உத்தரகாண்டம்/24

விக்கிமூலம் இலிருந்து

24

குருகுலத்தில் இருந்து சென்ற சுப்பய்யா, புனேயில் ஒரு வித்யாலயத்தில் இந்தி கற்பிக்கச் சேர்ந்தான். தமிழர் அதிகமாக வசிக்கும் பேட்டை ஒன்றில், ஒரு வீட்டு மாடியறையில் குடியிருந்தான். அவர்கள் தாம் அந்தப் பகுதிக்குச் சொந்தக்காரர். கீழ்த்தளத்தில்தான் சங்கரியின் அண்ணன் குடும்பம் இருந்தது. வாயில்புறம் கடப்பைக் கல் வரந்தாவில் மரத்தாலான மாடிப்படி. வராந்தாவில் இருந்து நேராகத் தெருவுக்குக் குழந்தைகள் போக முடியாதபடி, கம்பியழிப் பாதுகாப்பும் கதவும் இருந்தன. அந்த வீட்டுப் பின்புறம் செல்ல, பின்புறம் முற்றத்துக்குக் கொண்டு செல்லும் படிகளும் இருந்தன. அது மராத்திய தம்பதியின் பகுதியில் இருந்தது. முற்றத்தில் தகரக்குடிசைகளில் சில எளிய குடும்பங்கள் இருந்தன. இடையில் பெரிய பொதுத் தண்ணீர்த் தொட்டி; குளிக்க, துவைக்க வசதிகள். சுப்பய்யா அந்தப் பகுதியில் இறங்கி தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வான். மேல் தளத்தில் பொதுவான கழிப்பறை வசதி இருந்தது. கீழ்த்தள முற்றத்திலும் அந்த வசதி இருந்தது. சங்கரியின் குடும்பம் குடியிருந்த பகுதி முன் கூடம், ஒரு படுக்கையறை, சமையல், சாப்பாட்டுக்கான கூடம், குளியல், கழிப்பறை வசதிகள் கொண்டிருந்தன. அவர்கள் முற்றத்துக்கு வரவேண்டாம், என்றாலும் மேல் தளத்திலும், கீழ்த் தளத்திலும் வேலை செய்த ஹீராபாய், அவர்கள் வீட்டுத் துணிகளை முற்றத்தில் துவைத்து உள் வராந்தாவில் உலர்த்துவாள். ஏற்கெனவே ஒரு சூடு விழுந்த உணர்வில் இருந்த சுப்பய்யா, அக்கம் பக்கம் தமிழர் குடும்பங்களில் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளக் கூடக் கூசியிருந்தான். அவன் கற்பித்த வித்யாலயத்தில் மராத்தி மொழி பிரதானமாக இருந்தாலும் அந்த மொழியும் அவனுக்கு நன்கு தெரிந்திருந்தாலும், அவனுக்கு அந்தப் பிரதேசமும் சமூகமும் அந்நியப் பட்டிருக்கவில்லை. அவன் கற்பித்த வித்யாலயத்தில் இருபாலரும் படித்தார்கள்.

அவன் அன்றாட நியமங்களுக்கப்பால், எந்தத் திசையிலும் கருத்தைச் செலுத்தியிருக்கவில்லை. தானே தன் உணவை அநேகமாகத் தயாரித்துக் கொள்வான். ரொட்டி, காய், பருப்பு... ஸ்டவ்வில் இதைத் தயாரித்துச் சாப்பிட்டு விட்டுப் போவான். அங்கே காலை, ஏழரைக்கு ஒரு பகுதியும், பிற்பகல் இரண்டு மணிக்கு ஒரு பகுதியும்- இரண்டு அடுக்குகளாகப் பள்ளி வகுப்புகள் நடைபெறும். மேல்தளத்து தம்பதி அடிக்கடி கதவைப் பூட்டிக் கொண்டு மாலை வேளைகளில், பஜன், பூஜா என்று போய் விடுவார்கள். அவர்களுடைய மகள் ஒருத்தி கோலாப்பூரில் இருந்தாள். இரண்டு மகன்களும் வெளிநாட்டில் இருந்தனர். இராணுவம் தொடர்பான கணக்குத் தணிக்கை அலுவலராக வேலை பார்த்து அவர் ஓய்வு பெற்றவர். அந்த அம்மையாரும் வீட்டிலிருந்தபடி படித்து மராத்தியில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். அவர்கள் அவன் மீது அளவிறந்த அன்பு காட்டி னார்கள். ‘கீர்’ ‘கடி’ என்று ஒற்றையாக இருக்கும் அவனுக்கு அந்த அம்மை சிறு கிண்ணத்தில் ஏதேனும் கொண்டு வந்து கொடுப்பாள். அவர்கள் கோலாப்பூருக்குப் போகும்போது, வாயில் முன் கதவுச்சாவி ஒன்றை அவனிடம் கொடுத்து வைப்பார்கள்.

அவனுக்குத் தெரியும் போது, சங்கரியின் அண்ணனும் அண்ணியும் வேலைக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். மூன்று வயசில் ஒரு பெண் குழந்தை. இன்னும் கொஞ்சம் பெரியவனாக ஒரு பையன்; கைக்குழந்தை என்று மூன்று குழந்தைகள் இருந்தார்கள். அண்ணன் கறுப்பாக, தாட்டியாக இருப்பான். மனைவியும் பருமன்தான். காலையில் எட்டரை மணிக்கு அவர்கள் பைக்கில் வேலைக்குச் செல்வார்கள். கைக்குழந்தை சங்கரியின் இடுப்பில் இருந்து அழும். பிறகு டாடா சொல்லும்.

இதெல்லாம் செவிவழிக்காட்சிகள் தாம். முன்கூடத்தில் ஒரு கட்டிலில் பெரியம்மா, படுத்திருப்பார். நலிந்த குரலில் அவள், “சங்கரி, புள்ள தொட்டில்ல என்ன பண்ணிருக்கான் பாரம்மா, முருகா, என்னிய இப்படிச் சோதிக்கிறியே?” என்று புலம்புவது செவிகளில் விழும்.

அவனையும் அறியாமல், அந்தக் குடும்பத்தில் உள்ள சங்கரி யார் என்று தெரிந்து கொள்ளும் ஈர்ப்பு... குடியேறியது என்று இப்போது தோன்றுகிறது.

அந்த மூன்று வயதுக் குழந்தை அருகேயுள்ள ஒரு பாலபவனத்துக்குப் போய்க் கொண்டிருந்தது. ஐந்தாறு வீடுகள் தள்ளி உள்ள அந்த மழலைப் பள்ளிக்குக் காலையில் அம்மாவோ, அப்பாவோ கொண்டு விடுவாரோ, அல்லது ஆயா யாரேனும் இருந்தார்களோ? ஒருநாள் மதியம், சங்கரி இடுப்பில் கைக்குழந்தையுடன் இந்தக் குழந்தையைப் பள்ளியில் இருந்து அழைத்து வந்ததை அவன் பார்த்தான். அவள் தலை குனிந்து நடந்தாள்.

அந்தக் குழந்தை ‘பாட்டி’ என்றழைத்துக் கொண்டு மேலே வரும். குழந்தை பெயர் பவானி. “பவானி காய்கர்தோ?” என்பார்.

தாத்தா “மீ ஜேவ்லா” என்று அது மராத்தியில் பதில் சொல்லும். தன் கவனம் சிதறக்கூடாதென்று அவன் கதவை ஒருக்களித்துக் கொள்வான்.

மாலையில் சில தமிழ் மாணவர்கள் அவனிடம் வந்து இந்தி கற்றுக் கொண்டார்கள். எல்லோரும் பையன்கள். ஒரு தடவை அந்தக் குழந்தை அப்போது அவன் அறைக்குள் வந்தது. “பாட்டி இல்லே?”

“இல்ல. அவங்கல்லாம் ஊருக்குப் போயிருக்காங்க. நீ இப்ப சமர்த்தா, நல்ல பிள்ளையாக் கீழே போயிடம்மா, கிளாஸ் நடக்குதில்ல?” என்று அனுப்பி வைத்தான்.

அப்போது குளிர்காலம். விடுப்பு நாட்கள். வீட்டுக்காரர்கள் ஊரிலில்லை. அவன் அறையை ஒட்டடை அடித்துச் சுத்தம் செய்தான். போர்வை தலையணை உரை, சட்டை எல்லாவற்றையும் கீழே கொண்டு சென்று சோப்புப் போட்டுத் துவைத்துப் பிழிந்து விட்டு நீராடினான். சில்லென்று நீராடிவிட்டு வருகையில் கீழ்த்தளத்து சமையலறையில் இருந்து குழந்தை அலறும் ஒலி கேட்டது. ‘ஒண்ணுமில்ல... இதபாரம்மா...’ என்ற சமாதானங்கள் எடுபடவில்லை. தாளாத நோவில், குழந்தை துடிக்கிறது; தவிக்கிறது. அவன் மேலே துணியைக் கொண்டு செல்கையில் பின் வாயில் கதவு திறந்தது. ‘ஹீரா... ஹீரா...?’ யாருமில்லை. அவள் அலறிப் புழுவாய்த் துடிக்கும் குழந்தையை எடுத்துக் கொண்டு முன்புறம் போகையில், தொட்டில் குழந்தையும் சேர்ந்து அழுதது.

“குக்கரை இறக்கிட்டு, பருப்பை எடுத்திட்டிருந்தேம்மா, சீலயப்புடிச்சி இழுத்து வம்பு பண்ணினா. அண்ணி அவளுக்கு வயிறு மந்தமா இருக்கு, உடம்பு சுடுது, ரசஞ்சோறு தவுர எதும் குடுக்காதன்னு சொல்லிட்டுப் போயிருக்காங்க. காலம எந்திரிச்சி பேடா வோணும் சேவு வோணும்னு தொந்தரவு பண்ணுனா. ரெண்டு கிண்ணத்துல போட்டுக் குடுத்தே. திங்கியவுமில்ல. வாரி எறச்சிருக்கா... இப்ப கைப்பருப்பு இடுக்கிலேந்து நழுவி, இவகையில கொட்டிடிச்சி... தேங்காண்ணை ஒறஞ்சி கெடக்கு. என்ன பண்ணுவே...” என்று சங்கரி பிரலாபிக்கும் குரலில் விசிறிக் கொண்டிருந்தாள்.

“இப்படிப் புள்ளிகள வுட்டுப்புட்டு பெரிச மட்டும் கூட்டிட்டு இவுங்க போயிடறாங்க. சங்கரி, தோசமாவு இருக்கில்ல, பூசு... வாடிகண்ணு, பாட்டி விசரறேன்...”

அந்த நேரத்தில்தான் அவன் சென்றான்.

“என்னம்மா? என்ன ஆச்சி?...”

“அத்தே... அத்த... பருப்பக் கொட்டிட்டா... அடுப்பி லேந்து கொட்டிட்டா...”

“அடி செருப்பால, கேக்குறவங்க என்ன நெனப்பாங்க? அம்மயோட துக்கிரித்தனம் அப்பிடியே வருது?” என்று பாட்டி பாய்ந்தாள்.

“அம்மா நீ எதுக்கு இப்பிடி எல்லாம் பேசுற? புள்ளக்கு வலி எரிச்சல்...”

தோசை மாவை எடுத்து வந்து அவள் போட முனைந்த போது, அவன் பாட்டியின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த குழந்தை பவானியைப் பார்த்தான்.

புறங்கை, பிஞ்சு விரல்கள், மணிக்கட்டுப் பின்புறம், முழங்கைக் கீழ்ப்பகுதிகளெல்லாம் சிவந்து ரணம் பட்டிருந்தது. “தோசை மாவெல்லாம் வேணாம். சில் தண்ணி கொண்டாங்க... இருங்க, ஐஸ் வாங்கிட்டுவரேன்!” என்று அவன் எதிர்ப்பக்கம் இருந்த கடையில் இருந்து ஐஸ் துண்டுகள் வாங்கி வந்து தடவினான். பிறகு அவனே டாக்டரிடம் தூக்கிச் சென்றான்.

அவர் பார்த்துவிட்டு “நல்லவேளை, குளிர்ந்த ஐஸ் வைத்தீர்கள்” என்று சொல்லி, களிம்பு தடவி, பாதுகாப்பாக ஆங்காங்கு மருந்துத்துணி வைத்து பிளாஸ்திரி போட்டார். கையில் ஒரு சாக்லேட் கொடுத்தார்.

“யார் பெத்த புள்ளயோ? சமயத்துக்கு வந்து உதவி பண்ணின. இல்லேன்னா, என்ன செய்யும் அது?... அவுங்க ரெண்டுபேரும் பெரி புள்ளயக் கூட்டிட்டு ஹாயா லீவுன்னு பம்பாய் போயிட்டாங்க. நாளக்கி மதியம் வராங்க. தம்பி சமயத்துல உதவின...” என்று நன்றி சொன்னாள் பெரியவள்.

இப்படித்தான் பரிசயம் தொடங்கியது. மறுநாள் பம்பாயில் இருந்து வந்த மகன், காத்திருந்து, இவன் வாசகசாலைக்குப் போகும் நேரத்தில் வாயிலில் மகளுடன் நின்றிருந்தான்.

“ரொம்ப தேங்க்ஸ் ஸார்! நீங்க தமிழ்க்காரர்னு இப்பதாந் தெரியும். அம்மா சொன்னாங்க. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் ஸார். ரோட்டில விழுந்தாலே கவனிக்காம போற காலம் இது... டாக்டருக்கு என்ன ஆச்சு ஸார்?”

“நோநோ... அதெல்லாம் ஒண்ணுமில்ல. நீங்க ஒண்ணும் குடுக்க வாணாம். பாப்பா, எப்படியிருக்கு?” என்றான்.

“அங்கிளுக்குத் தேங்க்ஸ் சொன்னியா?... நீங்க சாக்லேட் வாங்கிக் குடுத்தீங்களாமே? ரொம்ப சேட்ட ஸார்.”

அவன் உள்ளே அழைத்ததை மென்மையாக மறுத்து விட்டு வெளியேறினான்.

பொள்ளிக் கொப்புளம் கிளம்பாமல் சூட்டுக்காயம் ஆறிவிட்டது. அதிகம் சிவப்பில்லை என்றாலும் இளந்தோலில் தேங்காயெண்ணெய் பளபளக்க குழந்தை வருவாள். இதற்காகவே அவன் மிட்டாய் வாங்கி வைத்திருப்பான்; கொடுப்பான்.

பத்து நாட்கள் சென்ற பின் ஒரு நாள், வெயில் படும்படி, பெரியவள் வாயிலுக்கு நேராகக் காலில் எண்ணெய் தடவிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். அவன் ஏழரைக்குச் சென்றுவிட்டு, பதினொன்றரை இடைவேளையில் வந்திருந்தான். காலை உணவு எதுவும் தயாரித்திருக்கவில்லை. சில நாட்களில் நேரமாகிவிவிட்டால், இந்த நேரத்தில் ஏதேனும் ‘கிச்சடி’ தயாரித்து உண்டுவிட்டு இரண்டு மணிக்குப் போவான்.

அவன் வரும்போது, ஸ்டவுக்கு எண்ணெய் வாங்கி வருவதைப் பார்த்து, “தம்பி? என்ன, இப்ப வரீங்க?” என்று கேட்டாள்.

“இல்லீங்க, ஸ்டவ் எண்ணெயாயிட்டுது. அதான் வாங்கிட்டு வந்தேன்...”

“அடாடா, நீங்க ஏன் சிரமப்படுறீங்க?... எங்க வீட்டுல எண்ணெய் இருக்கு. இங்க காஸ் அடுப்பானதால, எண்ணெய் உபயோகமில்ல. ஹீராகிட்ட சொன்னா, வாங்கிட்டு வாரா, கார்டுதான். ஆமாந் தம்பி, நா கேக்குறேனேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க, தனியா சமச்சி சாப்பிடுறீங்க...? வீட்ல... யாரும் இல்லியா?... பொறந்த வூட்டுக்குப் போயிருக்காங்களா?... இல்லாட்டி இப்பதா, புருசன் பொஞ்சாதி ரெண்டு பேரும் வேலை செய்யிறாங்க. ஒரே எடத்துல இருக்க முடியாம...”

“...சே, சே அதெல்லாம் இல்லம்மா. நான் தனி ஆள்...” என்று சொல்லிவிட்டு விடுவிடென்று மேலேறி வந்து விட்டான். இப்படி ஆரம்பித்து அந்தம்மாள் அதிகமாகப் பேச்சுக் கொடுக்கலானாள்.


“தம்பி, செத்த நில்லுங்க...” குழந்தை பவானி ஒரு டப்பியை எடுத்து வந்து கொடுக்கும்.

“இன்னிக்குப் பொங்கல்... உள்ள வாங்க... ஏனிப்படி ஒட்டிக்கிடுமோன்னு போறீங்க?...” “...அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா” என்றான் அவன். சாரதா!... அம்மா... மருமகள் வந்தாள். “உள்ள வாங்க ஸார். எங்களுக்கு டயம் இல்லாம போயிடுது. வாரத்தில ஒரு நாதா லீவு... அம்மா சொல்லிட்டே இருக்காங்க. பையனக் கூட்டிட்டு அவுங்க ‘டென்டிஸ்ட்’ கிட்டப் போனாங்க. எனக்கு வாஷிங், அது இதுன்னு வேலை. சங்கரி மட்டும் இல்லன்னா இந்தக் குடும்பம் நாறிப்போகும்.” மாமி யாருக்காகத்தான் அவள் அழைத்திருக்கிறாள்.

மேலே சாவித்திரி அம்மாவும் சுக்டன்கர் பாயும் ஊரிலிருந்து வந்தார்கள். அவர்களிடம் சங்கரியின் தாயார் எல்லாம் பேசியிருக்கிறாள். அவர்கள் இருவரும் அவனிடம் வந்து பேசினார்கள்.

‘சங்கரிக்கு வயதுக்கு வந்த நேர சாதகம் சரியில்லையாம். இதனால் பெண் கேட்டு வரும் இடங்களில் வரன் அமையவில்லை. சங்கரியின் தங்கைக்கும் கூடக் கல்யாணமாகிவிட்டது. சுக்டன்கரும், சங்கரியின் அப்பாவும் ஒரே தணிக்கைத் துறையில் வேலை செய்தவர்களாம். இந்த வீட்டுக்கு அவர்கள் வந்த போது சங்கரிக்குப் பதினைந்து வயசிருக்குமாம். அவர் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றலாகிப் போன போதெல்லாம் குடும்பத்தைத் தூக்க முடியாமல், சங்கரியையும் அண்ணன்களையும் வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள். அவர் ஓய்வு பெற்று ஒரு வருசம் கூட இருக்கவில்லை. இங்கே இருக்கும் அண்ணன் இரண்டாவது அண்ணன். மூத்தவன் டெல்லியில்-ஓர் அக்கா-தங்கை. தங்கைக்கு இங்கே வந்து தான் கல்யாணம் செய்தார். அவர் இறந்து போன மறுவருடமே, அந்தம்மா ‘ஸ்ட்ரோக்’ வந்து படுத்துவிட்டார். கை கால் அசைக்க முடியாமல் இருந்தது. அவன் பார்த்தபோது - இப்போது தேவலையாக இருக்குது.

சங்கரிக்குக் கல்யாணம் என்று யார் மூலமாக வேனும் வரன் வந்தாலும், அண்ணனும் அண்ணியுமே தடுத்து விடுவதாக, அவள் அம்மா சொல்லி வருந்தினார்களாம். ஏதோ, நகை, பாத்திரம் என்று சேகரித்து வைத்திருக்கிறாளாம். தான் கண் மூடுமுன் கெட்ட பழக்கம் எதுவும் இல்லாத நல்ல பையனைப் பார்த்து ஒப்புவிக்க வேண்டும் என்று இருக்கிறார்களாம்.

“சுப்பய்யா, சங்கரி ரொம்ப நல்ல பெண். இங்கே வந்து தான் தமிழ் ஸ்கூலில் எஸ்.எஸ்.எல்.ஸி. முடித்தாள். உனக்கும் ஒரு துணை. அவளுக்கும் ஓர் ஆதரவு. மாட்டேன்னு சொல்லாம ஏத்துக்கப்பா...ன்னு சொன்னாங்க.”

அவன் கண்களில் நீரருவி வழிகிறது.

சூடுபட்ட குரங்கு போல் அவன் அந்த இடத்தைவிட்டு அடுத்த வாரமே காலி பண்ணிக் கொண்டு வேறு பேட்டைக்குப் போனான். அங்கிருந்து பஸ்ஸில் பள்ளிக்கூடம் வருவான். யார் கண்ணிலும் படக் கூடாது என்ற மாதிரி ஓடிப்போனான்.

ஒருநாள், பஸ்ஸில் சுக்டன்கர் அவனைப் பார்த்து விட்டார்.

“சுப்பய்யா!” என்று கத்திவிட்டு அவன் இறங்கும் இடத்தில் இறங்கினார்.

“என்னப்பா? என்ன ஆச்சு, உனக்கு? எதுக்காக இப்படி ஓடுற?... இப்ப நாங்கல்லாம் கல்யாணம் பண்ணிட்டு குடும்பம்னு சுகமா இருக்கலியா? உனக்கு என்ன பிரச்னை?” என்று கேட்டார். அவன் அறைக்கு வந்தார். ஏதேதோ ஊகங்களைக் கிளப்பி அவனைச் சந்தேகக்கண்ணால் ஆராய்ந்தார்.

“ஒ, அதெல்லாம் இல்ல சார், என்னை மன்னிச்சிடுங்க. கல்யாணம் குடும்பம்னு இல்லாம, ஆசாரிய வினோபாபாவே போல மனித குலத்துக்கு சேவை பண்ணனும்னு...”

அவர் ஆத்திரத்துடன் பல்லைக் கடித்துக் கொண்டு போனார். பிறகு, சுக்டன்கர், மகள் வீட்டுக்குச் சென்ற இடத்தில் மாரடைப்பு வந்து காலமானார் என்று கேள்விப் பட்டான்.

நன்றி கொன்ற பாவியாக, சாவித்திரியம்மாளைப் பார்க்கக்கூட அவன் போகவில்லை.

மேலும் ஒரு வருசமாயிற்று. ஒருநாள் அநுமான் மந்திர் பக்கம் ஒரு மாணவனுடன் நடந்து கொண்டிருந்தான்.

சங்கரி கையில் காய்கறிப் பையுடன் குறுக்கிட்டாள்.

“மன்னிச்சுக்குங்க..” என்றாள் தலை நிமிராமல்.

“அம்மா இறந்து போயிட்டாங்க. சாவித்திரி அம்மா தான் சொன்னாங்க, உங்களை வீட்டுக்கு வரச் சொன்னாங்க..” என்றாள்.


“ம்... அதுக்குன்னு வழில வந்து மறிக்க வேணாம்...” என்றான். அப்படி ஏன் கடுமை காட்டினான்? பொறிகடலை நடுவே கருக்கென்று கடிபடாமல் ஒன்று இருக்குமே? அப்படி... ஏன்? ஏன் அப்படி வெடுக்கென்று பேசினான்? என்ன காரணம்? பயமா? பயம் அவன் மீதே அவனுக்குப் பயம். ஏனென்று தெரியவில்லை. பயத்தில் எழுந்த வீம்பா, வீம்பில் எழுந்த பயமா? புரியவில்லை.

அந்த வருசமே மராத்வாடா கிளைக்குப் போனான். எதிர்பாரா விதமாக பேஷ்வா பார்க்கில் சாவித்திரி அம்மாவைப் பேரக் குழந்தைகளுடன் பார்த்தான்.

“சுப்பய்யா?... எப்படி இருக்கே?... உனக்குத் தெரியுமா? நீ வருவேன்னு அந்தப் பொண்ணு சங்கரி ரொம்ப எதிர்பார்த்திட்டிருந்தா. இப்ப அவங்களே இத்தனை வருசமா இருந்த வீட்டைக் காலி பண்ணிட்டுப் போயிட்டாங்க. புருசன் பெண்சாதி இரண்டு பேருக்கும் டிரான்ஸ்ஃபர் கிடச்சிடிச்சு. டெல்லிக்குப் போயிட்டாங்க...” என்றாள் வருத்தத்துடன்.

சிறிது காலத்துக்குப் பிறகு அவனும் நாக்பூர் வித்யா பீடத்துக்குப் போனான். இத்தனை வருசங்களுக்குப் பிறகு, புனேயில் ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்தான். பழைய பள்ளித் தலைவர் கங்காதர் சர்மா, “சுப்பய்யா, உனக்கு ஒரு லெட்டர் வந்திருக்கு. மூணு நாலு மாசமிருக்கும். வச்சிருக்கிறேன். ஸ்கூல் பக்கம் வா, நாளைக்கு!” என்றார்.

அந்தக் கடிதம் ஏதாக இருக்கும் என்ற யோசனையே அவனுக்கு எழவில்லை. பழைய பள்ளிக்கூடம் பத்து வருசமாகுது, பார்ப்போம் என்றுதான் போனான்.

அந்தக் கடிதம்தான் அவள் பார்த்த கடிதம்.

“அம்மா, நான் வந்து விசாரித்து மணிக்கூண்டு பக்கம் மெஸ் அம்மா சொன்னதும், இங்கே ஸ்கூலுக்குத்தான் வந்து நேராகப் போனேன். தாய்மார், பிள்ளைகளைக் காலையில் பள்ளியில் விட்டுவிட்டுப் போனால், இவள்தான் அந்தக் குழந்தைகளைத் தன் வீட்டுக்கழைத்து வந்து தாயோ தகப்பனோ மாலை, ஆறு அல்லது ஏழு மணிக்கு அழைத்துச் செல்லும் வரை வைத்துக் கொள்வாளாம். பள்ளியில் விசாரியுங்கள் என்றார்கள். நான் வாட்ச்மேன் தடுத்ததைப் பொருட்படுத்தாமல் உள்ளே போனேன். அந்த ஆபீசில், பட்டுஜிப்பா உருத்திராட்சம் ஸ்படிகம், திருநீறு குங்குமம் என்று உட்கார்ந்திருந்தான். ‘சங்கரின்னு இங்க கிரீச் வச்சிருந்தாங்களாமே’ன்னு வாயெடுத்ததும், அவன் முகம் சிவந்து விட்டது.

“யார்ரா இவங்க? ஏய்யா? எங்கேந்து வரீங்க, சங்கரி, கிங்கரின்னு, கழுத்தப் புடிச்சி வெளியே தள்ளுய்யா, வாட்ச்மேன்! வாட்ச்மேன்! சீய்! ஒரு நடத்தை கெட்ட கழிசடை, அதைத் தேடிட்டு ஆளாளா, இங்க வரானுவ? நானே அவளக் காணமேன்னு சொல்லி, அண்ணன்காரன் யாருன்னு கண்டு தகவல் சொல்லச் சொன்னேன். கேடு கெட்டது ஸ்கூலுக்குக் கெட்ட பேரு. எவங்கூட ஓடினாளோ?... உடம்பு சரியில்லன்னு டாக்டர்ட்ட சொன்னாளாம். எச்.ஐ.வி. இருந்திச்சின்னு சொல்லிகிறாங்க... கருமம்..."

அவன் கழுத்தைப் பிடிக்கப் போயிருப்பான். அதற்குள் வாட்ச்மேன் இவனை வெளியில் கொண்டு வந்து தள்ளிவிட்டான்.

“என்னால தாங்க முடியல... தாங்க முடியல. கத்தியால் குத்திச் செய்யும் கொலையைவிட மாபாதகம் இது. இந்தப் பாதகத்தைச் செய்தவன் நான். நான்... அவளுடைய நெருப்புப் புனிதத்துக்குக் குலைத்து அழித்த பின்னும் களங்கம் கற்பிக்கிறாங்களே? எந்த டாக்டர்... எவன்... இவனுகளை சம்ஹாரம் பண்ணனும்...”

கண்கள் சிவந்து வெறிபிடித்த நிலையில் அவன் வெளியே பாய்கையில் நல்ல வேளையாக ரங்கன் எதிரே வருகிறான்.

“இன்ன சாரு?... எதானம் போட்டுட்டாயா?” என்று குடிப்பது போல் சாடை காட்டுகிறான்.

அவனை ஒரு தள்ளுத்தள்ளும் போது, அவள் விரைந்து முன் வாயில் கதவைச் சாத்துகிறாள்.

“சுப்பய்யா, வேண்டாம், போவுதுப்பா, அது அவ விதி... ஆறுதல் கொள்ளு. ரங்கா, உனக்கு ஒண்னுமில்ல, நீ போ.” மாடிப்படி அறைக்கதவைத் திறந்து அங்கே அமரச் செய்கிறாள்.

“சுப்பய்யா, இப்படிப் பொங்குவதால தீர்வு இல்ல- லட்சோப லட்சம் பெண்கள், படிக்கிறாங்க வேலைக்குப் போறாங்க. ஆனா, அவுங்களுக்கு வேணுங்கற மனிச மரியாதை கிடைக்கல... ஆறுதல் கொள்ளப்பா...”

அவன் பேசாமல் உட்கார்ந்திருக்கிறான். கதவை மெள்ளச் சாத்திக் கொண்டு வருகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=உத்தரகாண்டம்/24&oldid=1022836" இலிருந்து மீள்விக்கப்பட்டது