பாரதி பிறந்தார்/5

விக்கிமூலம் இலிருந்து



துள்ளும் தமிழ்க்கவிதை - பாடத்
துடித்த பாரதிக்குக்
கிள்ளும் பசிப்பிணியும் - வறுமைக்
கேடும் சூழ்ந்ததம்மா

செல்வர் முருகேசர் - வெல்லச்சு
செட்டியார் போன்றசிலர்
பல்விதமாய் உதவிப் பாரதி
பசிப்பிணி தீர்த்துவந்தார்

பண்ணிசைத் தே அலைகள் - பொங்கிப்
பாயும் கடற்கரையில்
கண்ணன் பாடல்களைப் - பாடிக்
களிப்பு மிகக்கொண்டான்

கத்தும் கடல்அலையின் - ஆட்டம்
கண்ட பாரதியும்
தத்தரி தரிகிடதோம் - என்று
தாளமிட்டு ஆடிநின்றான்





முத்தியால் பேட்டையிலே - மரங்கள்
மொய்த்த ஓர் சோலையிலே
சித்தம் களிகூரக் - குயில்கள்
சேர்ந்து பண்ணிசைக்கும்

பாரதி அங்கிருந்தே - குயில்
பாட்டுக் குயிர்கொடுத்தான்
வீரம் வேண்டுமென்றான் - பெண்டிர்க்கு
விடுதலை தேவையென்றான்



புதுவையிலே ஒருநாள் - பெரும்
புயல் அடித்ததனால்
எதிர் இருந்தமரம் - வீடு
எல்லாம் வீழ்ந்தனவே

பொங்கும் பெரியபுயல் - நெஞ்சில்
புறப்பட்ட காரணத்தால்
மங்கை பாஞ்சாலி - சபதம்
மாக்கவி பாடிவைத்தான்




வீட்டின் முற்றத்திலே - ஒருநாள்
வீற்றிருக்கையிலே
பாட்டையில் கோணங்கி - ஒருவன்
பாடி எதிர்வந்தான்

அரையில் அணிந்திருந்த - ஆடையை
அவிழ்த்துக் கொடுத்துவிட்டு
மரம்போல் பாரதியும் - நின்றான்
மனைவி வருந்திநின்றாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பாரதி_பிறந்தார்/5&oldid=1016570" இலிருந்து மீள்விக்கப்பட்டது