மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/காவற்காரன் கதை

விக்கிமூலம் இலிருந்து

7

பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன

காவற்காரன் கதை

விக்கிரமாதித்தர் மறுபடியும் முருங்கை மரத்தின் மேல் ஏறி, பாதாளத்தைப் பிடித்துக் கொண்டு வர, அது அவருக்குச் சொன்ன ஏழாவது கதையாவது:

‘கேளுமய்யா, விக்கிரமாதித்தரே! கேளும் சிட்டி, நீரும் கேளும்! 'காதர், காதர்' என்று ஒரு காவற்காரன் இருந்தான். ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று வந்திருந்த அவன் நல்ல பலசாலி; சுறுசுறுப்பு மிக்கவன். எல்லாவற்றையும் விட நம்பிக்கையானவன்; உண்மையானவன்.

இளம் தொழிலதிபர் ஒருவர் அவனைத் தம் வீட்டுக்கு இரவு காவற்காரனாகப் போட்டிருந்தார். ஒரு நாள் இரவு நேரம் கழித்து வந்த அவர், ஏழெட்டு முறை 'ஹாரன்’ அடித்தும், காதர் கேட்டைத் திறந்து விடாமல் ஏதோ யோசித்தது யோசித்தபடி, தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். வந்துவிட்டது கோபம் முதலாளிக்கு. காரை நிறுத்திவிட்டு இறங்கிப்போய் அவனைப் பிடித்து ஓர் உலுக்கு உலுக்கி, ‘என்ன, தூங்குகிறாயா?' என்று அதட்டலானார்.

‘இல்லை, எஜமான்! என் வாழ்க்கையில் இன்று எனக்கு ஒரு பெரிய சோதனை! காலத்தோடு கலியாணம் செய்து வைக்காததால், நேற்றிரவு என் பெண் ஒருத்தி யாரோ ஒருவனுடன் ஓடிவிட்டாள். அதை நினைத்துத்தான் இப்போது நான் துக்கப்பட்டுக் கொண்டிருந்தேன்’ என்று கண்ணில் நீருடன் அவன் சொல்வானாயினன்.

‘அந்தத் துக்கத்தை யெல்லாம் இனிமேல் நீ உன் வீட்டிலேயே மூட்டை கட்டி வைத்துவிட்டு வந்துவிடு; இங்கே எடுத்துக்கொண்டு வராதே!' என்று முதலாளி விறைப்புடன் சொல்லிவிட்டுக் கேட்டைத் தாமே திறந்துகொண்டு மீண்டும் காரில் ஏறி உட்கார்ந்து, உள்ளே செல்வாராயினர்.

மறு நாள் இரவு; நேற்று நடந்த தவறு இன்றும் நடந்து விடக் கூடாதே என்பதற்காகக் காதர் வேறொன்றைப் பற்றியும் நினைக்காமல், முதலாளியையும், முதலாளியின் கார் ஹாரன் சத்தத்தையும் மட்டுமே நினைத்தவாறு கேட்டுக்கருகே உட்கார்ந்திருப்பானாயினன்.

அன்றும் நேரம் கழித்து வந்த முதலாளி, தம்மைக் கண்டதும் எழுந்து கேட்டைத் திறந்து விட்டுவிட்டு நின்ற காதரை நோக்கி, 'ஜாக்கிரதை! இன்றிலிருந்து நம்முடைய கம்பெனியின் தொழிலாளிகளில் ஒரு பகுதியினர் வேலைநிறுத்தம் செய்திருக்கிறார்கள். அவர்களில் யாராவது இங்கே வரக்கூடும்; உள்ளே விடாதே!' என்று எச்சரித்துவிட்டுச் செல்வாராயினர்.

அவர் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் சமையற்காரன் வந்து, 'காதர் எனக்கு ஓர் உதவி செய்ய முடியுமா?’ என்று அவனைக் கேட்பானாயினன்.

‘என்ன உதவி?’ என்று காதர் கேட்க, ‘இன்று நான் அவசியம் சினிமாவுக்குப் போக வேண்டும்; உள்ளேயும் கொஞ்சம் பார்த்துக் கொள்கிறாயா?' என்று சமையற்காரன் கேட்பானாயினன்.

'போயும் போயும் இன்றுதானா சினிமாவுக்குப் போக வேண்டும்? அம்மா வேறு ஊரில் இல்லையே! அவர்கள் வந்த பிறகாவது போகக்கூடாதா?’ என்று காதர் கேட்க, ‘என்றைக்குத்தான் இங்கே ஒழிகிறது? இது எம். ஜி. ஆர். படம், காதர்! முதல் தடவை வந்தபோதே பார்க்க வேண்டுமென்று நினைத்தேன்; முடியவில்லை. இப்போது இரண்டாவது தடவையாக வந்திருக்கிறது. இன்றுதான் கடைசி நாள்; போனால் எப்பொழுது வருமோ, என்னவோ? கொஞ்சம் பார்த்துக் கொள்; எஜமான் இன்று கொஞ்சம் ‘ஓவ'ராகத் 'தண்ணி' போட்டிருக்கிறார். அநேகமாக அவர் நடுவே எழுந்து குரல் கொடுக்க மாட்டார். தப்பித் தவறிக் கொடுத்தால், 'சினிமாவுக்குப் போயிருக்கிறான்’ என்று சொல்லிவிடாதே! அவர் எப்போது கேட்கிறாரோ அப்போது, ‘இப்போதுதான் இதோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு வெளியே போனான்' என்று சொல்; அதற்குள் நான் வந்து விடுவேன். என்ன, வரட்டுமா?’ என்று காதரின் பதிலுக்குக் கூடக் காத்திருக்காமல் அவன் நடையைக் கட்டுவானாயினன்.

‘திருட்டுப் பயல்! அந்த வேலைக்காரி விசாலத்தை சினிமாக் கொட்டகைக்கு வெளியே இன்றிரவு தனக்காகக் காத்திருக்கும்படி இவன் அவளிடம் சொல்லியனுப்பியிருப்பது எனக்குத் தெரியாதென்று நினைத்துக் கொண்டிருக்கிறான்! ம், நடக்கட்டும், நடக்கட்டும்!' என்று பொருமிய காதர், ‘எஜமான் இன்று கொஞ்சம் 'ஓவ'ராகத் 'தண்ணி' போட்டிருக்கிறாராம். என்ன ஆகப்போகிறதோ, என்னவோ? அரே, அல்லா!’ என்று தன் நாற்காலியில் உட்கார்ந்து குல்லாயைக் கழற்றி மடியின் மேல் வைத்துக் கொண்டு, தலையை இரு கையாலும் 'சொறி, சொறி' என்று சொறிந்து கொள்வானாயினன்.

அப்போது ‘தொப்’ என்ற சத்தம் காதில் விழ, காதர் சட்டென்று குல்லாயை எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டு சுற்றுமுற்றும் பார்க்க, பங்களாவின் பின்புறத்து மதிற் சுவரைத் தாண்டி உள்ளே குதித்த கரிய உருவம் ஒன்று, கையில் உருவிய கத்தியுடன் மாடிப்படி இருக்கும் வராந்தாவை நோக்கி மெல்ல முன்னேறிக் கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டு, 'வரவே வந்தானே, இன்னும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாலாவது வந்திருக்கக் கூடாதா? சமையற்காரன் சினிமாவுக்குப் போன பிறகுதானா இவன் வந்து சேர வேண்டும்? இப்போது நான் என்ன செய்வேன்? வாசலைப் பார்ப்பேனா, வராந்தாவைப் பார்ப்பேனா? வராந்தாவை விட்டால் அந்தப் பயல் மேலே ஏறி விடுவான்போல் இருக்கிறது; வாசலை விட்டால் யாராவது உள்ளே நுழைந்து விடுவார்கள் போல் இருக்கிறது! என்ன செய்யலாம்? யோசிக்கக்கூட நேரம் இல்லையே! கையில் உருவிய கத்தியுடன் செல்லும் இவனுடைய நோக்கம் என்னவாயிருக்கும்? திருடுவதாயிருக்குமா, அல்லது மாடியில் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கும் எஜமானைக் குத்திக் கொல்வதாயிருக்குமா? ஐயோ! அப்படி ஏதாவது நேர்ந்துவிட்டால் நான் இங்கே காவற்காரனாயிருந்து என்ன பிரயோசனம்?' என்று பலவாறாக நினைத்தபின் துணிந்து, ‘வந்தது வரட்டும்' என்று வாசற் கதவைச் சாத்திக்கொண்டு, மெல்ல வராந்தாவை நோக்கி நகருவானாயினன்.

நடந்தால் சத்தம் கேட்குமல்லவா? அந்தச் சத்தத்தைக் கேட்டு அவன் ஓடிவிடலாமல்லவா? ஓடிவிட்டால் நல்லது தான். ஆனால் ஓடுபவன் சும்மா ஓடுவானோ, எஜமானைக் குத்திவிட்டு ஓடுவானோ?......

எதற்கும் கீழே இருந்தபடி மேலே இருக்கும் எஜமானுக்கு ஒரு குரல் கொடுத்துப் பார்ப்போமா?.....

இது என்ன பைத்தியக்காரத்தனம்? அந்தச் சத்தத்தைக் கேட்டு மட்டும் அவன் ஓடமாட்டானா?.....

ஆமாம், இத்தனை முன்னெச்சரிக்கையோடு செல்கிறோமே, தான் வாசலில் நிற்பது அவனுக்குத் தெரியாமலா இருந்திருக்கும்? அது தெரிந்துதானே அவன் முன் பக்கமாக வராமல் பின் பக்கமாக வந்திருக்கிறான்?......

இப்படி நினைத்த காதர் 'விடுவிடு' வென்று நடப்பானாயினன். அப்போது....

தட், தட்!...

படி ஏற ஆரம்பித்துவிட்டான், பயல்!

பாழும் படியும் மரப்படியாகவல்லவா இருக்கிறது? தானும் இப்போது அவனைத் தொடர்ந்து ஏறினால் சத்தம் கேட்குமே, என்ன செய்யலாம்?...

தட், தட், தட், தட்!.....

சரி, இவன் முதலில் மேலே ஏறட்டும். எஜமான் உள்ளே தாளிட்டுக் கொண்டுதான் தூங்குவார்; இவன் ஜன்னல் வழியாக உள்ளே நுழைவதற்குள் ஒரே பாய்ச்சலில் இவனைப் பாய்ந்து பிடித்துவிடலாம்.....

இந்தத் தீர்மானத்துடன் மாடிப் படிக்குக் கீழே காதர் பதுங்கிக் கொண்டிருந்தபோது, மேலே எரிந்து கொண்டிருந்த ஒரே விளக்கும் அணைந்து-இல்லை, அணைக்கப்பட்டு, எங்கும் ‘கும்' மென்று இருள் சூழலாயிற்று.

அதிலிருந்து ஆசாமி மேலே போய்விட்டான் என்பதை அறிந்த காதர், இரண்டே எட்டில் மாடியை எட்டிப் பிடிக்க, அவன் காலடிச் சத்தத்தைக் கேட்டு அந்தக் கரிய உருவம் அவனைத் திரும்பிப் பார்க்க, அதன்மேல் ஒரே பாய்ச்சலில் பாய்ந்து அதனிடமிருந்த கத்தியை அவன் முதலில் பிடுங்கி எறிய முயல்வானாயினன்.

போர், போர், உக்கிரமான போர்!

இருவரும் கட்டிப் புரண்டார்கள்; உருண்டார்கள்; எழுந்தார்கள்!

மீண்டும் ஒருவர் மேல் ஒருவர் பாய்ந்தார்கள்; கட்டிப் புரண்டார்கள்; உருண்டார்கள்; எழுந்தார்கள்!

இத்தனை போராட்டம் இங்கே நடக்கிறதே, அந்த எஜமானின் தூக்கம் கொஞ்சமாவது கலைந்தது என்கிறீர்களா? அதுதான் இல்லை!

எப்படிக் கலையும்? அந்த மனுஷன்தான் இன்று கொஞ்சம் 'ஓவ' ராகத் 'தண்ணி' போட்டிருக்கிறார் என்று சமையற்காரன் சொன்னானே. எதற்கும், ‘உதவி, உதவி!' என்று இரண்டு குரல்கள் கொடுத்துப் பார்ப்போமா?....

அட, சீ! ஒருத்தனுக்கு ஒருத்தன்-இவனைச் சமாளிக்க முடியாமலா 'உதவி, உதவி' என்று கத்துவது?.....

அவமானம்! தனக்கு மட்டுமல்ல; தான் இருந்துவிட்டு வந்த ராணுவத்துக்கும் அவமானம்!.....

இந்த அவமானத்தால் ஒரு கணம் குன்றிப்போன காதர், மறு கணம் வேங்கையைப் போல் அந்தக் கரிய உருவத்தின் மேல் பாய்ந்து, அதனிடமிருந்த கத்தியைப் பிடுங்கி அப்பால் எறிந்துவிட்டு விளக்கைப் போட, ஆச்சரியமாவது ஆச்சரியம், அங்கே அவனுடைய முதலாளி சிரித்தபடி நின்று கொண்டிருப்பாராயினர்!

‘நீங்களா எஜமான்?' என்றான் காதர்.

'ஆமாம், நானேதான்! உன் மேலிருந்த சந்தேகம் இப்போதுதான் தீர்ந்தது எனக்கு. நீ உண்மையானவன்; யோக்கியமானவன்; உயிருக்குத் துணிந்து நீ என்னைக் காப்பாற்றுவதற்காகச் செய்த வீரசாகஸம் என்னால் என்றுமே மறக்க முடியாதது. இந்தா, இந்த நூறு ரூபாயை இப்போதைக்கு வைத்துக் கொள். அடுத்த மாதத்திலிருந்து சம்பளத்தில் பத்துரூபா கூட்டித் தரச் சொல்கிறேன். என்ன, சந்தோஷம்தானே?' என்று முதலாளி கேட்க, ‘இல்லை, எஜமான்; என்மேலே உங்களுக்கு எப்போது சந்தேகம் வந்து விட்டதோ, அதற்குப் பின் நான் இங்கே இருக்க விரும்பவில்லை, எஜமான்! நான் வரேன், எனக்கு உத்தரவு கொடுங்கள்!' என்று தன்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திய எஜமானைத் தானும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டு, அவன் நடையைக் கட்டுவானாயினன்.'

பாதாளம் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, ‘இவர்களில் யார் செய்தது சரி? எஜமான் செய்தது சரியா, ஏவலாளன் செய்தது சரியா?' என்று விக்கிரமாதித்தரைக் கேட்க, 'இருவர் செய்ததும் சரியல்ல!' என்று விக்கிரமாதித்தர் சொல்ல, பாதாளம் அவரிடமிருந்து தப்பி, மீண்டும் போய் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டு விட்டது என்றவாறு... என்றவாறு... என்றவாறு......