மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/பரோபகாரி கதை

விக்கிமூலம் இலிருந்து
15

பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன

பரோபகாரி கதை

‘விக்கிரமாதித்தர் மறுபடியும் முருங்கை மரத்தின் மேல் ஏறி, பாதாளத்தைப் பிடித்துக்கொண்டுவர, அது அவருக்குச் சொன்ன பதினைந்தாவது கதையாவது:

‘கேளுமய்யா, விக்கிரமாதித்தரே! கேளும் சிட்டி, நீரும் கேளும்! 'தயாநிதி, தயாநிதி' என்று ஒரு 'தனி மனிதன்’ தரங்கம்பாடியிலே உண்டு. வாழ்க்கையில் மட்டுமல்ல, வாழும் முறையிலும் 'தனி மனித'னாகவே இருந்து வந்த அவன், யாராவது ஏதாவது ஒர் உதவி கோரித் தன்னிடம் வந்தால், தன்னால் முடிந்தவரை அந்த உதவியை அவர்களுக்குத் தட்டாமல் செய்வதுண்டு. இதனால் 'பரோபகாரி’ என்று அந்தப் பக்கத்தில் பெயர் எடுத்து வந்த அவன், ஒரு நாள் இரவு எங்கேயோ போய்விட்டுத் தன் ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருக்க, அதுகாலை, 'ஐயா, ஐயா!’ என்று ஒர் அவலக் குரல் ஒலிக்க, அதுகேட்டு அவன் திரும்பிப் பார்க்க, பூட்டிய வீட்டுக்குள்ளே இருந்த ஒருவன், 'உங்களைத்தான் ஐயா, இங்கே வாருங்கள், ஐயா!’ என்று அவனைத் தீனக் குரலில் அழைப்பானாயினன்.

‘என்ன சங்கதி?’ என்று கேட்டுக்கொண்டே பரோபகாரி அவனை நெருங்க, ‘இப்படியும் ஒர் அநியாயம் நடக்க நீர் பார்த்ததுண்டா? மனைவியைப் பிரசவத்துக்காகப் பிறந்தகத்துக்கு அனுப்பிவிட்டுத் தன்னந் தனியாக நான் வீட்டில் இருந்தேன். யாரோ ஒரு திருடன் வந்து என்னைப் பயமுறுத்தி, 'எங்கே சாவி?' என்று கேட்க, ‘இதோ இருக்கிறது, அதோ இருக்கிறது!' என்று நான் சாவியைத் தேடுபவன் போல் மெல்ல வெளியே வந்து அவனை உள்ளே தள்ளிப் பூட்டி விட்டுப் போலீசுக்குத் தகவல் கொடுக்க முயல, அதற்குள் அந்தப் பாவி கைக்குக் கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு என்னை உள்ளே தள்ளிப் பூட்டிவிட்டுப் போய் விட்டான், ஐயா!' என்று அவன் ‘கோ'வென்று கதற, ‘அழாதே தம்பி, அழாதே! வேறு ஏதாவது ஒரு சாவி இருந்தால் கொடு; நான் இந்த பூட்டைத் திறந்து உன்னை விடுவிக்கிறேன்!' என்று பரோபகாரி அவனைத் தேற்ற, அவன் மூக்கைச் சிந்திக் கொண்டே ஒரு சாவிக்குப் பதிலாக ஒரு கொத்துச் சாவியை எடுத்துப் பரோபகாரியிடம் கொடுக்க, அவற்றில் ஒன்றைக் கொண்டு பூட்டைத் திறந்துவிட்டு, ‘இந்தா தம்பி, பூட்டும் சாவியும். இனிமேல் நீ என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாயோ, அதைச் செய்துகொள்!' என்று பரோபகாரி பூட்டையும் சாவியையும் அவனிடம் கொடுக்க, இனி நான் செய்யவேண்டியது இதுதான்!' என்று அவன் அந்தப் பரோபகாரியை உள்ளே தள்ளிப் பூட்டி விட்டுத் 'தப்பினோம்! பிழைத்தோம்!' எனத் தலை தெறிக்க ஓடுவானாயினன்.

‘இதென்ன வம்பு? இப்படியும் ஏமாற்றுவார் இந்த உலகத்தில் உண்டா?' என்று பரோபகாரி திகைக்க, அதுகாலை நாலைந்து போலீசாருடன் அங்கே வந்த ஒரு மூதாட்டி, 'இதோ இருக்கிறான் திருடன், இதோ இருக்கிறான் திருடன்!' என்று பரோபகாரியை அவர்களுக்குச் சுட்டிக் காட்டிக் கொண்டே தன்னிடமிருந்த சாவியை எடுத்துப் பூட்டைத் திறக்க, பரோபகாரி ஒன்றும் புரியாமல் நடந்ததைச் சொல்ல, ‘கையும் களவுமாக அகப்பட்டுக் கொண்டு கதையா விடுகிறாய், கதை? நட!' என்று போலீசார் பரோபகாரியின் கழுத்தில் கை வைத்துத் தள்ளிக் கொண்டு போலீஸ் நிலையத்துக்குச் செல்ல, திருடனைச் சாமர்த்தியமாகப் பிடித்துப் போலீசாரிடம் ஒப்படைத்த மூதாட்டியை அக்கம் பக்கத்தில் இருந்தவர்களெல்லாம் வாயாற, மனமாறப் பாராட்டி மகிழ்வாராயினர்.'

பாதாளம் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, ‘உபகாரம் செய்பவனுக்கு இந்த உலகத்தில் ஏன் இப்படி அபகாரம் வந்து சேருகிறது?" என்று விக்கிரமாதித்தரைக் கேட்க, 'உண்மை எது, பொய் எது என்று தெரிந்துகொள்ள முடியாத அளவுக்கு மனிதன் இப்போது நடிக்கக் கற்றுக் கொண்டுவிட்டதால்!' என்று விக்கிரமாதித்தர் சொல்ல, பாதாளம் அவரிடமிருந்து தப்பி, மீண்டும் போய் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டு விட்டது என்றவாறு... என்றவாறு... என்றவாறு...