உடற்கல்வி என்றால் என்ன/உடற்கல்வியின் சமூகவியல் கொள்கைகள்

விக்கிமூலம் இலிருந்து

களை ஏற்படுத்தி, அவர்களை சந்தோஷமாக வாழச் செய்யும் சேவையில் சிறப்பாகப் பணியாற்றுகின்றது.

இந்தக் கருத்தை சிந்தையில் பதிய வைப்பதற்காக, ஜான்டுவே எனும் மேல் நாட்டறிஞர் இப்படி கூறுகிறார். “மனிதன் மனிதனாக இருப்பது அவன் விளையாடும் போதுதான்”

“விளையாட்டு என்பது துய்மையான ஆன்மிகமான செயல் என்கிறார் பிரோபெல் என்பவர்.

இவ்வாறு மகிழ்ச்சியையும், சுதந்திரத்தையும், திருப்தியையும், மன அமைதியையும், உலக சமாதானத்தையும் தருகிற விளையாட்டானது, நல்லதையே நல்குகின்ற பொற் சுரங்கமாகும்.

இப்படிப்பட்ட விளையாட்டுக்களை, மக்கள் எதற்காக விளையாடுகிறார்கள் என்று பலர் தங்கள் கருத்துக்களைக் கூறிச் சென்றிருக்கிறார்கள். அப்படிப் பட்ட சில கொள்கைகளை இங்கே நாம் விளக்கமாகக் காண்போம்.

விளையாட்டுக் கொள்கைகள்

1. மிகுதி ஆற்றல் காெள்கை (Surplus Energy Theory)

ஜெர்மன் நாட்டுத் தத்துவஞானி ஸ்கில்லர் என்பவரும் ஆங்கில நாட்டு இயற்கைத் தத்துவவாதி. ஸ்பென்சர் என்வரும் கூறிய இக்கொள்கை, ஸ்கில்லர் ஸ்பென்சர் கொள்கை என்றே அழைக்கப்படுகிறது; அவர்களின் கூற்றுபின்வருமாறு விரித்துரைக்கப்படுகிறது.

குழந்தைகள் விளையாடுகிறார்கள் என்றால், அது மிருக உணர்ச்சியின் உற்சாகத்தால் (Spirit) உண்டாக்கப் படுவதாகும். அத்துடன், அவர்களுக்கு உள்ள மிகுதியான ஆற்றலை வெளிப்படுத்தி விடுவதற்காகவும் விளையாடுகின்றார்கள்.

பறவைகள் தங்களது அளவிலா சக்தியின் காரணமாக, குரல் கொடுத்துக் கத்திப்பாடி, சக்தியை வெளிப்படுத்தி விடுவது போல, குழந்தைகளும் விளையாடுகிறார்கள். இயற்கையாகவே, குழந்தைகள் அதிக உடல் சக்தியை சேமித்து வைத்திருப்பதால், அதைத் தீர்ப்பதற்கு வேறு வழியில்லாது போவதால், விளையாடித் தீர்த்துக் கொள்கின்றார்கள்.

அது எப்படி இருக்கிறதென்றால், நீராவியால் ஒடுகின்ற எஞ்சின் உள்ளே தேவைக்கு அதிகமான நீராவி சேர்ந்து விட்டால், அதை வெளியே போகுமாறு (குழாயை) திறந்து விட்டு, நீராவியைக் காலி செய்து எஞ்சின் கொதிகலனை (வெடித்துப் போகாமல்) காப் பாற்றுவதுபோல, குழந்தைகளும் விளையாடி, அதி சக்தியை வெளியேற்றுகிறார்கள்.

கொதிகலனிலிருந்து, வால்வைத் திருகிவிட்டு, நீராவியை வெளியேற்றி கொதிகலனைக் காப்பாற்றுகிற பழக்கத்தை இந்தக் கொள்கை உதாரணமாகக் காட்டியிருக்கிறது.

இதற்கு எதிர்ப்பு

ஏன் விளையாட்டு மக்களிடம் இடம் பெறுகிறது. எப்படி உருவாகிறது என்பதையோ இது விளக்கவில்லை. அதிக சக்தி இருக்கும்பொழுதுதான் விளையாட்டு இடம் பெறுகிறது என்கிறார்கள். ஆனால், ஒருவர் களைப்படைந்து போன பிறகும்கூட கஷ்டப்பட்டு விளையாடு வதும், அப்படிப்பட்ட உற்சாகம் ஆளுக்கு ஆள், வயதுக்கு வயது வித்தியாசப்படுவதும் நடைமுறையில் இருக்கிறதே! இதையெல்லாம் இந்தக் கொள்கை சரிவர விளக்கவில்லை.

தேவையற்ற நீராவியை தீர்மானமாக வெளியேற்றி விடுவது கொதிகலனை (Boiler)க் காப்பாற்றத்தான் என்கிறார்கள். ஆனால் குழந்தைகளிடம் உள்ள அதிகமான சக்தியை, உடலிலிருந்து அப்புறப்படுத்துவதற்காக விளையாடும்போது, உடலும் வளர்கிறது, காப்பாற்றப்படுகிறது வலிமையும் அடைகிறது என்பதை ஏனோ அவர்கள் மறந்து விட்டார்கள்.

குழந்தைகளின் விளையாட்டு அவர்களை உடலால், மனதால், உணர்வால், ஒழுக்கத்தால் உயர்த்துகிறது என்பது தான் உண்மை. இரும்பாலான எஞ்சினுக்கும் குழந்தைகளுக்கும் இணைப்பாக இந்தச் செய்தியைக் கூறுவது சரியாகப்படவில்லை.

ஆகவே, விளையாட்டு என்பது, தேகத்தில் உள்ள அதிக சக்தியை வெளிப்படுத்தி விடுவதற்காக ஆடப்படவில்லை. விளையாட்டுக்கள் உடலுக்கு ஓய்வையும், உல்லாசத்தையும், புத்துணர்ச்சியையும் புதுத்தெம்பையும், பூரிப்பையும் வழங்குகிறது என்பதால், இப்படிக் கூறுகிற இந்த மிகுதி ஆற்றல் கொள்கை, மக்கள் மத்தியிலே எடுபடாமல் போயிற்று.

2. ஆயத்தக் காெள்கை (Anticipatory Theory)

இந்தக் கொள்கையைக் கண்டுபிடித்தவராக நமக்கு அறிமுகமாகி இருக்கிறவர் பெயர் காரல் குரூஸ் என்பதாகும்.

மிருகங்கள் விளையாடுகின்றன. அதுபோலவே மனிதர்களும் விளையாடுகிறார்கள். அவர்கள் ஏன் விளையாடுகிறார்கள் என்றால், தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் அதிமுக்கியமான சந்தர்ப்பங்களை சந்திக்கத் தங்களை தயார் செய்து கொண்டு ஆயத்தப்படுத்தும் செயலில் ஈடுபடுகின்றார்கள் என்பது தான் குரூஸின் கொள்கையாகும்.

அவரது கொள்கையைப் பின்பற்றி T.P. நன் என்பவர் கூறுகின்றார். விளையாட்டு என்பது இயற்கையின் கண்டுபிடிப்பு. மனிதர்கள் தங்கள் தேகத்தில் உள்ள மிகுதியான சக்தியை வெளிப்படுத்திக் கொள்வதற்கும், வீணாக்கிவிடுவதற்காக, விளையாட்டு அமையவில்லை. மாறாக, சக்தியை செலவழித்து, தங்கள் எதிர்கால வாழ்வுக்காகத் தங்களை தயார் செய்து கொள்ளவே விளையாடுகின்றார்கள்.

இந்தக் கொள்கையின் இனிய சாராம்சம் என்னவென்றால், வயது வந்தபிறகு வாழ்க்கையை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை இளஞ்சிறார்கள் விளையாடிக் கற்றுக் கொள்கின்றார்கள். அதாவது எதிர்கால புதிர்நிறைந்த வாழ்க்கையை வெற்றிகரமாக, சந்திக்க இப்பொழுதே அவர்கள் ஆயத்தமாகி விடுகிறார்கள்.

குழந்தைகள் பொம்மைகள் வைத்துக் கொண்டு விளையாடுகின்றனர். வீட்டிலே கிடைக்கின்ற பொருள்களை வைத்துக் கொண்டு தம் வசதிக்கேற்ப விளையாடுகின்றனர்.அவர்கள் விளையாட்டுக்களில் அப்பா அம்மா விளையாட்டு; ஆசிரியர், போலிஸ்காரர், திருடன், கணவன் மனைவி கடைக்காரர் இப்படிப்பட்ட பாத்திரப் படைப்புகளுடன், கற்பனை உரையாடல்களுடன் விளையாடி மகிழ்கின்றனர்.

அதுபோலவே பூனைக்குட்டி, நாய்க்குட்டிகள், ஒன்றுக்கொன்று கடித்துக் கொண்டும், பிடித்துக் கொண்டும், ஒடித்துரத்திக் கொண்டும், பல நிலைகளில் விளையாடுவதும், தங்கள் இரையைப் பாய்ந்து பிடிக்க, கவ்விட விட்டுவிடாமல் பிடிக்க என்கிற திறன்களை வளர்த்துக் கொள்ளவே என்பதும் இக்கொள்கையின் வாதமாகும்.

அதாவது, குழந்தையின் விளையாட்டு என்பது எதிர்கால கடின வாழ்க்கையை வெற்றிகரமாக சந்திக்க மேற்கொள்கிற ஒத்திகைகள் என்றும் குறிப்பிடப்படுகிறது.

இதற்கும் மறுப்பு

விளையாட்டு என்றால் குழந்தைகளுக்கு மட்டுமே என்கிறபடி அந்த ஆயத்தக் கொள்கை அமைந்திருக்கிறது. முதியவர்கள், வயதானவர்கள் விளையாட்டில் கலந்து கொள்கிறார்களே! அவர்கள் என்ன விளையாடி எதிர்காலத்திற்காகவா தயாராகிறார்கள்! இல்லையே! விளையாட்டை பெரியவர்கள் யாரும் அவ்வாறு “சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லையே. அத்துடன் விளையாட்டானது வாழ்க்கையின் பெரும்பிரச்சினைகளை தீர்த்துவிடுவதில்லை.அதுபோலவே, குழந்தைகளும் பெரியவர்களின் செயல்களைத்தான். விளையாட்டாகப் பிரதிபலிக்கின்றார்களே ஒழிய, வேறென்ன செய்கிறார்கள் என்று பலகேள்விகளை உளநூலறிஞர்கள் எழுப்பிவிட்டு, இதுவும் சரியான முறையில் விளையாட்டுக்கு விளக்கம் தரவில்லை என்று மறுத்துவிட்டனர்.

3. பொழுதுபோக்குக் கொள்கை (Recreational Thery)

இந்தக் கொள்கையைக் கண்டுபிடித்தவர்கள் என்ற பெருமைக்குரியவர்கள் கேம்ஸ்பிரபு மற்றும் G.W.T. பேட்ரிக் ஆவார்கள்.

இவர்கள் கொள்கையானது, “விளையாட்டு என்பது புதிய சக்தியை உற்பத்திசெய்கிறது”என்பதுதான்.

தேகத்தின் மிகுதியான சக்தியை விளையாட்டு செலவழிக்கவில்லை. அதற்கும் மாறாக, விளையாட்டு சக்தியை உற்பத்தி செய்கிறது. களைப்பை அகற்றுகிறது. கடினமான வேலைக்குப் பிறகு, விளையாட்டில் ஈடுபடுகிறவர்களுக்கு பொழுதைப் போக்கி, புத்துணர்ச்சியை அளிக்கிறது.

அதாவது, வாழ்க்கையில் ஏற்படும் மந்த சூழ்நிலையை, எரிச்சல் நிலையை விலக்கி, ஒரு சுவையான, சுகமான மாற்றத்தை விளையாட்டு ஏற்படுத்துகிறது என்கிறது பொழுதுபோக்குக் கொள்கை.

நாம் வாழ்வது நவீன காலம். நாகரிகக் காலம். நுணுக்கமான விரயங்கள் அதிகம். அதற்கு அதிகக் கவனம் தேவைப்படுகிறது.அதனால் நுண்ணிய புலன்கள் எல்லாம் அதிகமாக உழைத்து, விரைவில் களைத்துப் போகின்றன. அப்படிப்பட்ட களைத்த அவயவங்களின் அசதியைப் போக்கி, ஆனந்தத்தை விளையாட்டுக்கள் ஊட்டுகின்றன.

பொழுதுபோக்கு என்பது உடலுக்கு உள்ளத்திற்கும் அடிப்படையான தேவையாகும். ஆகவே விளையாட்டு என்பது ஒய்வையும் உல்லாசப் பொழுது போக்கையும் வழங்குகிறது.அத்துடன், மனிதர்களது வாழ்வில் மண்டிக்கிடக்கும் அதிபயங்கரமான சூழ்நிலைகளிலிருந்தும் விடுவித்து வெளிக்கொண்டு வந்து, விழுமிய மகிழ்ச்சியையும் உண்டுபண்ணுகிறது.

இதையும் மறுத்து:-

இந்தக் கொள்கைக்கும் எதிர்ப்பும் மறுப்பும் ஏராளமாக வந்தன. அவற்றையும் இங்கே தொகுத்துக் காண்போம்.

குழந்தைகளை போலவே வயதானவர்களும் விளையாட்டுகளில் அதிகமாக ஈடுபடுகின்றார்கள். அதாவது அவர்கள் தாங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கிற வறட்சிகரமான மகிழ்ச்சி சூழ்நிலையிலிருந்தும், சுவையற்ற வாழ்க்கையையும் மாற்றி அமைக்கவே அவர்கள் விளையாடுகிறார்கள் என்கிறார்கள்.

ஆனால், அதிகமாக குழந்தைகள் விளையாடுகிறார்கள் என்றால், அவர்கள் வாழ்க்கையில் கவலை, குழப்பம், துன்பம், சுவையற்ற சூழ்நிலை, கரைகடந்த கஷ்டநிலை என்றெல்லாம் இல்லையே! பின் அவர்கள் ஏன் அதிகமாக விளையாட்டில் ஈடுபடுகின்றார்கள்?

அதுவும் தவிர, குழந்தைகள் விளையாட்டில் பங்கு பெறுகிறநிலை, வயதாகிறபொழுது குறைந்துகொண்டே வருகிறதே? ஆகவே, இந்தக் கொள்கையையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றே உளநூல் அறிஞர்கள் உரைத்துவிட்டனர்.

4. புனர்வினை காெள்கை (Recapitulatory Theory)

பழைய அனுபவங்களையும், வாழ்க்கைச் சூழ்நிலைகளையும் நினைவுபடுத்தி, அவற்றைத் தொடர்ந்து செய்வதிலே அடைகிற இன்பமே விளையாட்டில் ஈடுபட வைக்கிறது என்ற கருத்துக் கொள்கையாக வடித்துத் தந்தவர் ஸ்டேன்லிஹால் என்பவர்.

மிகுதி ஆற்றல் இருப்பதால் மக்கள் விளையாடவில்லை. எதிர்கால வாழ்க்கைக்குத் தங்கள் ஆயத்தப்படுத்திக் கொள்வதற்காகவும் விளையாடவில்லை. பொழுதை போக்கிடவும் விளையாடவில்லை.

தங்கள் மூதாதையர் வாழ்ந்த வாழ்க்கையை மீண்டும் நினைவுபடுத்தி, தாங்களும் செய்து பார்ப்பதிலே சுவை ஏற்படக் கண்டு, தொடர்ந்து செய்கிறார்கள். அவைகள் விளையாட்டுக்களாக பரிணமித்திருக்கின்றன.

மனிதர்கள் எதிர்கால வாழ்க்கைக்காக ஒத்திகை பார்க்கவே விளையாடுகின்றார்கள் என்ற கொள்கையையும் ஹால் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் கடந்த காலத்தைக் கருத்தில் ஏற்றுக்கொண்டு கண்ணுக்கு நேரே செய்து களிக்கிறார்கள் என்று கூறிய அவர் தன் கருத்துக்கு ஒரு சான்றையும் எடுத்துக் காட்டுகிறார்.

இன்றைய மக்கள் நாகரிகத்தில் திளைத்தாலும், அவர்கள் வாழ்க்கை ஆதிகால மக்கள் நடத்திய செய்முறைகளிலிருந்து முற்றிலுமாக விடுபடாமல்தான் தொடர்கிறது. வேட்டைக்குச் சென்றது, வில் அம்பைப் பயன்படுத்தியது.நீந்தியது, ஒடி ஒளிந்து விளையாடியது, விரட்டிப் பிடித்தது, கல்லெறிந்தது, குகைகள் கட்டியது உறங்கப் பாதுகாப்பு இடம் உருவாக்கிக் கொண்டது போன்ற பழைய காரியங்களின் பிரதிபலிப்பாகவே இன்றைய நிகழ்ச்சிகள் நம்மிடையே நிறைந்துள்ளதை ஹால் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றார்கள்.

ஆதிகால மக்களின் காட்டுமிராண்டித் தனமான நினைவும் செயல்களும் நம்மை நிழலாகத் தொடர்கின்றன. எப்படி தெரியுமா? சண்டை போடும் உணர்வு, போரிடும் வெறி, எறிந்து மகிழும் பழக்கம், தாண்டிக்குதித்து மகிழும் ஆசை போன்ற பரம்பரைக் குணம் மனிதர்களை விட்டுப் போகவில்லையே!

அதனால்தான், விளையாட்டு என்பது பழங்கால மனிதர்களிடையே இருந்த உணர்வுகளில் ஊறிய மனதுக்கு, திருப்தி அளிப்பதாக அமைந்துள்ளது. இதைப் போய் எதிர்கால ஆயத்தப் பயிற்சி என்பது நியாயமற்றது, கற்பனையானது, என்றும் சாடுகின்றார்.

இதையும் மறுக்கின்றார்கள் பலர் ஒரு நல்ல பாடகனின் மகன், சிறந்த பாடகனாக வருவதரிது. அது போலவே, பழைய சமூகப் பண்பாடுகள் மக்களிடையே அப்படியே தொடர்கின்றன என்ற தத்துவத்திற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்பதால், இதையும் ஏற்றுக் கொள்ள இயலாது என்றும் ஒதுக்கினார்.

5. உணர்வுப் பயிற்சி கொள்கை (Instinct Practice Theory)

நமக்குள்ளே ஏற்படுகின்ற உணர்வுகள் எல்லாம் நாம் செய்கின்ற செயல்களை உருவாக்கி நடத்துவனவாக உள்ளன. ஆகவே, விளையாட்டுக்கள் எல்லாம், முழுமை பெறாத உணர்வுகள் வடித்து வைத்த செயல்களாக உருவகம் பெற்றன என்கிறார் இந்தக் கொள்கையை உருவாக்கிய பேராசிரியர் மெக்டொகல் என்பவர்.

விளையாட்டுக்கள் எல்லாம் உணர்ச்சிகளின் வெளிப்பாடே சண்டை போடும் உணர்வுகள், சமத்கார மாக செயல்பட்டு உருவாக்கி மகிழும் உணர்வுகள், தம்மை தரணியில் உயர்த்திக் கொள்ளவேண்டும் என்று தலை தூக்கி நிற்கிற சுய மதிப்பு உணர்வுகள், பிறருடன் போட்டியிட விரும்புகிற உணர்வுகள் எல்லாம் விளையாட்டுக்களிடையே புகுந்து விழிப்புணர்ச்சியும் வேகமும் பெற்றுக்கொள்கின்றன. சிறப்புப் பயிற்சிகளைப் பெறுகின்றன.

இப்படி தனது சமூக உளவியல், என்ற நூலில் பேராசிரியர் கூறுகின்றார். என்றாலும், அவர் கூறியது போல, பல வகையான விளையாட்டுக்கள் எல்லாம், போட்டிக்காகவும், விரோதம் காரணமாகவும் விளைந்திருப்பதாக விளக்கம் கூறியது சரியல்ல. விளையாட்டு எல்லாம் சாதாரணமானவைகள் தாமே என்று மறுத்துரைப்போரும் உண்டு.

6. உணர்ச்சி வெளிப்பாட்டுக் கொள்கை (Cathartic Theory)

இந்தக் கொள்கைக்குத் தந்தையாக விளங்குபவர் அரிஸ்டாட்டில் ஆவார். இவரது கொள்கையானது, விளையாட்டுச் செயல்கள்யாவும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் இயல்புகளைக் கொண்டவை. அவையே இயற்கையானவை என்று விளக்கம் கூறுகிறது.

வாழ்க்கையில் விளைகின்ற வேண்டத்தகாத நிகழ்ச்சிகள் மனிதர்களை வேதனைக்குள்ளாக்குகின்றன. கலக்கம், கண்ணீர், சோதனை எல்லாம், மனிதரது இதயத்தை வேதனைப்படுத்துகின்றன. ஏதாவது துன்பம் கலந்த நாடகங்களைப்பர்க்கும்போது அந்த வேதனைகள் வடிந்து வெளியேற வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன.

ஆகவே, துன்ப நாடகங்கள் மக்களது துயரங்களைத் துடைத்து எறிவது போல, உடல் துன்பங்களும் உதறப்படுவற்கு விளையாட்டுச் செயல்கள் உதவுகின்றன. ஒத்துழைக்கின்றன. உறுதியளிக்கின்றன.

எனவே, அரிஸ்டாட்டிலின் கொள்கையாவது இயற்கையான முறையில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் போது சக்தியை சிதறடிக்கும் சந்தர்ப்பம் குறைந்து, வேதனை மனநிலை வெளியேறி அந்தப் பகுதிக்குள்ளே புதுசக்தியும் பெருகி வருகிற உயர்ந்தநிலை உருவடைகிறது என்பதுதான்.

T.P. நன் என்பவர் இவ்வாறு எழுதுகிறார். “மனிதர்கள் தங்களது பரம்பரைக் குணங்களான கொடுமை உணர்வுகளையும், குற்றம் இழைக்கும் பண்புகளையும், தீமை செய்யும் இயல்புகளையும் மாற்றிக் கொண்டுவிட முடியாது; இருந்தாலும், விளையாடுவதன் மூலமாக, குற்றத்தை குறைக்கலாம், தீமைகளைத் தவிர்க்கலாம். கொடுமைகளை இடம் பெயர்த்து விடலாம். அப்படிச் செய்வதுடன், அருமையான நீதிக்குணங்களையும் அவர்களது நெஞ்சுக்களே நிலைநாட்டி விடலாம்!”

இந்தக் கொள்கையில் அதிகமாகக் கொள்கைதான் இடம்பெற்றிருக்கிறதே தவிர, நடைமுறைப்படுத்தும் உண்மையான வழிகள் உரைக்கப்படவில்லை என்று குறை கூறுவாரும் உண்டு.

இந்த ஆறு கொள்கைகளு(Negative Transfer)க்கும் மேலே, இன்னும் பல கொள்கைகளும் விளையாட்டுக்கென்று கூறப்பட்டுள்ளன. அவற்றையும் அறிந்து கொள்வது நமக்கு நல்ல நலம் பயக்கும். 

1.விளையாட்டுக்களானது மனதுக்குள்ளே மறைந்து கிடக்கும் நிறைவேறாத ஆசைகளை நிவர்த்தி செய்து கொள்ளவும் நிதர்சனமாக அறிந்து மகிந்து கொள்ளவும், திருப்தி அடைந்து கொள்ளவும் உதவுகின்றன. ஆகவே, இதை உளவியலின்படி, கனவு நிலைக் கொள்கை (Psycho-analytic Theory) என்றும் கூறுவார்கள்.

கனவு நிலை என்பது உளவியலின்படி, நிலை தாழ்ந்தது. குழப்பி விடுவது போன்றே விளக்கம் பெறுவதால், விளையாட்டுக்கள் எல்லாம், நினைவுகளினால்தான் நிகழ்கின்றனவே தவிர, கனவுகளுக்காக ஆட்படுவதில்லை என்ற காரணம் காட்டி, இந்தக் கொள்கையைக் குறை கூறுவாரும் உண்டு.

2. மனிதர்கள் தங்களது ஆற்றலை வெளிப்படுத்திக் கொண்டு, சமுதாயத்தில் ஒரு அந்தஸ்தைப் பெற உதவுவதற்காக பல சந்தர்ப்பங்களை விளையாட்டுக்கள் ஏற்படுத்தித் தருகின்றன; இதை சுய வெளிப்பாட்டுக் காெள்கை (Self expression Theory) என்று கூறுகின்றார்கள்.

3. சமூகத் தொடர்புக் கொள்கை என்ற ஒன்றும் உள்ளது. மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும், சமுதாயத்தில் தாங்கள் மதிக்கப்பட வேண்டும் என்றே விரும்புகின்றனர். இந்த ஆசையை, விளையாட்டு மூலம் நிறைவேற்றிக் கொள்ள முன்வருகின்றனர்.

விளையாட்டில் ஈடுபடுகிறபோது, பலதரப்பட்ட ஆண்கள், பெண்களுடன் பழகும் வாய்ப்புகள் நிறையவே கிடைக்கின்றன. அவர்கள் பழகும் வட்டம் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்ட வருகிறது. அதன் காரணமாக, அவர்களுடைய சமூகப் பழக்கவழக்கங்களும், பண்பாடு களும், நடத்தைகளும் செம்மையடைகின்றன. செழுமை பெறுகின்றன.

ஆகவே, விளையாட்டானது சமூகத் தொடர்பை ஏற்படுத்தி, சகலவிதமான சந்தோஷ அனுபவ வாய்ப்புக்களை வாரி வழங்குகின்றன. என்று இந்தக் கொள்கை எடுப்பாக பறை சாற்றுகிறது.

4. வாழ்வுக் கொள்கை (Life Theory) என்றும் ஒரு கொள்கை விளையாட்டுக்கு உண்டாகியிருக்கிறது.இந்தக் கொள்கையானது ஜான்டீவே என்பாரது கல்வித் தத்துவத்துடன் தொடர்புடையதாகத் திகழ்கிறது.

உயிர் வாழ்கிற உயிரினங்களில் சுறுசுறுப்பாக வாழ விரும்புகிற உயிரினங்கள் எல்லாம், விளையாட்டில் ஈடுபடுகின்றன. அதாவது உடலில் உள்ள உறுப்புக்களில் அப்படிப்பட்ட செயல்களே, வாழ்க்கையின் அடித்தளமாகவும், ஆதாரமாகவும் அமைகின்றன. இவ்வாறு ஏற்படுகிற செயல்களின் செம்மையான வடிவமே, விளையாட்டுச் செயல்களாக பரிணமித்திருக்கின்றன.

தற்கால சிந்தனையாளர்கள், இந்த வாழ்வுக் கொள்கையே, ஏற்றுக் கொள்ளக் கூடியது, எடுப்பான கொள்கை என்று ஒப்புக்கொண்டிருக்கின்றார்கள்.

குறிப்பு: நாம் மேலே விவரித்தக் கொள்கைகள் எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாதது போல் தோன்றினாலும், ஒவ்வொரு கொள்கையும் விளையாட்டுக்கள் பற்றிய நல்லதொரு விளக்கமாகவே இருக்கின்றன. ஒரு கொள்கைக்கு மற்றொன்று உறுதுணையாகவும், ஒத்துப் போவது போல் தான் அமைந்திருப்பது, விளையாட்டினை விமரிசையாக விளக்கும் தன்மையில் விளங்குகின்றன. 

உடற்கல்வியும் உணர்ச்சிகளும் (Emotions and Physical Education)

உணர்ச்சிகள் என்றால், பயம், மகிழ்ச்சி, கோபம், அன்பு, வருத்தம் போன்ற வெளிப்பாடுகள் என்று மக்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இதையே இன்னும் ஆழமான அர்த்தத்திலும் கூறுவார்கள் மகிழ்ச்சி (joy) என்பதை ஆனந்தம் (Pleasure) என்பதாகக் கூறுவார்கள்.ஆகவே, உணர்ச்சிகள் என்பவை தெளிவானவை சாதாரண இயல்புடையவை எனவும் கருதப்படுகின்றன.

Emotion என்ற ஆங்கில வார்த்தையானது, Emyvere என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். அந்த எமிவிரி என்ற கிரேக்கச் சொல்லுக்கு, இயக்கம் அல்லது அசைவு (Movement) என்பது பொருளாகும்.

ஒழுங்காக இணக்கமுறப் பணியாற்றிக் கொண்டிருக்கும் உறுப்புகளிடையே உணர்ச்சிகள் ஊடாடி நுழையும்பொழுது, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மாற்றம் ஏற்படுகிறதே, அதைத்தான் அசைவு என்ற இந்தச்சொல் விளக்கிக் காட்டுகிறது.

இவ்வாறு ஏற்படுகின்ற அசைவும் இயக்கமும், எதிராக நின்று இயங்குகிற செயல்களுக்கு ஏற்ப, போராடும் பாங்கினைப் பிறப்பிக்க உதவுகின்றன என்று நாம் புரிந்து கொள்ளலாம்.

உணர்ச்சிகளுக்கு ஒரு விளக்கம்

உணர்ச்சிகள் என்பவை உடலில் உள்ள சுரப்பிகளிலும் மென்மையான தசைகளிலும் குறிப்பிட்ட மாற்றம் பெற்று ஏற்படுத்துகிற வினைகளால், உடலியக்கத்திலும் மன இயக்கத்திலும், மாறுபட்ட செயல்களை உருவாக்கி மன சிலிர்ப்பினை துரிதமாக ஏற்படுத்துகின்ற காரியம்” என்று யங் என்பவர் விளக்குகிறார்.

“உணர்ச்சிகள் என்பவை உடலோடு பிறந்தவை. குழப்பமான சூழ்நிலைகளில், உடல் முழுவதும் ஒன்று சேர்ந்து கொண்டு, அந்தந்த நிலைமைக்கேற்ப தங்கள் எதிர்ப்பையும் இணக்கத்தையும் வெளிப்படுத்துகின்ற தன்மையே உணர்ச்சிகளாக அமைகின்றன. அத்தகைய உணர்ச்சிகள், சுரப்பிகள், வயிற்றுப் பகுதிகள், மற்றும் நரம்புப் பகுதிகள் இவற்றினிடையே மாற்றங்களை ஏற்படுத்திவிடுகின்றன. இப்படி ஏற்படுகின்ற மாற்றங்கள் எல்லாம் தனிப்பட்ட மனிதர்களுக்கிடையே வித்தியாசமாக நிகழ்வதும் உண்டு” என்று சேண்டிபோர்டு என்ற அறிஞர் விளக்குகிறார்.

ஆகவே, உணர்ச்சிகள் என்பவை இயற்கையாக உடலோடு பிறந்தவை. அவை குறிப்பிட்ட ஒரு அமைப்போடுதான் இயங்குகின்றன. அவை உடல் செயல்பாட்டின் மூலம் வெளிப்படுகின்றன. அவை உடல் இயக்கமாகவே மாறி விடுகின்றதன். மூலம், உடலைப் பாதுகாக்கும் எதிர்வினைச் செயல்களாகவே வருகின்றன என்று நாம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

உடற்கல்வி ஆசிரியர்கள்:

உடற்கல்வி ஆசிரியர்கள் உணர்ச்சிகள் பற்றிய முக்கிய குறிப்பு ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

உணர்ச்சிகள் என்பவை வெளியேயிருந்து உடலுக்குள்ளே வந்து விழுந்து விடுவதில்லை. அவை உடலுக் குள்ளே தோன்றி, உடலுறுப்புக்களின் ஒன்றிய ஒருங்கிணைந்த இயக்கத்தால் வெளிப்படும் பாதுகாப்புச் சக்தி முறைகளாகும்.

இப்படிப்பட்ட உணர்ச்சிகளை திறப்படுத்தி, அதன் மூலம் கட்டுக்கோப்பான வளர்ச்சியைப் பெறுமாறு, குழந்தைகளுக்கு விளையாட்டுச் செயல்களை ஏற்படுத்தி, வளர்த்திட முயல வேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலையை உருவாக்கிக் கற்பிக்க வேண்டும்.

சில திறன்களைக் கற்பிக்கும்போது, பிள்ளைகள் பய உணர்ச்சியால், பின் வாங்கிப்போவதும் உண்டு. கற்க முன் வராமல் வெறுப்படைவதும் உண்டு வெட்கத்தால் கற்றுக் கொள்ள இயலாமற்போவதும் உண்டு.

அப்படிப்பட்ட குழந்தைகளின் அச்சம் அகற்றி, திறன்களை எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டி, உணர்ச்சி பூர்வமாகக் கற்றுக் கொள்ள அன்புடன் ஆசிரியர்கள் வழிகாட்டவேண்டும்.

வெறுப்பு, பயம், கோபம் போன்ற உணர்வுகள் செயல்படுவதிலிருந்து சற்று பின் வாங்கச் செய்யும் பண்புகளாகும். அல்லது இயற்கையாகவே, எதிர் மறையாகவே செயல்படவும் தூண்டிவிடுவதாகும்.

இன்பமயமான உணர்வுகளான சந்தோஷம், அன்பு இரக்கம், மகிழ்ச்சிகரமாக செயல்பட உதவும். அப்படிப்பட்ட உணர்வுகள் அழகான நடத்தைகளை ஏற்படுத்தி, சமுதாயச் செழுமைக்கு உதவுவனவாகவும் உருவாக்கிவிடும்.

இப்படிப்பட்ட அடிப்படை உணர்வுகளை ஆராய்ந்து, பயம், எரிச்சல், கோபம் போன்றவற்றை அகற்றி, அந்தக் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை ஊட்டி, அதில் ஆழ்ந்த பற்றினை விளைவித்து, ஒற்றுமையை நிலை நாட்ட ஆசிரியர் உதவ வேண்டும்.

உடற் கல்வித் துறையினருக்கு, உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, உபயோகமான வழிகளில் வழி நடத்திச் செல்லும் வாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்றன.

குழந்தையை ‘உடலால் மனதால்’ என்று பிரித்து தனிமைப்படுத்தாமல், முழுமையான குழந்தை என்று கண்டுகொண்டு, அவர்களின் உடலையும் உணர்வுகளையும் செம்மையாக்கிட, சிறப்பான பணிகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.

ஏனென்றால், நோய் வாய்ப்பட்ட உடலோ அல்லது கட்டுப்பாடற்ற மனமோ, எதுவும் சரிவர செயல்படுத்த விடாமற் செய்து விடும்.

குழந்தைகளில் உணர்வுகளை ஊகித்து அறிந்து, அவர்களின் சூழ்ந்து கிடக்கும் சக்தி திறமை போன்றவற்றை அறிந்து, அதற்கேற்ப நடைமுறைப்படுத்த வேண்டும். அவர்களின் உணர்ச்சிக்குட்பட்ட வளர்ச்சிதான், உலக வாழ்வை சந்திக்கக் கூடிய சக்தியையும் திறமையையும் வளர்த்து விடுகிறது என்பதை ஆசிரியர்கள் மறந்துவிடக்கூடாது.

இப்படிப்பட்ட இதமான காரியத்தைத் தான் விளையாட்டுக்கள் ஏற்படுத்தி உதவுகின்றன.மகிழ்ச்சியும் சந்தோஷமும் உடற்பயிற்சியிலும் கற்கும் நேரத்திலும் கலந்து ஏற்படுகிறபோது, கற்பதில் அதிக வேகம் ஏற்படுகிறது என்பதால், அந்த சூழ்நிலையை ஆசிரியர்கள் அமைத்துத் தருவது அறிவார்ந்த செயலாகும்.

உடற் கல்வித் துறையின் உன்னதம்

ஒரு குழந்தையின் பலம் என்ன, பலஹீனம் எவ்வளவு என்பதை உடற்கல்வி மூலமாக எளிதில் கண்டு கொள்ள முடியும் குழந்தைகளின் பயங்கொள்ளித்தனம், தாழ்வு மனப்பான்மை, நடுக்க உணர்வு. எதற்கும் பின்வாங்கும் அச்சம், இவற்றை கண்டு கொண்டு, அவற்றை அகற்றி, ஆற்றலை வளர்க்கவும் உடற்கல்வித்துறை உதவுகிறது.

வகுப்பறைகளில் மாணவர்களின் வளத்தையும் வளர்ச்சியையும் கண்டு கொள்ள இயலும். ஆனால் விளையாட்டு மைதானங்களில், அவர்களின் எழுச்சியையும் ஏற்றமான உணர்ச்சிகளையும் இனம் கண்டு கொள்ள முடியும்.அப்படிப்பட்ட சூழ்நிலைகளே ஒருவரை உயர்ந்த லட்சியவாதியாக மாற்றுகின்றன. அவைகளே ஆதரவைத் தந்து அற்புதமான துண்டுகோலாகவும் அமைந்து உதவுகின்றன.

உளவியலும் உடற்கல்வியும்

உடற்கல்வித்துறையின் உயர்தரமான வளர்ச்சிக்கு உளவியல் கொள்கைகள் உற்சாகமாக உதவிவருகின்றன.

மனிதர்கள் நரம்புகள் தசைகளின் நன்கிணைந்த ஆக்கத்தால், உடல் உணர்வு ஒன்றுபட்ட செயலூக்கத்தால் ஆக்கப்பட்டிருக்கின்றனர். அதனால், அடிப்படை செயல்களின் தரமான சிறப்புகளால் தான், எதிர்பார்த்த குணங்களை எதிர்பார்க்க முடியும் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. அதுவே, உடற்கல்வியின் ஆதாரமான செயலாக விளங்குகிறது.

உடல் செயல்களுக்கு மனநிலையும் உதவியாக வேண்டும்.இல்லையேல், எதிர்பார்த்தது எதுவும் இதமாக நடைபெறாது என்பதால், ஏற்கக் கூடிய சில உதவும் குறிப்புகளை இங்கே காண்போம்:

1. ஒரு குழந்தையை நாம் தனியாகப் பிரித்துப் பார்க்கக் கூடாத, உடலால், மனதால் உணர்வால் ஒருங்கிணைந்து செயல்படுகின்ற கூட்டுக் குணங்கள் கொண்டதுதான் ஒரு குழந்தைஎன்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

உடற்கல்வித் துறை செயல்களில் ஒரு குழந்தை முழுமையாக (Whole) ஈடுபட வேண்டும். அப்பொழுது தான் ஆற்றல் வளருகிறபோதே ஆண்மையும் ஆளுமையும் வளர்வதற்கு ஏதவாக அமையும். ஆகவே, உடல் வளர்ச்சிக்காக மனதையோ, மன வளர்ச்சிக்காக உடலையோ பறிகொடுத்துப் பாழாக்கிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

2. எல்லா விதமான உடற்பயிற்சி செயல்களும், விளையாட்டுக்களும் உணர்ச்சிகளை ஒன்றுபடுத்தி, உறுதிப்படுத்தி, உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, ஆளுகின்ற வலிமையை வழங்குகின்றன. அப்படிப்பட்ட உடல் மனஉறுதியை உருவாக்கும். வழிவகைகளில் முனைந்து செயல்படுத்திடவேண்டும்.

3. உடலில் தோன்றுகின்ற எல்லா விதமான எதிர் செயல்களும் திடீர் செயல்களும் (Reflexes) நன்கு திறம்பட செயல்படக்கூடிய அளவில் வளர்வதால்தான், திறமைகள் மிகுதியாகின்றன. அவற்றை ஆட்படுத்துகின்ற தன்மை நரம்புகளுக்கே உண்டு. அத்தகைய நரம்பு மண்டலத்தை வலிமைப்படுத்திவிடுவதால், இயக்கங்கள் எளிதாகின்றன. செயல்கள் செழுமை கொள்கின்றன. எனவே, குழந்தைகள் எளிதாக இயங்க, அதனை ஆட்டுவிக்கின்ற நரம்பு மண்டலம் வலிமை பெற, போதுமான வாய்ப்புக்களை வழங்கிடவேண்டும்.

4.சிறப்பான கல்விமுறைக்கு, கற்பவர்களின் ஆயத்த நிலை மிகவும் அவசியமானதாகும். குழந்தைகளைக் கற்பதற்கு ஆயத்தப்படுத்துகிற காரியத்தை, உடற்கல்வி ஏற்று எடுப்பாகவே செய்து வருகிறது.

உடலாலும் மனதாலும் குழந்தைகளை தயார் செய்வதுடன், கற்கும் செயலில் கனிவான முன்னேற்றத்தை அளித்து, அவர்கள் எதிர்காலத்தில் தேர்ந்தவர்களாக உருவாக்கும் மேன்மையையும் கொடுக்கிறது. அப்படிப்பட்ட முன்னேற்றத்திற்குத் துண்டுகோலாக, பின்வரும் செயல்கள் துணைபுரிகின்றன.

1. பரிசுகளும் பெருமைகளும் (Awards & Rewards)

2. புகழ்சியும் பாராட்டுகளும் (Appreciation and praise)

3 கற்பிக்கும் துணைப்பொருட்களும் சிறந்த சாதனங்களும் (Better equipment and Teaching aids)

4.வகுப்பறையில் அல்லது விளையாட்டு வகுப்பில் சிறப்பான நடத்து முறை

5.ஆசிரியரின் ஆளுமை

6.சிறப்பான கற்பிக்கும் முறை

7.குழந்தைகளே நன்கு ஆர்வத்துடன் கற்றுக்கெள்ள முன் வருவது போன்ற ஆர்வம் ஊட்டும் செயல்கள்.

சிறு குறிப்பு

குழந்தைகளுக்கு ஆர்வம் ஊட்டுவது அவசியம் தான்.ஆனால், அவர்களின் சக்திக்கு மேலாக செயல்படத் தூண்டுவது தவறான அணுகு முறையாகும். அவர்களின் ஆர்வத்திற்குப் பரிசும், பணமும், புகழும் பாராட்டும் உதவுகிறது என்றாலும், அதற்காக, சக்திக்கு மீறி அவர்களை வற்புறுத்தி ஈடுபடுத்தவே கூடாது.

மேலே கூறிய அத்தனைத் துண்டும் சாதனங்களும், வயது வரம்புக் கேற்றவாறு வித்தியாசப்படுகின்றன என்பதையும் கற்பிப்பவர்கள் மறந்துவிடக் கூடாது.

5. தனிப்பட்ட ஒருவரின் செயல் முறையானது, எந்த அளவுக்குத் தொடர வேண்டும், எந்த அளவிலே நிறுத்த வேண்டும் என்பதை அறிந்து கொண்டு தான் தொடர வேண்டும்.

ஒரு காரியத்தில் திருப்தி நிலை என்ற ஒன்று உண்டு. அந்தத் திருப்தி நிலையை அறிந்து கெள்ளும் ஆற்றலை, உடற்கல்வியும் விளையாட்டுக்களும் வழங்குகின்றன.

6.அடிப்படை சிறப்பு செயல்களை (Motor skills) நன்கு வளர்ப்பதுடன், அதன் மூலம் சிறப்பான திறமைகளை வளர்ப்பது தான் உடற்கல்வியின் சிறப்புச் செயலாக விளங்குகிறது. அப்படிப்பட்ட முறைகளே, கற்பதில் தெளிவையும் வலிவையும் ஊட்டி உற்சாகப்படுத்துகின்றன.

(அ) என்ன காரியம் செய்யப்போகிறோம் என்பதை ஆரம்பத்திலேயே குழந்தைகளுக்குத் தெளிவாக விளக்கி விட வேண்டும். இதனால், குழந்தைகள் களிப்புடனும் கருத்துடனும் கற்கின்ற ஆர்வத்துடன் கலந்துகொள்ளும் சூழ்நிலை அமைகிறது.

(ஆ) செய்யப்போகிற செயலினை பகுதி பகுதியாகக் கற்பிக்கலாம். அல்லது முழுமையாகவே கற்றுத் தந்து விடலாம். இதனை ஆசிரியரே செய்துகாட்டும் போது, குழந்தைகளுக்குத் தெளிவாகப் புரிந்து கொள்கிற வாய்ப்பும் நிறையவே கிடைக்கிறது.

வாயால் விளக்குவதைவிட,செயல்மூலம் காட்டுகிறபோது, கற்றுக் கொள்ளும் திறன் மிகுதியாகவே கிடைக்கிறது.

(இ) ஒரு சில செயல்களை பகுதி பகுதியாக செய்து காட்டமுடியாது.அதாவது கம்பிமேல் உருளல், கம்பியில் சுற்றல், நாட்டிய முத்திரைகள் எல்லாம் முழுமையாகச் செய்து காட்டக் கூடிய காரியங்களாகும்.

ஆகவே, பகுதி முழுமை முறை, முழுமை முறை என்பனவற்றில் செய்து காட்டுகையில், இடத்திற்கேற்பப் பயன்படுத்திக் கொள்ளலாம். எந்தக் காரியமும் கற்பிப்பவரின் ஆர்வத்தாலேதான் சிறப்பாக அமையும்.

(ஈ) ஒரு திறமையைக் கற்பித்தவுடன், அதற்கு இயைபான ஒற்றுமையான மற்றொரு திறமையையே கற்பிக்க வேண்டும். எதிர்மாறான திறமைகளை இணைத்துச் செய்து காட்டும் போது, கற்பவர்கள் கஷ்டப்படுவார்கள். அந்தக் காரியமும் வெற்றிகரமாகவும் ஆக முடியாது. ஆகவே ஆசிரியர்கள் திறமைகளின் தொடர்புகளை அறிந்து கொண்டு, அவற்றின் வளத்திற்கேற்ப வகைப்படுத்தி, கற்றுத் தரல் வேண்டும்.

(உ) கற்றுக் கொள்பவர்கள் திறமையில் தேர்ச்சியில் வளர்ந்து கொண்டே வருகிறபோது, வளராநிலை (Staleness) என்ற ஒரு நிலை ஏற்படுவதுண்டு. அப்படிப்பட்ட வளராநிலை அமைகின்ற சூழ்நிலை ஏற்படுகிறபோது, நிறுத்திவிடவேண்டும்.வேறுபல சூழ்நிலையை அமைத்து, உற்சாகப்படுத்திடவேண்டும். கற்பவர்களுக்கு மனக்களைப்பும் சலிப்பும் ஏற்படாதவாறு, வெறுப்பும் குறுகுறுப்பும் உண்டாகாதவாறு, கற்பித்திடவேண்டும்.

இத்தகைய சூழ்நிலைகள் எப்படி அமையும் என்றால், அதற்கும் பல காரணங்களை அறிஞர்கள் கூறியிருக்கின்றனர். அந்தக் காரணங்களையும் அறிந்து கொள்வது நன்மை பயக்கும்.

வளராநிலை ஏற்படுத்துகின்ற சூழ்நிலைகள்

முந்தைய கற்பித்தல் அவ்வளவாகக் கற்பவர்களுக்கு திருப்தியும் மகிழ்ச்சியும் ஏற்படுத்தாமல் இருத்தல்.

அதிகமாகக் கற்றதால் அல்லது அதிகமான போதனைகளால் மனக்களைப்பு, உடல் களைப்பு ஏற்பட்டு விடுதல்.

கற்பதில் முழுமையாகக் கவனம் செலுத்த முடியாது இருத்தல்.

அடிக்கடி ஆசிரியர்களை மாற்றிக் கொண்டிருத்தல். ஆசிரியர்களும் கற்பிக்கும்போது, அடிக்கடி கற்பிக்கும் முறைகளை மாற்றி விடுதல்.

சொல்கின்ற அல்லது கற்பிக்கின்ற திறமைகளை, அடிக்கடி நினைவுபடுத்தாமல், அப்படியே விட்டுவிடுதல், அல்லது நோய்வாய்ப்படுதல் போன்றவற்றால், கற்பதில் தேக்கம் ஏற்பட்டுப்போகிறது.

ஆசிரியர்களின் கடமை

ஆசிரியர்கள் மிகவும் எச்சரிக்கையோடு இருந்து, இப்படிப்பட்ட வளரா நிலை எழாமல், பத்திரமாகக் கற்பிக்க வேண்டும்.

கற்பவர்கள் மனதில் களிப்பு, தன்னம்பிக்கை, ஏற்படுமாறு கற்றுத்தருவதில் கவனம் செலுத்திக்கொள்ள வேண்டும்.

எவ்வளவு கற்கிறோம் என்பதில் தேர்ச்சி ஏற்பட்டு விடாது. எவ்வளவு பயிற்சி செய்து பழகிக்கொள்கிறோம் என்பதால் மட்டுமே திறமையும் தேர்ச்சியும் வளர்கிறது என்பதுதான் முக்கியமான கருத்தாகும்.

பயிற்சியில் குறைவு இருந்தாலும், பயிற்சிகள் தொடராமல் விடுபட்டுப் போனாலும் எதிர்பார்த்த விளைவுகள், மேலும் தொடராது போய்விடும். அது போலவே, ஆர்வக் கோளாறு காரணமாக அதிகமாக முயற்சிகள் மேற்கொண்டாலும், அவையும் வளர்ச்சியைப் பாதித்து விடும்.

எனவே, பயிற்சி நேரங்களைத் திட்டமிடல் வேண்டும்.

குறிப்பிட்ட ஒரு செயலுக்குரிய அடிப்படைத் தேவையை அறிந்து, அதையும் குறிப்பிட்ட நோக்கத்துடனே பயிற்சி செய்ய வேண்டும்.

பயிற்சியைத் தொடர்து, ஒழுங்காக செய்து வர வேண்டும். பயிற்சிக்கிடையே ஒய்வு தருவது நல்லது.

பயிற்சிகளானது தவறுகளைக் களைந்துவிட உதவுகின்றன.

தவறான பயிற்சிகள் தவறான முடிவுகளைத் தருவதால், பயிற்சி நேரங்கள், பழுதான முயற்சிகளைப் புறம் போக்கிடவழி வகுக்கின்றன.

பயிற்சிகளை அதிக நேரம்செய்யக்கூடாது.களைப்பு வருவதுபோலவும் பயிற்சிகளை செய்யக்கூடாது. 

ஒரே நுண் திறனை (Skill) அதிக நேரமும், அதிக நாட்களும் தொடர்ந்து செய்கிறபோது, அதில் வளராநிலை ஏற்படுவது கட்டாயமாக நிகழ்வது உண்டு. அதனால், அதன் தொடர்பான அடுத்தடுத்த திறன் நுணுக்கங்களில் ஈடுபடுவது அதிகமான மகிழ்ச்சியையும் தேர்ச்சியையும் வளர்த்து விடும்.

எப்பொழுதும் கற்பவர்களுக்கு எதிர்மாறான நினைவுகள் ஏற்பட்டுவிடாத வண்ணம், உடற்கல்வி ஆசிரியர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். ‘முடியுமா’ என்பதுபோன்ற சந்தேக நினைவும், ‘என்னால் முடியாது’ என்ற தாழ்வுமனப்பான்மையும் வரவிடாமல், ஆசிரியர்கள் உதவவேண்டும்.

ஒரு சில செயல்முறைகள் விளக்கத்திற்கு அப்பாற்பட்டவைகளாக விளங்கும். அதனால், அப்படிப்பட்ட செயல்களை செய்து காட்டிக் கற்பிக்க வேண்டும். அது தான் ஆசிரியரின் அற்புத அறிவு மேம்பாட்டிற்கு எடுத்துக்காட்டாக இருக்கும்.

எந்தக் குழந்தைக்கு எவ்வளவு ஆற்றல் உண்டு என்பதையும் அறிந்து கொண்டு, அந்த அளவுக்குக் கற்பிப்பதும் ஆசிரியரின் கடமையாக அமைந்து விடுகிறது.

எனவே, சிறிய திறனிலிருந்து கஷ்டமான ஒன்றிற்கு கற்பித்து அழைத்துச் செல்வது, உடற்கல்வி ஆசிரியர்களின் சிறப்புத் தன்மையாகும். தெரிந்த திறனிலிருந்து தெரியாத ஒன்றை கற்பித்துத் தருவது, முடியாத செயலை முடிகிற செயல் மூலமாகக் கற்பிப்பது எல்லாம், உளவியல் முறையால் உடற்கல்வியை கற்பிப்பது எல்லாம், உளவியல் முறையால் உடற்கல்வியை உயர்தரமாகக் கற்பிக்க உதவுகின்ற செயல்முறைகளாகும். 

ஆகவே, உளவியலானது உடற்கல்வியுடன் ஒருங்கிணைந்து, உலகுக்கு ஒப்பற்ற வழிகாட்டியாக அமைந்து உதவுகிறது என்பதே நாம் அறிந்து கொள்கிற நலமான பாடமாகும்.

10. உடற்கல்வியின் சமூகவியல் கொள்கைகள் (Sociological principles)

சமூக அமைப்பு

மனிதன் இரண்டு வித சக்திகளினால் உருவாக்கப்படுகிறான். ஒன்று பாரம்பரியம் (Heredity) மற்றொன்று சூழ்நிலை (Environment) என்று விளக்குகிறது. உயிரியல் நூல் (Biology).

ஆனால், உளவியல் என்பதோ, மனிதரை உடலாலும் உள்ளத்தாலும் இணையப் பெற்ற உயிராக்கம் என்று விவரிக்கிறது.

சமூக இயலோ, மனிதரைக் கூடிவாழும் சமூக மிருகம் என்று வருணிக்கிறது.

மனிதர்கள் எங்கே எப்படி வாழ்கிறார்கள் என்பதற்கான விடையைக் கூற வந்த ஒர் அறிஞர் இவ்வாறு எடுத்துரைக்கிறார். ‘மனிதர்கள் தங்களை ஒத்த உடலும் குணமும் உடைய மக்களுக்கிடையே வாழ்கின்றார்கள். அதுவே சமூக அமைப்பாக அமையப் பெற்றிருக்கின்றது.

மனிதனும் சமூகமும்:

மனிதனானவன், தன்னை ஒத்த மற்ற மனிதர்களின் நடத்தைகளுக்கு ஏற்ப அறிந்து நடந்து கொள்வதுடன், தனது நடத்தையையும் மற்றவர்கள் ஏற்று அனுசரித்து நடப்பதுபோலவும் நடந்து கொள்கிறான். 

வீடு, பள்ளி, சங்கங்கள், கழகங்கள் போன்றவற்றில் ஒவ்வொரு மனிதரும் தாங்கள் சங்கமம் ஆகிக் கொள்வதுடன், அவற்றில் தங்களது பாணியையும் இணைத்துப் பதித்துக் கொள்கின்றனர். அதனால்தான, “ஒரு மனிதனைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமானால் அவனைச் சுற்றி உள்ளவர்களைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்” என்று நாம் கூறுகிறோம். பெரியவர்களும் கூறுகின்றார்கள்.

ஒரு குழந்தை உலகத்தில் பிறக்கும்போது, அதற்கு இந்த உலகின் சமூக அமைப்பு தெரியாது. இந்த நன்னடத்தைக் கொள்கைகள் புரியாது. கலாச்சாரம் தெரியாது. தான் வாழ்கிற சமூக அமைப்பின் சக்தி பற்றியும், மகத்துவம் பற்றியும் அதற்குத் தெரியாது.

சிறு குழந்தைகள் சமூகத்தின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், குறிக்கோள்கள், கொள்கைகள், லட்சிய நோக்கங்கள் பற்றி எதுவும் தெரியாமலே, சமுதாயச் சூழலில் தவழ்து செல்கின்றனர்.

ஆனால், சமூகத்தில் உள்ளவர்கள் தங்களுக்குக் காட்டுகின்ற அன்பு, அனுதாபம், நட்பு, எல்லாம் புரிகிறது. ஒன்று சேர்ந்து கூடி பேசுகிற, விளையாடி மகிழகின்ற பல வகையான அனுபவங்கள் குழந்தைகளுக்கு நிறையவே கிடைக்கின்றன.

ஐந்தறிவுள்ள மிருகங்கள் போல் வாழ்கின்ற குழந்தைகள், கொஞ்சங் கொஞ்சமாக, சமூக அமைப்பு எனும் ஏணியில், அனுபவம் என்கிற ஒவ்வொரு படியிலும் படிப்படியாக ஏறிப் பழகிக் கொள்கின்றனர்.

சமூகத்தின் பிடியும் கொஞ்சங் கொஞ்சமாகக் குழந்தைகள் மேல் அழுந்துகிறது. குழந்தையையும்  சமூகத்தில் ஒர் அங்கமாக உட்படுத்தி, சங்கமப்படுத்துகிறது.

அப்படிப்பட்ட சமூக சக்தியில் குழந்தைகளும் ஆழ்ந்து விடுகின்றனர். தங்களையும் ஆட்படுத்திக் கொள்கின்றனர்.

மற்றவர்கள் நடத்தைகளை மதித்து ஏற்றுக் கொள்வது போல, அவர்கள் நடத்தைக்கு ஏற்ப, தங்கள் நடத்தையையும் மாற்றி அமைத்துக் கொள்ளும் முனைப்புடன் மாறிக் கொள்கின்றனர்.

ஆக, குழந்தைகளுக்கு மிக நெருங்கிய தொடர்புள்ளவர்கள், நெருக்கமானவர்கள் என்பவர்கள் குடும்பத்தினர், பெற்றோர்கள், சகோதர சகோதரிகள், அண்டை அயலார், சுற்றத்தினர் மற்றும் பள்ளி நண்பர்கள், சக மாணவர்கள் ஆவார்கள்.

அவர்களுடன் அடிக்கடி ஏற்படுகின்ற தொடர்புகள், உறவுகள், பழக்க வழக்கங்கள் இவற்றால், மற்றவர்கள் செய்கின்ற காரியங்களை, பழக்க வழக்கங்களை, குயுக் திகளை, குதர்க்கங்களைக் கற்றுக் கொண்டு, சந்தர்ப்பங்களுக்கேற்ப சமர்த்தாக நடந்து கொள்கின்றார்கள். ஆகவே, இப்படித்தான், குழந்தைகள் ஒரு சமுதாயத்தின் சங்கமாகின்ற அங்கத்தினர்களாக மாறிக் கொள்கின்றார்கள்.

உடற்கல்வியும் சமூக அமைப்பும்

உடற் கல்வி என்பது தனியாக இருந்து கொண்டு, பயிற்சிகள் செய்கின்ற தனிப்பட்ட காரியமல்ல.

பலர் ஒன்று கூடி, ஒருங்கிணைந்து, ஒருவருக்கொருவர் உள்ளத்தாலும்,செயல்களாலும் ஒன்று கலந்து மேற்கொள்கின்ற முயற்சிகள் நிறைந்த காரியங்களாகும். இத்தகைய சூழ்நிலைகளிலே, குழந்தைகள் கற்றுக் கொள்கின்றார்கள். கற்றுத் தருகின்றார்கள். பண்புகளைக் கொடுத்து, அன்புகளைப் பெற்றுக் கொள்கின்றார்கள். ஒவ்வொருவரும் நேரிடையாகவும் மறைமுகமாகவும் நிறையவே கற்றுக் கொள்கின்றார்கள்.

விளையாட்டும் குழந்தைகளும்

விளையாட்டானது குழந்தைகளுள் முடங்கிக் கிடக்கும் மன முதிர்ச்சியை வெளிப்படுத்தி வளர்த்து விடுகின்றது. அத்துடன், சமூக சூழ்நிலைகளுக்கேற்ப அனுசரித்து நடந்து கொள்கின்ற அனுபவங்களையும், அறிவுரைகளையும் நிறையவே தருகின்றன.

அவர்கள் ஒருவருக்கொருவர் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர். அறிவினை வழங்கிக் கொள்கின்றனர். கருத்துப் பரிமாற்றம் காண்கின்றனர். ஒருவருக்கொருவர் புரிந்து கொள்கின்ற பொறுமை திறமையைக் கற்றுக் கொள்கின்றனர்.

விளையாட்டில் கலந்து கொள்ளாத குழந்தைகளுக்கு, வாழ்வு பற்றியே விளங்காமற் போய்விடுவதுண்டு. அவர்களோ முழுமையாக சூழ்நிலைகளுக்கேற்ப அனுசரித்து நடந்து கொள்கிற அறிவுக் குறைவு உள்ளவர்களாகவே தடுமாறி வாழ்கின்றார்கள்.

விளையாட்டு வழங்கும் பண்புகள்

(அ) விளையாட்டானது தனித்தன்மையை, சுதந்திர மனப்பாங்கை வளர்க்கிறது.

(ஆ) விளையாட்டானது சமூக வாழ்வு நெறியை வளர்த்து, எந்த நேரத்திலும், சமூகப் பண்பு மாறாத வண்ணம் வாழும் நெறிமுறைகளை வளர்த்து விடுகிறது.

(இ) இது மனதில் விளையும் படபடப்பை, பதைபதைப்பை நீக்கி விடுகிறது.

(ஈ) நட்பு வளர்க்கவும், புகழ் பெறவும், தலைமை தாங்கும் பண்பாளர்களாகவும் மிளிர விளையாட்டு உதவுகிறது.

மேலும், வயதால் வளர வளர, உடலால் பெரியவர்கள் ஆக ஆக, உடற்கல்வி மேலும் பல உதவிகளையும் வசதிகளையும் செய்து கொடுக்கிறது.

மற்றவர்கள் இவர்களை மதிக்கும் வண்ணம் மேம்பாடான இடத்தில் கொண்டு போய் நிறுத்துகிறது.

மற்றவர்களையும் மதித்துப் பெருமைப்படுத்துகிற மனப்பாங்கையும் இது வளர்த்து விடுகிறது.

தாங்கள் திறமைகளில் குறைந்தவராக விளங்கினாலும், மற்றவர்களுடன் தங்களையும் ஈடுபடுத்தி, அனுசரித்துப்போகின்ற வண்ணம், சீரான மனப்பான்மையும் மிகுதியாக்கித் தருகிறது.

முனைப்பும் உற்சாகமும் உள்ள மனப்போக்கில்லாமல், மன நோயால், அல்லது மனக்குழப்பத்தால், வாடுகின்றவர்களையும், கூட்டிவந்து குதுகலத்தோடும் வாழுகிற பண்புகளையும் விளையாட்டு வளர்த்து விடுகிறது.

ஆகவே, ஆடுகளங்களில், விளையாட்டு மைதானங்களில் உடற் கல்வியில் பங்கு பெறுகின்றவர்கள் வலிமை, வேகம், நீடித்துழைக்கும் ஆற்றல், ஒருங்கிணைந்த செயல் பாடு, சமநிலை போன்ற பண்புகளையும் திறமைகளையும் மட்டும் கற்றுக் கொள்ளவில்லை.

அத்துடன் அவர்கள் சமூகப் பண்புகளான நோமை, இரக்கம், ஒற்றுமை, நட்பு, அன்பு, மதிப்பு, மரியாதை, விளையாட்டுப் பண்புகள் இவற்றையும் சேர்த்தே கற்றுத் தருகின்றது. ஒரு சிறந்த சமுதாய மனிதராகவே வளர்த்து விடுகிறது.

கலாசாரமும் சமூகப் பழக்க வழக்கங்களும்

கலாசாரம் என்பது ஒரு நம்பிக்கை.ஒரு பழக்கம். ஒரு மரபு. இது பழங்கால சமுதாயம் எனும் மரத்தின் ஆணி வேர்களாக ஊன்றி, சமுதாய மரத்தை செழிப்பாக மாற்றி அமைத்துக் கொண்டே வருபவையாகும்.

பழைய பண்பாடுகளை வளர்த்துக்கொண்டே,புதிய சமுதாய அமைப்புக்கு புத்துணர்ச்சி ஊட்டி, புதிய மக்கள் கூட்டத்தையும் அதே உணர்வுகளுடன் அமைப்புக்களுடன் வாழ்விக்கின்ற சூழலையே கலாசாரம் செய்து தருகிறது என்று கூறுகின்றனர்.

ஒரு சமுதாயப் புணரமைப்பிலே, பல்வேறு விதமான கலசாரங்களை நம்மால் காணமுடிகின்றது.அந்த சமுதாய அமைப்பில், பல்வேறு விதமான பழக்க வழக்கங்களை, நடைமுறைகளையும் நாம் காண்கிறோம்.

ஆனால், அந்த சமூக அமைப்பில் உள்ள பழக்க வழக்கங்கள் அத்தனையும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

ஆய்ந்து தேர்ந்தெடுக்கும் முறையில், நல்ல பழக்க வழக்கங்களுக்கு முன்னுரிமை தந்தும், மற்றவற்றை நீக்கி யும், தெரிவு செய்து, இவை எல்லா சமுதாயத்திற்கும் ஏற்றவைகள் என்றும் நாம் ஏற்றுக் கொள்ளலாம்.

இப்படியாகத்தான், எல்லா சமுதாயத்தினருக்கும் ஏற்றாற்போல, உலக அரங்கம் ஒப்புக் கொள்வதுபோல், ஒரு சில பழக்கவழக்கப் பண்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. இப்படித்தான் சமுதாய மரபுகள் எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கின்றன.

அதனால்தான், ஒவ்வொரு சமூகத்திற்கும், ஒவ்வொரு இனத்திற்கும், ஒவ்வொரு நாட்டுக்கும், ஒவ்வொரு தேசத்திற்கும் என்று மரபுகள்; பண்பாடுகள்; உருவாகியிருக்கின்றன.

வழிவழியாக வருகின்ற இந்த மரபுகளை, புதிய மக்கள் ஏற்றுக்கொண்டு வாழ்வதையே கலாசாரம் என்கிறோம்.

குழந்தை ஒன்று, தான் வளர்ந்து வருகிறபோதே தான் வாழ்கிற சமுதாயத்தின் மக்களைப் பார்க்கிறது. அவர்கள் நடைமுறையை மனதில் பதித்துக் கொண்டு தானும் நடந்துகொள்ள முயற்சிக்கிறது.

இவ்வாறு வளர்கின்ற குழந்தைகள், சில மரபுகள் துன்பமாக அமைந்திருப்பதையும், சில மரபுகள் இன்பமாக இருப்பதையும் அறிந்துகொண்டு, அதன் வழியே இணங்கி வாழும் மனப்பக்குவத்தைப் பெற்றுக் கொண்டு விடுகின்றனர்.

ஆகவே, இங்கே நாம் குறிப்பை அறிந்து கொள்வோம். கலாசாரம் என்பது, ஏற்கனவே வாழ்ந்து சென்ற முந்தைய சமூக மக்கள் நம்பி ஏற்றுக் கொண்டு நடந்து வந்த நம்பிக்கை நிறைந்த பண்பாடுகளை, புதிய சமுதாயமாக இருக்கும் புதிய ஜனங்களுக்குள் கொண்டுவந்து, பழக்கமாக, வாழ்க்கையாக ஆக்கிவிடுகின்ற அமைப்புக்கே இப்படி ஒரு பெயர் ஏற்பட்டிருக்கிறது.

உடற்கல்வியும் கலாசாரமும்

உடற்கல்வியும் எந்த இடத்தில் இடம் பெறமுனைகிறதோ, அந்த இடத்தின் கலாசாரத்தை அறிந்து, அதன் கொள்கைக்கும் நடைமுறைக்கும் ஏற்ப அனுசரித்துக் கொண்டு பாடத்திட்டங்களை வகுத்துப் பயிற்சியளிக்கிறது.

குறிப்பிட்ட சமூகத்தின் கலாசாரங்களைப் புரிந்து கொள்ளாமல், உடற்கல்வி கறிப்பிக்கப்படுகிறபோது, உடற்கல்வியும் எடுபடாது. அந்தக் கலாசார அமைப்பும் குளறுபடியாகி விடும்.நாகரிகமும் நசுங்கிப் போய்விடும்.

பழங்கால மரபுகள், பழக்க வழக்கங்கள் இன்னும் பின்னாளிலும் பின்பற்றப்படுகிற முறைகளுக்கு ஒர் உதாரணம் காண்போம்.

பழங்கால வீரர்களும் போராளிகளும் பழகிவந்த யுத்தங்கள், தந்திர முறைகளும், இன்று நவீன காலத்திலும் பின்பற்றப்படுகின்ற தன்மைகளை அறிந்து தெளிக.

இன்றைய நவீன உடற்பயிற்சி முறைகளும், முற்காலத்தில் போர்முறைகள்,போராட்டவழிகள்,போராயுதங்களைக் கையாண்ட வழிமுறைகள் இவற்றின் அடித்தளம் கொண்டே அமைக்கப்பட்டிருப்பதையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

பிரிட்டன் அமெரிக்க நாட்டின் போர் முறைகள், வாழ்க்கை முறைகள் சமுதாய சூழ்நிலைகள் போன்றவற்றை இந்தியா ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால், இந்தியாவின் கலாசாரம் வேறு. பண்பாடு வேறு. தட்ப வெப்ப சூழ்நிலைகள் போன்றே. சரித்திர வரலாற்று வாழ்க்கை அமைப்பும் வெவ்வேறு என்பதால், அந்தந்த நாட்டின் கலாசாரத்திற்கேற்பவே, உடற்கல்வியும் அமைய வேண்டும். அப்படியே தான் அமைந்தும் இருக்கிறது.

உடற்கல்வியில் உள்ள ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், அந்தந்த நாட்டின் கலாசாரங்களை அறிந்து, அவசியமானவற்றைத் தெரிந்தெடுத்து, அவற்றை அந்தப் பாடத்திட்டங்களுள் புகுத்தி, முக்கியத்துவம் கொடுத்து, முன்னுரிமைகளை வழங்கி இருப்பதால்தான், உலகமெங்கும் உடற்கல்வியானது, உன்னதமான புகழுடன் பின்பற்றப்பட்டு வருகிறது.

உதாரணமாக, யோகம் என்பது இந்திய கலாச்சாரத்தின் உயிர் நாடியாக விளங்குகிறது. உடலையும் உள்ளத்தையும் வலிமையாக வைத்துக் காக்க, நமது முன்னோர்கள் நயந்து பின்பற்றிய யோகத்தை விட்டு விட்டு, உடற்கல்வி பயிற்றுமுறை இருந்தால் அது எப்படி இருக்கும்? யார் ஏற்றுக் கொள்வார்?

இப்படித்தான், உடற்கல்வியானது, ஒவ்வொரு கலாசாரத்தின் உயிர்க் கொள்கைகளையும் உவந்து ஏற்றுக் கொண்டிருக்கிறது.

சமுதாய மதிப்பும் குணப்பண்புகளும்

சமுதாய மதிப்பு பலதரப்பட்ட பண்புகளால் வளர்கிறது. சமுதாய அங்கத்தினர்கள் தங்களை உயர்த்திக் கொள்ள ஏற்படும் உந்துதல்கள் காரணமாக, சிறப்பாக செயல்பட்டு, பெருமையை தேடிக் கொள்கின்றனா். 

மரபு என்பது சிறந்தவை என்று எல்லோராலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட வழக்கங்களேயாகும். இது பாரம்பரியத்தாலும், சூழ்நிலைகளாலும் உருவானதாகும்.

சமுதாயத்தில் உள்ள எல்லாதரப்பட்ட மனிதர்களுக்குக்கும் இத்தகைய பண்புகளும், கருத்துக்களும் பெருவாரியாகவே அமையப் பெற்றிருக்கும் பேற்றினையும் நாம் அறிந்து மகிழலாம்.

உதாரணத்திற்கு மனிதர்களின் உடல் நிறம், உயரம் அவர்களது அறிவான்மை எனக் கண்டு தெளியலாம்.

கல்விநிலையங்கள் எல்லாம் குழந்தைகளை சமுதாய நோக்குமிக்கவர்களாகவும், சமுதாயத்தைச் சார்ந்து வாழும் பண்புள்ளவர்களாகவும், வளர்த்து வாழ்விக்கவே முயல்கின்றன.

அதுபோலவே, சமுதாயத்திற்கும் குழந்தைகளைச் சார்ந்து வாழ்விக்கும் தன்மையில் வளர்க்கின்ற பொறுப்புக்களைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் மற்றவரை மதித்து, மரபுகளுடன் வாழ்கின்ற மனிதாபிமான செயல்முறைகளுடன் திகழ பயிற்சிகளை அளிக்கிறது.

இப்படிப்பட்ட முனைப்புடன் குழந்தைகளுக்குக் கற்றுத்தருபவர்கள், தாங்களே சொல்வது போல் நடந்து கொள்ளவும், வாழ்ந்து காட்டும் நல்ல ஆசிரியர்காளத் திகழவும் வேண்டும்.போதித்து விட்டுப் போய் விடுகின்ற பிரசங்கிகளாக இருப்பதால், எந்தவித மாற்றமும் நிகழ்ந்து விடுவதில்லை.

கற்றுக் கொள்ளும் குழந்தைகள், கற்றுத் தருகிறவர்களின் பண்புகளையும் செயல்களையும் பார்த்தே, கற்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.செயல்பட முனைகின்றனர். 

சமுதாய ஒற்றுமை சரியாமல் ஆக்கப்பட வேண்டுமானால், மக்களில் ஒருவருக்கொருவர் உணர்ந்து ஒற்றுமையுடன் வாழ்கின்ற பக்குவமான வாழ்க்கையாக அமையவேண்டும்.

ஒற்றுமையே வலிமை. ஒற்றுமையே உயர்வு தரும். உலக நாடுகள் இந்த ஒற்றுமைக்காகவே பாடுபடுகின்றன. பயன் தேடுகின்றன. விளையாட்டுக்கள் இந்த உலக ஒற்றுமையை நிலைநாட்டவே நிதமும் முயல்கின்றன.

கூடி வாழும் பண்புகள்

குழந்தைகள் குடும்பத்தில் பலரோடு, சேர்ந்து ஒற்றுமையாக வாழும் பண்பினைக் கற்றுக் கொள்ளத் தொடங்குகின்றனர்.

அங்கே ஆரம்பமாகின்ற அவர்கள் அனுசரித்துப் போகும்போக்கு அறிவு, அனுபவம், நடத்தைப் பண்புகள், தரம், பள்ளிகளில் மற்றும் கூட்டமாகக் கூடும் பொது இடங்களில் வளர்ந்தும், மாறாதபோது திருத்தமும் பெற்றும், பெருகிக் கொள்கின்றன.

ஆகவே, கூட்டமாக உள்ளவர்களிலிருந்து தனிப்பட்டவர்கள் பெறும் அனுபவங்களும், தனிப்பட்டவர்களிலிருந்து மற்றவர்களும் பெறும் அனுபவங்களும் என்று மாறி மாறி ஒன்றிவிடுகின்றன. இப்படிப்பட்ட வாய்ப்புக்களே சமுதாய அமைப்புக்களை கட்டுக்கோப்புடன் வழங்குகின்றன.

குழந்தைகள் தாங்கள் பிறந்தது முதல், ஏதாவது பலர் கூடியுள்ள இடங்கள் ஒன்றில் இருந்தும் வாழ்ந்து கொண்டும் இருக்கின்றனர். சமுதாயத்தில் நிகழ்கிற சமூகக்காரியங்கள், மத விழாக்கள், அரசியல் நடவடிக்கை கள் என்ற ஏதாவது ஒன்றில் அவர்கள் இருந்தாக வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டேவிடுகின்றது.

இருந்தாலும், ஒருவரின் தனிப்பட் குணப்பண்பு (Character) அவரது உள் உணர்விலிருது ஊறி வருகின்ற உயர்ந்த பண்புகளால் தான் உருவாக்கப்படுகிறது.

வீரம், விவேகம், முடிவெடுக்கும் திறம், தன்னடக்கம், சிந்தனைத் திறம், உற்சாகம், நம்பிக்கையூட்டும் செயல் முறைகள், முனைப்பும் முயற்சியும் உள்ள செயல்கள் போன்ற பண்புகள் தாம் தனிப்பட்ட ஒருவரின் தளராத பண்புகளாக அமைந்திருக்கின்றன.

இவைகளில் சிறந்து விளங்குகின்றவர்கள் தாம், சிறந்த குணாளராக சமுதாயத்தில் மேம்பட்டு விளங்குகின்றார்கள் இந்தக் குணங்களே ஒருவரை சிறந்த செயல் வீரர்களாக சிந்தனைச் சிற்பிகளாக எழுச்சியுடன் உருவாக்கி வைக்கின்றன.

இத்தகைய எழுச்சியை உண்டு பண்ணுவது கல்வி தான். சமூகத்தில் சமூகமாக வளரும் குழந்தைகள், சமர்த்தாக சமூகப் பண்புகளைக் கற்றுக் கொள்ள, கல்வியே துணை நிற்கிறது. தோளோடு தோள் நின்று துக்கி விடுகிறது.செழுமையையும் சேர்த்துப் படைக்கிறது.

பள்ளிக்கூடம்,இல்லம், சங்கங்கள்,அரசியல்,சமூகப் பண்பாட்டுக் கழகங்கள் போன்ற எல்லா இடங்களுமே, இப்படிப்பட்ட அறிவினையூட்டி, குணங்களை வளர்க்கின்ற கடமைகளையே முனைப்புடன் ஆற்றுகின்றன.

தனிப்பட்ட ஒவ்வொருவரும் இத்தகைய குணங்களைப் பெறுகிறபோது,தங்களுடன் வாழ்கின்ற அண்டை அயலாருடன் ஒத்துப்போகிற பற்றுப் பாசங்களையும் பெருக்கிக் கொள்கிற வகையில்தான் கல்வி முனைப்போடு முயற்சி செய்கிறது. அத்துடன் சமூக வாழ்க்கையை சிறப்பாக மேற்கொள்ள, அதற்கான சமூகத்திறன்களை பரவலாகக் கற்றுக் கொடுக்கவும், கல்வி பாடுபடுகிறது.

இப்படியாகத்தான், நல்ல மனிதக் குணங்களும் நல்ல பழக்க வழக்கங்களும் சமுதாயத்தில் பெருகி வளரக்கூடிய வழிவகைகளைக் கல்வி செய்து தருகிறது. அதாவது சமூகத் திறன்கள் என்பவை, ஒருவரை நல்ல குடிமகனாக வாழ வழிவகை செய்கிறது என்பதே கல்வியின் இனிய இலட்சியமாகும்.

கற்பிப்பவரின் தகுதி

சமூகநற்குணங்களை வளர்க்க முற்படும்ஆசிரியரும், தான் போதிக்கின்ற நற்குணங்களை, தானும் உடையவராக, பின்பற்றுபவராகவும் இருக்க வேண்டும். அவர் அத்தகையவராக இருந்தால்தான், கற்றுக் கொள்வோரும் விரும்பி அக்குணங்களை ஏற்று, வளர்த்துக் கொள்பவராக இருப்பார்கள், இருக்க முடியும்.

ஆசிரியர் நடப்பது ஒருவழி, அவர் கற்பிக்கும் நல்வழி வேறுவழி என்று இருந்தால், கற்பிப்பது கேலிக்கூத்தாக அமைந்துவிடும். விளையாட்டு நற்குணங்கள் இல்லாத ஒரு உடற்கல்வி ஆசிரியர், எவ்வளவுதான் விளையாட்டுக் குணங்கள், பெருந்தன்மை போன்றவற்றைப் போதித்தாலும், அவரது போதனை எடுபடாமல் போகும். பின்பற்றும் மாணவர்களிடமும் அவப்பெயர் நேரிடும். ஆசிரியரே சிறந்த வழி காட்டியாக அமைவது மிக மிக அவசியமான ஒன்றாகும்.

நாகரிகம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்ற காலம் இது அதற்கு சமூக ஒற்றுமை மிகவும் வேண்டற் பாலது. சமூக ஒற்றுமை என்பது மக்களை ஒருவருக்கொருவர் புரிந்துகொண்ட கூட்டுறவோடு, ஒற்றுமையுடன் வாழ்ந்து கொள்வதுதான்.

மக்களிடம் ஒற்றுமை வேண்டும் என்கிறபோது, செயலில் போட்டி, தொழிலில் போட்டி, வாழ்க்கை முன்னேற்றத்தில் போட்டி என்ற பல சூழ்நிலைகளின் பெருக்கம் ஏற்படத்தான் ஏற்படும்.

அப்படிப்பட்டப் போட்டிகள் விதிகளுக்குட்பட்ட, ஒரு நியதி முறைக்குட்பட்ட மற்றவர்களும் மனமாறப் பின்பற்றுகிற தரமான வழிகளிலே ஏற்பட வேண்டும். அமைதியான சூழ்நிலைகளிலே அத்தகைய போட்டிகள் முடிவு பெறுவதாகவும் இருக்க வேண்டும். ஒற்றுமை இல்லாமல் ஒரு சமூகமானது முன்னேறுவது என்பது, முடவன் மலையேறும் முயற்சி போல்தான் அமையும்.

போட்டியும் விளையாட்டும்

தெரிந்தோ தெரியாமலோ, ஒவ்வொரு வாழ்க்கைச் சூழலிலும்,போட்டிகளே பெருவாரியாக இடம் பிடித்துக் கொண்டிருக்கின்றன. போட்டிகளும் தனியார்களுக்கிடையில் நாடுகள், அரசியல் அமைப்புகள், இனங்கள், இவைகளுக்கிடையில், எல்லையில்லாத அளவில் எழுச்சியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்க்னிற்ன.

“ஒற்றுமையும் போட்டிகளும் மனித இனத்திற்குரிய மகிமை மிக்க உரிமையாக விளங்குகின்றன. அந்த உரிமைகளை அழுத்தநினைப்பதும்,அழிக்கநினைப்பதும் முடியாத காரியம். ஏனென்றால் அந்த அழிவு வேலை, தனிப்பட்டமனிதர்களையும் அழித்த பிறகுதான் முடியும்” என்று பெர்ட்ரண்ட் ரசல் என்ற மேனாட்டறிஞர் பேசுகின்றார்.

போட்டி மனப்பான்மை, போட்டிகள் என்பது இயற்கையானதாக இருந்தாலும், அவையே முக்கியமானவை என்று கல்வித்துறையினர் அவற்றைக் கட்டாயப்படுத்தி விடக்கூடாது. பள்ளிகள் இந்தப் போட்டி மனப்பான்மையை வளர்க்கவும் கூடாது.போட்டிகள் நல்லதற்காகவோ, கெட்டதற்காகவோ இருக்கலாம். ஏனென்றால், அவைகளின் முடிவு அப்படித்தானே அமைந்து விடுகிறது?!

ஏறத்தாழ எல்லா நாடுகளிலும், எல்லா விளையாட்டுத் துறைகளிலும், போட்டிகள் போடுகின்ற இலட்சியங்களே தலையாய இடங்களைப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு விளையாட்டு வீரரின் உள்ளமும் போட்டியிடுவதிலும் பரிசுகளைப் பெறுவதிலும், தங்கப் பதக்கங்களை வெல்வதிலுமே குறியா யிருக்கிறது. அவர்கள் ஆர்வமும் ஆவேசமும் வெற்றி களைக் குவிப்பதிலும், போட்டிகளை வரவேற்பதிலுமே வெளியாகியிருக்கின்றன.

விளையாட்டுத் துறைகளில், போட்டியிடுதல் என்பது ஊக்குவிக்கும் அமைப்பாக இருந்தாலும், அதையே முனைப்பாகவும் முற்போக்குக் கொள்கையாகவும் கொண்டு விடக் கூடாது.

அதனால், போட்டிகள் என்றால் என்ன? அவற்றால் நாம் பெறுகிற நன்மைகள் என்னவென்றும் தெரிந்து கொள்வோம். அந்தத் தெளிவு நம்மைத் திடமாகவும் திருப்தியுடனும் செயல்படச் செய்யும்.

போட்டி தருகிற நன்மைகள்

1. போட்டிகள் எல்லாம் சிறப்பாகச் செயல்படத்தூண்டும் ஊக்கிகளாக நின்று மக்களினத்திற்கு உதவு கின்றன. அந்தப் போட்டி மனப்பாங்கானது தெளிவாகக் கற்பதில் உந்துதல்களாக இருந்து, முன்னேற்றத்தை விளைவிக்கும் மேன்மை மிகு காரியங்களாக விளங்குகின்றன. வீரியத்தோடு வெளிப்படுகின்றன.

2.விளையாட்டுத் துறைகயில் போட்டியிடுகிறவர்கள் முதலில் தங்களுக்குரிய திறமைகள் என்னென்ன என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. அடுத்தவர்களுடன் போட்டியிடும்போது, அவர்கள் திறமைகளுடன் தனது திறமைகள் எவ்வளவு, எப்படி இருக்கின்றன என்பதையும் கண்டுகொள்ள முடிகிறது. போட்டி நேரத்தின் போது, தமது திறமைகள் மற்றவர்களிடையே பளிச்சென வெளிச்சமிடுகிறபோது, மனதுக்கு மகிழ்ச்சியும் பெறமுடிகிறது.

3.போட்டிகளில் பங்கேற்கிறவர்கள் ஒர் அணியாகக் கூடுவது மட்டுமல்ல, ஒர் அமைப்பின் அல்லது நிறுவனத்தின் சார்பாகப் போட்டியிடச் செய்வது அவர்களுக்கு கெளரவமான காரியமாகும். மற்றவர்களிடையே மதிப்பும் மரியாதையும் பெறத்தக்க வகையில் வெளிப்படுகின்ற மேன்மையாகவும் விளங்குகிறது.

4. போட்டிகளில் பங்கேற்கிற அனைவரும் விதிகளுக்குப் பணிகிறார்கள். கீழ்ப்படிந்துள்ளவர்களாக, கட்டுப்பாடுள்ளவர்களாக, எதிர்ப்பாரையும் வெறுக்காமல், வேகத்திலும் விவேகம் காட்டுபவர்களாக கலந்து கொள்கிற, பெருந்தன்மை நிறைந்த பண்பாடுகளை, போட்டிகள் ஏற்படுத்தித் தருகின்றன.

5.போட்டிகளில் பங்கு பெறுவோர்கள் சுய சோதனைக்குள்ளாகின்ற நேரங்கள் நிறையவே ஏற்படும். அவர்கள் ஆற்றலுக்குத் தேர்வு மட்டுமல்ல. பண்பாடுகளுக்குப் பரிட்சையாகவும் அவைகள் அமைந்து விடுகின்றன.

குழந்தைகளும் போட்டியும்

குழந்தைகளுக்குப் போட்டிகள் என்பவை குதூகலம் அளிப்பனவாகும். மற்றவர்கள் கூடி உறவாடி, ஒன்று சேர்ந்து செயல் புரிவதானது சிந்தையின் சீர்மையை சிறப்புற வளர்த்து விடுவதாகும்.

போட்டிகளைக் கட்டாயப்படுத்தியும், அவற்றில் வென்றுதான் ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொள்ளச் செய்வதும் குழந்தைகளைக் கஷ்டப்படுத்தி விடும். வெற்றியைப் பெற்றுத்தான் தீரவேண்டும் என்று அவர்கள் தலையில் சுமத்தி விட்டால், அவர்களுக்கு அது தீராத சுமையாகிவிடும். மாறாத வேதனையாகிவிடும்.

குழந்தைகளுக்கு அது மனச்சுமையாகி, மனபடபடப்பு, மனச்சலனம், முதலியவற்றை ஏற்படுத்தி, துன்பத்தை அதிகப்படுத்தி விடுவதால்,அவர்கள் நடத்தைகளிலே நலிவு தோன்றத் தொடங்கிவிடும். அவர்கள் தோரணையும் தளர்ந்துபோகும்.

போட்டிகள் என்பது, தனிப்பட்டவரின் ஆர்வத்தினால் பொருதும் ஆசையாக மாறவேண்டும். அவர்கள் ஆர்வத்தைத் துண்டுவது போல சந்தர்ப்பங்களை ஏற்படுத்த வேண்டும். அவர்கள் வளர்த்துக் கொள்கிற போட்டி மனப்பான்மை, அவர்களுக்கு நல்ல பலன்களை அளிப்பனவாக விளங்க வேண்டும்.

போட்டிக் குரியவர்களைத் தேர்ந்தெடுக்கும் விதங்களில் கூட, குழந்தைகள் பாதிக்கப்படுகின்ற பரிதாபத்துக்கு ஆளாகி விடுகின்றார்கள். போட்டிகளில் யார் பங்கேற்பது என்பதற்காகத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. சிலருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. சிலருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகின்றது.

வாய்ப்பை இழப்பவர்கள், தாழ்வு மனப்பான்மை அடைகின்றனர். தங்களுக்குள்ளேயே எண்ணி எண்ணி, குமைந்து தாழ்ந்து போகின்றனர். ஆற்றலில் தணிந்து வேகின்றனர். அதனால் அவர்களுக்கு மனத்திற்குள்ளே வெறுப்பும், பசப்பும், கசப்பும் ஏற்பட்டு விடுகின்றது. இவையே பின்னாளில், பெரும் சமூகப் பிரச்சினைகளாக வடிவெடுத்துக் கொள்கின்றன. இப்படி நேராமல் பாதுகாக்க, குடியரசுக் கொள்கையான சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரத்துவம் போன்ற முறைகளில் தேர்வு செய்வது, சாலச்சிறந்த வழியாகும்.

சமூக மரபுகளையும், சமாதான வழிகளில் போட்டியிடுவதையும் சிறப்பாக வளர்க்கின்ற சந்தர்ப்பங்கள் உடற்கல்வித் துறையில் நிறைய இருக்கின்றன. உலக சமாதானத்தை உண்டுபண்ணுகிற அளவுக்கு, உடற்கல்வித் துறை வலிமை வாய்ந்த சாதனமாக விளங்குகிறது.

விதிகளுக்கடங்கிய முறையான ஆட்டம் (Fair Play) விளையாட்டுப் பெருந்தன்மைப்பண்புகள் போன்றவற்றை ஒவ்வொரு குழந்தையின் உள்ளத்தில் உடற்கல்வி விதைத்து விடுகிறது. விளைந்து வருகிற விளைச்சலோ வலிமை வாய்ந்த சமுதாயம். வக்ரம் இல்லாத போராட்டப் போட்டிகள். நலமான முடிவுகள். நல்ல சூழ்நிலைகளை நிரப்புகிற நயமான அணுகு முறைகள். சந்தோஷமான சமுதாயச் சூழல் தோன்ற ஏதுவாகின்றன.

மனித உணர்வுகளுக்கு மதிப்பும், தனிப்பட்டவர்களுக்கு வாய்ப்பும், ஒன்று கூடுகிறபொழுது தனக்குள்ள உரிமையும் பெருமையும் கிடைக்கிறது என்ற நினைப்பும், திறமைகளை வெளிப்படுத்தி மகிழ்கிற உழைப்பும், சமுதாய அந்தஸ்தும் கிடைக்கிற விளையாட்டுத் துறையினால், சமூக அமைப்பு மேலும் வலிமை அடைகிறது. பொலிவுபெறுகிறது.

ஒற்றுமையே உயர்வு

கூட்டுறவும், ஒற்றுமை உணர்வும் சமுதாயச் செழுமைக்கு விழிகள் போன்றவை. மனிதாபிமானமும், மனித வளர்ச்சியும் ஒற்றுமையால் தான் ஓங்கி வளர்கின்றன.

குடும்ப அங்கத்தினர்களின் ஒற்றுமையால், வீடு வளம் பெறுகிறது. வீடுகளின் வளர்ச்சியால், ஊர் வளர்கிறது. ஊரும் பேரும் வளர்கிறபோது, சமுதாயம் செழிப்படைகிறது. சமுதாயச் செழிப்பே, நாட்டுப்புகழை நாட்டும் நற்கரங்களாக உழைக்கின்றன, உயர்கின்றன. அந்த நாட்டமே ஒரு நாட்டின் நிலையான நீரோட்டமாக அமைகிறது.

ஒற்றுமை என்பது பலர் கூடி பண்போடு நடந்து கொள்வதாகும். தீய காரியங்களுக்குத் துணைபோகும் சண்டாளக் காரியங்கள் ஒற்றுமை என்பதைக் குறிக்காது. சிறந்த நலம் பயக்கும் முடிவுகளை ஏற்படுத்தித் தருகிற ஒற்றுமை (Co-operation) தான் சமுதாய செழுமைக்கு உதவுகிறது.

ஒற்றுமை ஏற்படுவது எப்படி? அவற்றிற்கு சில பண்பாட்டுக் குணங்கள் வேண்டும்.இரக்கம், நட்பு, பாசம், தனிமனித உணர்வு, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, முயற்சிக்கும் முனைப்பு உள்ளம், மற்றவர்கள் மேல் நம்பிக்கை வைத்தல்; தன் மேலும் நம்பிக்கையுடன் இருத்தல், உறுதி அளித்ததற்கேற்ப உண்மையோடு அவற்றை செயல்படுத்துதல், உண்மையாய் பிறருக்கு இருத்தல், உதவுதல் போன்ற பண்புகளே, சமுதாய ஒற்றுமையைப் பலப்படுத்திவிடுகின்றன.

எனவே, போட்டிகளும் ஒற்றுமையும் ஒன்றைச் சார்ந்து ஒன்று செல்வதுதான், முன்னேற்றத்தை வளர்க்க உதவுவதாக அமையும். சுகாதாரமான தூய போட்டிகள் சுகமான காட்சியை அளிக்கின்றன. சுற்றியுள்ளவர் களையும் சந்தோஷத்தில் ஆழ்த்துகின்றன.இப்படிப்பட்ட ஆரோக்கியமான, ஆனந்தமான சூழ்நிலையை அளிப்பதில், உடற்கல்வி உலகத்தில் முன்னணியிலே நின்று செயல்படுகிறது.

சமுதாயம்

நாம் நமது சமுதாயத்தில் ஒர் அங்கமாகத் திகழ்கிறோம். நமது முன்னோர்கள் சமுதாயத்தை அமைத்துக் கொண்டதே, சேர்ந்து வாழத்தான். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, ஒற்றுமையுடன் வாழத்தான். ஒருவரை ஒருவர் மதித்து, அனுசரித்து, உதவி வாழவே சமுதாய அமைப்பு இருக்க வேண்டும் என்பதே, எல்லோரின் ஆசையும்.

ஒரு குழந்தை தன் திறமையை மற்றவர்கள் முன்னே காண்பித்து, அவர்கள் தன்னைப் புகழ வேண்டும் என்று ஆசைப்படுகிறது. இந்தப் பண்பு தான் எல்லா மனிதர்களிடையேயும் இருக்கிறது. இந்த எண்ணமே வளர்ந்து தன் திறமையை வெளிக்காட்டி, மற்றவர்களுடைய திறமையுடன் ஒப்பிட்டுப் பார்த்து, திருப்தியடைய முயன்றதன் விளைவே, போட்டிகளாகப் பிறப்பெடுத்து விட்டன. 

உலகில் பிறந்த எல்லோருமே தன்னை மற்றவர்கள் அங்கீகரிக்கவேண்டும் (Recognition), தன்னைப் பெரிதாக நினைக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர்.இப்பண்பு, குழந்தைப் பருவத்திலிருந்தே கொப்பளித்துக் கொண்டு புறப்பட்டுவிடுகிறது.

இந்த எண்ணத்தின் மொத்த வடிவமாகத்தான், கூடி சேர்கிற ஆர்வம் நிறைந்து நிற்கிறது. இந்த நிறைவை எதிர்நோக்கித் தான் சங்கங்களும், சபைகளும், கழகங்களும், கட்டுக்கோப்பான அமைப்புகளும் உருவாயின.

இதே வேகத்தில் தான் அரசியல் கட்சிகள்,மதங்கள், மற்றும் சமூகச் சங்கங்கள் தோன்றின. தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காகவே, அங்கீரிக்கப்படாத மக்கள் பலர் சேர்ந்து, புதிய புதிய அமைப்புகளை உருவாக்கினர். அதிலும் முடியாதவர்கள், அழிவு வேலைகளுக்குத் தலைமை தாங்கினர். இப்படித்தான் பல பிரிவுகள் சமூக அமைப்புக்குள் சதிராட்டம் போட்டன. போடுகின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலைகளை சுமுகமாக்கும் பணியில் உடற்கல்வி தலை நிமிர்ந்து நிற்கிறது. அனைவருக்கும் வாய்ப்புக்களை வழங்கி, அவர்கள் அகமும் புறமும் மகிழும் வண்ணம் சந்தர்ப்பங்களைக் கொடுத்து, சக்தியை சரியாக செலவழிக்கச் செய்கிறது.அதுவே, நல்ல குடிமக்களை உருவாக்கும் நலமான பணியாக அமைந்து போகிறது.

சமூக அமைப்பும் சிறப்பும்

வேறு எந்த மிருகங்களுக்கும் இல்லாத சிறப்புத் தன்மை மனிதர்களுக்கு உண்டு.அதுதான் சேர்ந்து வாழும் செழுமையாகும். தனியாக தான் மனிதர்கள் பிறக்கின்றார்கள் என்றாலும் சேர்ந்து வாழத்தான் வேண்டும் என்ற நியதிக்கு ஆட்பட்டுப் போகின்றார்கள். அது ஒரு கட்டாய சுதந்திரமாகவே இருந்து வருகிறது.

ஆனாலும், சமுதாய அமைப்பானது மக்களின் முன்னேற்றம் கருதியே இருந்து வருகிறது. இப்படி உள்ள அமைப்பானது, தனிமனித உரிமைகளைக்காக்கவும், பிற தாக்குதல்களிலிருந்து காப்பாற்றவும், அவர்கள் தங்களைத் தங்கள் திறமைகளுக்கேற்ப வளர்த்துக் கொள்ளவும், அரணாக இருந்தும், அணையாக இருந்தும் காத்து உதவுகிறது.

காலங்காலமாக கூடி வாழ்ந்து வந்த மக்களும், தாங்கள் பெற்ற அனுபவங்களுக்கேற்ப, அவ்வப்போது விதிகளையும் முறைகளையும் மாற்றி மாற்றி அமைத்து, மரபுகளாக, மாண்புகளாக வழியமைத்துச் சென்றனர்.

சமுதாயமானது, தம்மைச் சார்ந்திருக்கிற மக்களிடமிருந்து நற்பண்புகளை, மரியாதை மிக்க நடத்தைகளை, கூடிஉறவாடுகிற குணங்களை, இனிமையான இலட்சியச் சிந்தனைகளை, இதமான செயல்முறைகளை எல்லாம் எதிர்பார்க்கிறது.

ஒருவர்க்கொருவர் உதவிக் கொள்வது, உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் உறவாடுவது, தங்கள் கடமைகளைத் தயங்காமல், நிறைவேற்றுவது போன்ற தலையாய பண்புகளையும் சமுதாயம் எதிர்பார்க்கிறது.

இத்தகைய சமுதாய எதிர்பார்ப்புகளை, உடற்கல்வி எவ்வாறு நிறைவேற்றுகிறது? எவ்வாறு நிறைவேற்றிட வேண்டும் என்ற ஒரு சில குறிப்புக்களை இங்கே காண்போம்.

உடற்கல்வி உதவுகிறது

1. உடற்கல்வியானது சமுதாயப் பண்புகள் செழித்தோங்க உதவுகிறது. பல இடங்களிலிருந்தும் பல பகுதிகளிருந்தும் வருகிற தனிநபர்களை, தனித்தனியாக அல்லது அணி அணியாக ஒன்று சேர்க்கும் இனிய நடைமுறைகள் விளையாட்டுக்களில் இருக்கின்றன.

சிலருக்கு சமுதாய அடிப்படையின் அனுபவங்கள் தெரிந்திருக்கும். மற்றவர்கள் எதுவும் அறியாதவர்களாகவும் இருக்கலாம். அவர்கள் வாழ்க்கை பின்னணி, சூழ்நிலை, உணவு, உடை, பேச்சு போன்ற வழக்கங்களும் மாறுபட்டதாகக்கூட அமைந்திருக்கும்.

இத்தகையோர் இவ்வாறு விளையாட்டுக்காக ஒன்று சேர்கிற பொழுது, மற்றவர்களுடன் அனுசரித்துப் போக வேண்டியிருப்பதால், தங்கள் நடத்தைகளை மாற்றிக் கொள்கின்றனர். அப்போது புதிய நடைமுறைகள் என்கிற பொதுநடைமுறைகளே (Behaviour) அமைந்து விடுகின்றன.

இந்தக் கருத்தை உடற்கல்வி ஆசிரியர்கள் உணர்ந்தால் போதும். கூடி வருகிற மாணவர்களை ஒன்று சேர்த்து நன்கு வழிகாட்டி புதிய சமுதாயத்தையே வலிமையான ஒன்றாக மாற்றிவிடலாம்.

2. சமுதாய மரபுகள், பழக்க வழக்கங்கள் என்பன சிறந்த நோக்குள்ளவையாக இருக்கும் போது, அவை மீண்டும் வலிமையும் செழுமையும் பெற, இந்தக் கூடி ஆடும் முறை உதவி விடுகிறது.

எனது சமுதாயம், எனதுநாடு, எனது தேசம் என்ற நினைப்பும் முனைப்புடன் பெருகிட, உடற்கல்வியின் உன்னதப் பணி மிகுதியாகவே நடைபெறுகிறது. பழமையின் மேன்மையுடன், புதிய கருத்துக்கள் பதிந்து கொள்ளும் பாங்கும் சிறப்புடன் நடைபெறுகிறது என்பதை ஆசிரியர்கள் அறிந்து, நடைமுறைப் படுத்திட வேண்டும்.

3. வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையிலும் உண்டு. விளையாட்டிலும் உண்டு. வெற்றியில் வெறியும், தோல்வியில் தளர்ச்சியும் நேர்வது இயல்பு தான். வெற்றியே வேண்டும். தோல்வியே வேண்டாம் என்று யாரும் எதிர்க்கவும் முடியாது. எதிர்பார்க்கவும் கூடாது.

தோல்வி தாழ்வு மனப்பான்மையையும், வெற்றி தலைக்கணத்தையும், தடித்தன நினைவையும் தோற்றுவிக்கும் நிலைக்களனாவதால், நாம் இந்த சூழ்நிலையை மிகவும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.

வெற்றியை அடைய விரும்புகிறவர்கள், நீதி நியாயத்துடன், விதிமுறைகளுக்குட்பட்ட முயற்சியுடன் பாடுபடவேண்டும். குறுக்கு வழியில் அடாவடித் தனத்துடன் வெற்றி பெற்ற உலக வீரர்கள் யாரையும், மக்கள் ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக, பழித்து ஒதுக்குகின்றனர். நற்பண்புகளுடன், நியாயமாக, விதிக்கடங்கி தோற்ற வீரர்களையும், பார்வையாளர்கள் உலகளாவப் புகழ்வதையும் நாம் கேட்டிருக்கிறோம்.

ஆகவே,சிறந்த குணங்கள் (Moral values) உள்ளவர்களையே சமுதாயம் வரவேற்கிறது. அவர்களையே சமுதாயம் எதிர்பார்க்கிறது. ஆசிரியர்கள், நடுவர்கள், துணை நடுவர்கள் மற்றும் அதிகாரிகள் எல்லோரும் இப்படிப் பண்பாளர்களாக செயல்பட்டால், சமுதாயப் பாதை சந்தோஷப் பாதையாகவே மாறிவிடும் அல்லவா? 

4. விளையாட்டுக்கள் தேக சக்தியை செலவழிப்பது மட்டுமல்ல.சக்தியை சேகரிக்கவும், வளர்க்கவும் உதவுகின்றன. விளையாட்டுக்கள் மூலமாக நவீன காலக் கல்வி முறையும் கற்பிக்கப்படுகின்றன.

விளையாட்டுக்கள் இடம் பெறுகின்றன. ஆடுகளங்கள், ஓடுகளங்கள், ஜிம்னேஷியங்கள், நீச்சல் குளங்கள், போன்ற இடங்கள் இத்தகைய சமுதாய கல்வி அனுபவங்கள் வளர்ந்துவிட உதவுகின்றன. உற்சாகம் ஊட்டுகின்றன. குழந்தைகள் கூடி விளையாட, கலந்துறவாட இடம் தருகின்றன. சிறந்த குடிமக்களாகத் தேர்ச்சி பெற பயிற்சி அளிக்கின்றன.

5. சமுதாயப் பணிகளும், குணநலன்களும் மக்களுக்குப் போதிப்பதால் மட்டும் வந்து விடாது. நீண்டநாளைக்குச் சொல்லிக் கொடுப்பதால், மட்டுமே வந்து விடாது. அவைகள் செயல்படுகிற போது தான் வரும். வளரும்.

விளையாட்டுக்கள் சமூகப் பண்புகளைப் பார்த்துச் செய்கிற (imitaion), பாவனை செய்வதன் மூலம் கற்றுக் கொள்ள உதவுகின்றன.

சமூகப் பண்புகளாக விளங்கும் நேர்மை, நியாயமான ஆட்டம், விதிகளை மதித்தல், மற்றவர்களை மதித்தல் போன்றவற்றை விளையாட்டில் உணர்ந்து செயல்படுகிறபோதே, வளர்ச்சி பெற்று விடுகிறது என்பதை நாம் இங்கே நினைவு கூர்வோம்.

6. ஒவ்வொரு குழந்தைக்கும் அதிகமான சமூக அனுபவங்கள் ஏற்படுகிறபோது தான், தங்களது தோரணையில் கம்பீரம் பெற முடிகிறது. அந்த அளவுக்கு உடற்கல்வி தரும் அனுபவங்கள் அவர் களை செம்மாந்த மக்களாக உயர்வு பெறச் செய்ய உதவுகின்றன.

7. அனுபவங்கள் பெற வாய்ப்புக்களும், சந்தர்ப்பங்களும் வேண்டும் அல்லவா! அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களும் வாய்ப்புக்களும் விளையாட்டுத் துறையில் ஏராளமாகவே இடம் பெற்றிருக்கின்றன. அங்கே பயிற்சிக்கும் பஞ்சமில்லை. வளர்ச்சிக்கும் குறைவில்லை.

8. நமது நாட்டின் கலாசாரம் மென்மையானது. மற்ற நாடுகளை விட மேன்மையானது. நெஞ்சைக் கவரும் நுண்மையானது. அத்தகைய அரிய கலாசாரப் பண்புகளை விளையாட்டுக்கள் வளர்த்து விட, நமது நாட்டின் சூழலுக்கேற்ற அமைப்புக்களுடன் பயிற்சிகளை குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும்.

வேற்றுமையில் ஒற்றுமை என்பார்களே அதுபோல, நமது நாட்டில் பல்வேறு விதமான கலாச்சாரப் பண்பாடுகள் உண்டு. அவற்றின் அருமை தெரிந்து, பெருமை புரிந்து, குழந்தைகளுக்கு பண்புகளைக் கற்றுக் கொள்ள பயிற்சியளிக்க வேண்டும்.

9. பள்ளிகளில் உள்ள வகுப்புகளில் மட்டும் இப்படிப்பட்ட பயிற்சிகள் அனைத்தையும் கற்றுத் தந்துவிட முடியாது. கூடாரம் அமைத்துக் கூட்டமாக வெளியிடங்களில் தங்கி வாழ்கிற ‘முகாம் வாழ்க்கையையும்’ (Camping) குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். அதுவே சமுதாயப் பண்புகள் அனைத்திலும் அனுபவம் பெறத்தக்க வண்ணம் உதவிவிடும்.

உடற்கல்வி என்பது சுகாதாரமான சமூக வாழ்க்கையை, வலிமையான சமூக வாழ்ககையை உருவாக்கும் ஆற்றல் உடையதாகும். தன் திறன் தெரிந்து, பிறருடன் போட்டியிட்டு ஒற்றுமையாக வாழ்கிற சமூக அமைப்புக்கு; உடற்கல்வியே உன்னதமாக உழைக்கிறது. ஒவ்வொருவரையும் உள்ளன்புடன் அழைக்கிறது. அதனால் தான் உடற் கல்வி உலகமெங்கும் செழித்துக் கொண்டிருக்கிறது என்று நாம் செம்மாந்து கூறலாம்.