அன்று திரு வன்னிய சிங்கம் அவர்களிடமிருந்து வந்த கேள்விகளனைத்தும் அரசியற் கட்சிப் போராட்டங்களை நடத்துவதுபற்றியும், 1938இல் தென்னகத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் பற்றியுமே இருந்தன. அதிலிருந்து அவருடைய திட்டமிட்டு செயலாற்றும் ஆற்றல்கள் நன்கு விளங்கின.

ஒரு நாள் திரு வன்னியசிங்கம் அவர்களுடய இல்லத்தில் வெளிப்புறச் சுவரில் “தமிழ்த் துரோகி” என்று பெரிய எழுத்துக்களில் இரவில் எழுதப் பெற்றிருந்தது. நாமாக இருந்தால் வெட்கத்தினால் அதை உடனே அழித்திருப்போம். ஆனால் மறுநாட் காலை வெளி நாட்டிலிருந்து வந்த அவர், அதைக் கண்டதும் அழிக்காது பெருஞ்சிரிப்புச் சிரித்தார். அன்று மாலை அவர் பேசிய ஒர் பொதுக் கட்டத்தில் சொன்ன சொற்கள் இவை:—

“நான் ஊரில் இல்லாதபொழுது என்னைப் பார்க்க வருபவர்கள் தங்கள் பெயரைக் குறித்து வைக்கும் புத்தகம் ஒன்றை வீட்டில் வைத்துப் போவது வழக்கம். ஆனால் நேற்று நானும் இல்லை; என் மனைவியும் இல்லை. என்னை பார்க்க வந்தவர், பாவம்! தன் பெயரை என் விட்டில் வெளிப்புறச் சுவரில் எழுதிவிட்டுப் போயிருக்கிறார். அவர்தான் திருவாளர் ‘தமிழ் துரோகி.’ இது குறித்து நான் பெரிதும் வருந்துகிறேன்” என்பதே. இது அவரது அறிவுத் திறமையையும் பண்பாட்டையும் விளக்கப் போதுமானதாகும்.

ஓர் உயர்ந்த சைவ வேளாள குடும்பத்தில் பிறந்த நண்பர் வன்னியசிங்கம் அவர்கள். தமிழ் மக்களிடையே தாண்டவமாடும் சாதிப் பாகுபாட்டை ஒழித்துக் கட்டுவதிலும் முன்னணியில் நின்றவர். தாழ்ந்த சாதி எனப்படுவோருடன் கூட அமர்ந்து சமபந்தி போசனம் செய்பவர். மேலும் 1956 ஆம் ஆண்டளவில் நல்லூர் கந்தசாமி கோவில் கதவுகளைத் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களனைவருக்கும் யாழ்ப்பாணத்திலேயே முதலாவதாகத் திறந்துவிடுவதில் வெற்றியும் கண்டவர்.

உரும்பிராய் விருந்தில் உரையாடி மகிழ்ந்த எங்களிருவரையும் மறுநாள் கடல் பிரித்துவிட்டது. அவர் 7ஆம் நாள் மறைந்துவிட்டார் என்ற செய்தி திருச்சிக்கு வந்து திடுக்கிடச் செய்தது. அவர் உடல் மறைந்து விட்டது. எனினும், அவரது இன் சொல்லும், நன்முகமும் என் உள்ளத்தைவிட்டு மறையவேயில்லை.

7 ஆண்டுகள் அவருடன் கொண்டிருந்த நட்புறவினால், அமரர் அவர்களின் 7 ஆவது நினைவு தினவிழாவில் கலந்து கொண்டு, அவர் பிறந்த இடத்திலும், அவருடை கோப்பாய் தொகுதியிலும் நான் அவரைப் பற்றிப் பேசிமன அமைதியடைந்தேன்.

தமிழ் உள்ளவரை, தமிழ் மக்கள் உள்ளவரை, தமிழ் நிலம் உள்ளவரை, அமரர் வன்னியசிங்கம் அவர்களின் அரும்பெரும் தொண்டும் பெரும்புகழும் மறையாது. வண்டமிழ்ச் சிங்கம் வன்னியரின் புகழ் வானுள்ளவரைக்கும் வளர்ந்து கொண்டே போகும்.

இன்றுள்ள இலங்கை நிலையை அவர் காணாது போனது ஒரு வகையில் மகிழ்ச்சியையும், மற்றொரு வகையில் வருத்தத்தையும் தருகிறது. என் செய்வது?