கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/14

விக்கிமூலம் இலிருந்து

14. சிறைக் கூண்டில் கவிக்குயில்

கான்பூரில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் தேசிய மகாசபை மாநாட்டிற்குக் கவிக்குயில் சரோஜினி தேவி தலைவராகப் பதவி ஏற்றதிலிருந்து, இந்தியாவின் விடுதலைக்கான செயல்களில் அயராது பாடுபட்டு உழைத்து வந்தார்.

காந்தியக் கருத்துக்களைச் சுமந்து கொண்டு அவரது பாடல்கள் ஒவ்வொன்றும் வெளிவந்துக் கொண்டிருத்தன. மக்கள் இடையே அந்தப் பாடல்கள் பரவி சரோஜினி தேவிக்குப் பெரும் புகழையும், செல்வாக்கையும் உண்டாக்கின.

இந்தப் பாடல்கள் ஒவ்வொன்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பிடரியைப் பிடித்து உலுக்கிக் கொண்டிருந்தது. அதே நேரத்தில், அவருடைய கீதங்கள் அனைத்தும் தொகுத்தப் புத்தகங்களாக வெளிவந்தன!

மகாத்மா காந்தியடிகளுக்கு நாடெங்கும் புகழ் பெற்ற பல தளபதிகள் உருவானார்கள். அவர்களுள் ஒருவராக பெரும் புகழுடன் சரோஜினிதேவியும் விளங்கி வந்தார்.

அவருடைய கவிதை ஆவேசம், நாட்டு விடுதலைக்கான தேசபக்தி வெறிவேகம் பெரும் வெள்ளத்தைப் போல் பெருகியது. இந்த சிறப்பு நாடெங்கும் எதிரொலித்தது. மக்கள் எல்லோரும் எதற்கும் தயாரான நிலையிலே காத்துக்கிடந்தார்கள்:

"மோகன கிருஷ்ணன் இளம் வயதிலே வெண்ணெய் திருடினார்! மோகன்தாஸ் காந்தி உப்பைத் திருடினார்! என்ற கருத்துள்ள பாடல் மக்களை வெகுவாகக் கவர்ந்தது.

1930-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ம் நாள், காந்தியடிகள் உலகப் பிரசித்தி பெற்ற உப்புப் போராட்டத்தை தண்டி என்ற இடத்திலே தொடங்கினார். அவரைப் பின்பற்றித் தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் சென்றார்கள்.

இந்த உப்புப் போராட்டம் இருபத்து நான்கு நாட்கள் தொடர்ந்து நடந்தன; காந்தியடிகளும்-தொண்டர்களும் சரோஜினி தேவி எழுதியப் பாடல்களைப் பாடிக் கொண்டே (Marching song) பஜனை கோஷ்டிகளைப் போல நடந்தார்கள்.

காந்தியடிகள் தண்டியில் எடுத்ததோ ஒருபிடி உப்பு தான்! அந்தப் பிடி உப்புப்போர் உலகத்தின் கவனத்தை ஈர்த்தது. இப்படி ஒரு அறப்போராட்டமா? இதுவரை எவரும் எந்த நாட்டிலும் உப்பு சப்பு இல்லாத ஒரு உப்புப் போராட்டத்தை, ஓர் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துச் செய்தது இல்லையே என்று மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

நாடெங்கும் உள்ள மக்கள் ஆங்கிலேயர் ஆட்சி விதித்த உப்புச் சட்டத்தைத் தூள் தூளாக்கினார்கள்; மக்கள் உத்வேகத்துடன் எழுச்சி பெற்று சட்டத்தை மீறினாலும், காந்தியடிகளின் கட்டளைக்குக் கீழ்படிந்து அரசு அடக்குமுறைகளுக்கு அடங்கியே நடந்து அமைதிக் காத்தார்கள்.

பம்பாய் பெருநகரிலே உள்ள தர்சனா என்ற இடத்தின் உப்பளத்தைக் கைப்பற்ற போவதாக மகாத்மா காந்தி ஆங்கிலேயர் ஆட்சிக்கு அறிவித்தார். அப்போது உடனே அவர் கைது செய்யப்பட்டார்; சிறையில் அடைக்கப்பட்டார்.

காந்தியடிகளின் அறப்போராட்ட உத்தரவுக்கு ஏற்றவாறு, சரோஜினி தேவியும், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பின் தொடர தர்சனா உப்பளத்தை நோக்கிச் சென்றார்.

போகும் வழியிலேயே கவிக்குயிலும், தொண்டர்களும் கைது செய்யப்பட்டு, எரவாடா என்ற ஊரிலே உள்ள சிறையிலே அவர்களை ஆங்கிலேயர் அரசு அடைத்தது.

சிறையிலே பூட்டப்பட்ட சரோஜினி, மேலும் பல கவிதைகளை, முன்னைவிட அதிக உத்வேகத்துடன் எழுதினார். சிறையிலே தனது உணவு விடுதி அருகிலேயே அங்குள்ள மண்ணைப் பண்படுத்திப் பூச்செடிகளை வளர்த்தார்.

சிறை அதிகாரிகள் அதற்கு எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல், அவரது கவிதை உள்ளத்துக்கு ஏற்றவாது அனுமதித்தார்கள்; அதனால், விதவிதமான மலர்ச் செடிகளை கவியரசி அங்கே பயிரிட்டு வளர்த்தார்.

கட்சித் தலைவர்களையும், தொண்டர்களையும் பிரிந்திருந்த துன்பத்தை மறந்தார்! சிறைவாசமே சுகவாசமாக மதித்து, பூத்துக் குலுங்கும் பூக்களின் வண்ண நிறங்களையும் அதன் மணங்களையும் சுவாசித்து, சரோஜினி தேவி நாள்தோறும் மகிழ்ச்சி அடைந்தார்

அந்த மலர்களின் மனத்திற்கு நாட்டு நிலையை ஒப்பிட்டுக் கவிதைகளை எழுதிக் கொண்டே இருந்தார். அவர் எழுதிய பாடல்களிலே ஒன்று இது:

“செவ்வண்ண பூக்களே! உங்களுடைய அழகான நிறத்துக்கு நிகராக எதை நான் ஒப்பிடுவேன். மணமகள் ஒருத்தி அணியும் ஆடைகளை ஒப்பிடுவதா? உங்களது நிறம் நாகமணிக்கு ஒப்பானவையா?”

"காலையில் உதயமாகும் சூரியனுக்கு முன்னே காட்சி தரும் கோலக்கடலின் ஒளிச் சிதறல்களுக்கு இணையானவை உங்களது நிறங்கள் என்பதா!"

"அழகரசி பத்மினிக்காகப் போரிட்டு மடிந்த அரசர்களின் மார்பிலே இருந்து வடிந்த ரத்த நிறத்தை ஈடு சொல்வதா! உவமையே உரைக்க முடியாத வண்ணத்தோடு பூத்துக்குலுங்கும் உங்களை எதற்கு ஒப்பிடுவது!" என்று வியந்து வியந்து கவிதைகளை எழுதினார்!

செண்பகமலரே! உனது இதழ்கள் அழகானவை; நீண்ட தூரம் மணத்தை வீசி அனைவருக்கும் நீ இன்பம் அளிக்கிறாயே! பெண்கள் உன்னைத் தலையில் சூட்டி, பிறகு மண்ணிலே மறைக்கின்றாயே; அது போலத்தான் மக்களது புகழும்-பெயரும் ஒரு நாள் மறைந்து விடுமோ!

செண்பக மலர் என்றதுமே. இன்பத்தேன் வந்து காதில் பாய்கிறதே. அது எத்துணை இன்பம் அளிக்கின்றது தெரியுமா! எவ்வனவு விரைவாக மலர்கிறீர்கள்! பிறகு எவ்வளவு விரைவாக வாடி விடுகிறீர்கள்?

மாம்பூ ஒன்று மலர்ந்து உதிர்ந்த விட்டாலும், பிறகு காயும் கனியும் தோன்றக் காரணமாகின்றதே! ஆனால், செண்பகமே! நீ அவ்வாறு எதனையும் தோற்றுவிப்பதில்லையே! என்றாலும், உன்னைப் பாடாமல் இருக்க முடியவில்லையே! இது நீங்கள் இழைத்த புண்ணியத்தின் பயனோ!" என்று கவியரசி ஒரு செண்பகப் பூவைக் கையிலே எடுத்து வைத்துக் கொண்டு; அதன் நிற அழகோடு கொஞ்சி மகிழ்வார்! இவ்வாறே ஒவ்வொரு பூவையும் பார்த்துப் பார்த்துப் பாடல் புனைந்திட மலர்களின் மலர்ச்சியிலே கரு பெறுவார் சரோஜினி தேவி!

கவிக்குயில் சிறைவாசம் சிறிது நாட்கள் இவ்வாறே நகர்ந்தன! விடுதலை நாளும் வந்தது! தான் வளர்த்த பூஞ்செடிகளையும் அதனதன் வண்ண வண்ணப் பூக்களையும் விட்டு விட்டுப் பிரிய மனமில்லாதவராக அவர் இருந்தார்.

சிறை அதிகாரிகளிடம் தனது விடுதலை நாளை மேலும் ஒரு வாரம் தள்ளித் தாமதமாகப் போடும்படிக் கேட்டுக் கொண்டார்! அதிகாரிகளும் பெண் கைதியின் வேண்டுகோளை ஏற்று அனுமதியும் அளித்தார்கள்! சரோஜினி தேவி வைத்த செடிகள் எல்லாமே மலர்ந்தன பிறகு, சரோஜினி தேவி ஒரு வாரம் கழித்து சிறையிலே இருந்து விடுதலையானார்!

சிறை மீண்ட கவியரசி, வெளியே வந்ததும் 1930-ம் ஆண்டிலிருந்து காங்கிரஸ் மகாசபையின் செயற்குழு உறுப்பினர் ஆனார்! தனது பணியை எவ்விதத் தடையுமின்றி வேகமாகவும், பொறுப்பாகவும், உடனுக்குடனும், சமய சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறும் நாட்டுக்காக உழைத்தார்; காந்தியடிகளின் தலைமையிலே இரவு பகல் பாராமல் ஓய்வின்றி சரோஜினி நாயுடு அரும்பாடுபட்டார்!