கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/04

விக்கிமூலம் இலிருந்து

4. கலப்பு-மணமும்; போற்றலும்! தூற்றலும்!!

இலண்டன் மாநகரத்திலே இருந்து குமாரி சரோஜினி இந்தியா திரும்பி ஐதராபாத் மாநகர் வந்து சேர்ந்தார்; மகள் நாம் ஆசைப்பட்டக் கல்வித் துறையை முடிக்காமல் திரும்பிவிட்டாரே என்ற மனக்கவலை அகோரநாதருக்கு ஏற்பட்டது.

இருந்தாலும் பரவாயில்லை; இளம் கவி நெஞ்சம் கொண்ட துடிப்பான குமாரியாகத் திரும்பி வந்து சேர்ந்த மகளை அன்புடன் வரவேற்றுத் தாயும் தந்தையும்வாழ்த்தி மகிழ்ச்சிப் பெற்றனர்.

பெற்றோர் முகம் பார்த்தவுடன் சரோஜினிக்கு நோயெல்லாம் எங்கே பறந்ததோ தெரியவில்லை. அகோர்நாதர் குடும்பமே புது மகிழ்ச்சிப் பூத்தத் குடும்பமாகத் காட்சி தந்தது. ஒருவரை ஒருவர் அன்புடன் அளவளாவி ஆனந்தமடைந்தார்கள்.

தாய் மண்ணை மிதித்ததும், அவர் தக்க மருத்துவரிடம் சிகிச்சை பெற்றதால், சரோஜினிதேவி முன்பு போல் வாலைக் குமரியாகக் காட்சி தந்தார்! வயது பத்தொன்பதுதான் என்றாலும் அழகு தவழும் சிலையாகவே விளங்கினார்.

வளமையானது இளமை; பசுமையான கனவுகள் மனதில் மலர்ந்தன! எப்போதும் கற்பனையான சொற்களின் ஆரவாரமே எதிரொலித்தன; கவிதைப் பூக்கள் நாள்தோறும் சரோஜினிதேவி என்ற பூந்தோட்டத்தில் பூத்துப் பொலிந்தன!

ஐதராபாத் நகரில் மருத்துவத்துறையில் புகழ்பெற்று விளங்கியவர் பா. கோவிந்தராஜுலு இவர் நாயுடு வகுப்பைச் சேர்ந்தவர்; தந்தை பெயர் பாஷியக்காரலு நாயுடு; தாயார் பெயர் முனியம்மாள்; கோவிந்தராஜூலு நாயுடுவும், சரோஜின் தேவியும் நெருங்கியவர்களாகப் பழகினார்கள்.

கோவிந்தராஜுலு இராணுவப் படையில் சுபேதார் மேஜராகப் பணிபுரிந்த ஓர் இராணுவ வீரர். உயர்ந்த பண்புகள் கொண்டவர்; நாயுடு குணங்கள் சரோஜினி தேவிக்குப்பிடித்திருந்தன. இருவருக்கும் இடையே அன்பு இணைந்தது; அது இல்லறத் தம்பதிகளாக மாறிடும் காதல் வலிமை கொண்டதானது. குறிப்பாக சரோஜினி தேவி கவியுள்ளம் நாயுடுவை கவர்ந்து விட்டதும் ஒரு காரணமாகும்.

நாயுடுவுக்கு உடன் பிறந்த ஆண் மக்கள் இருவர்: அவர்கள். துரைசாமி நாயுடு; கோவிந்தராஜுலு நாயுடு என்பவராவர்; பெண்மக்கள் ஐவர்; அவர்கள் அம்மணி, ஜானகி, சின்னம்மாள், தாயாரம்மாள், செல்லம்மாள் என்பர்களாவர்.

பாஷியகாரலு நாயுடுவுக்கு மொத்தம் எட்டுக் குழந்தைகள்! அதனால், அவர் வருவாயில் முக்கால் பங்குக்கு மேல் தமது மக்களது கல்விக்காக செலவழிக்க வேண்டி கட்டாய நிலை ஏற்பட்டது.

நாயுடுவுக்கு பதினெட்டாம் வயதிலேயே முதல் திருமணம் நடந்து விட்டது; பெண், நாயுடு ஜாதி; பெயர் சாராதாம்பாள்; பதின்மூன்றாம் வயதிலேயே அந்தப் பெண் சாவு என்ற தீரா நோய்க்குப் பலியானாள்!

மருத்துவத் துறையில் நாயுடுக்கு நல்ல பெயருண்டு; காரணம், நோயாளிகளை இன்முகம் காட்டி, பேசி, வரவேற்றுப் பழகுவார். என்ன நோய்; எப்படி வந்தது; என்ற காரணங்களை எல்லாம் கேட்டு; தக்க மருந்துகளைத் தருவதில் வல்லவர், நல்லவர் என்ற பெயர் பெற்றிருந்தார்!

ஏழைகளுக்குக் கருணை காட்டி, பரிவு கூர்ந்து, செல்வர்களுக்கு அன்பு காட்டி உளமாரப் பழகும் பண்பால், அவரது மருத்துவத் தொண்டு புகழ்பெற்றது; தொழிலும் ஓங்கியது; மக்களும் அவரைப் பாராட்டினர்.

குடும்பப் பாசத்துடன் சகோதர சகோதரிகளோடு நெருக்க உறவு கொண்டு அவர் பழகுவார் நேர்மையான உள்ளம்; கண்டிக்கும் நெஞ்சுரம்; தவறைத் தட்டிக் கேட்டுத் திருத்தும் பண்பு; அநியாயம் கண்டவிடத்துக் கேட்கும் துணிவு கொண்ட அரிய பண்பாளர் நாயுடு யாருக்கும் எதற்கும் அஞ்சாத கடமையாளர்!

இத்தகைய ஒரு பண்பாளரை சரோனனி திருமணம் செய்துகொள்ள விரும்பினார். தந்தை அகோரநாத் அவர்களுக்கும் தெரிவித்து அனுமதி கேட்டார்

சரோஜினிதேவி திருமணத்தை நெருங்கிய உறவும், சீர்திருத்த நெஞ்சங்களும் பாராட்டிப் போற்றின; வழக்கம் போல பிரமாணம் தனது சாதிமுறை வருணாசிரமக் கணைகளை விடுத்தது! ஆனால், தம்பதிகள் இருவருமே எதற்கும் அஞ்சவில்லை!

அகோரநாதரும், மகளை விடப் பெரியது ஒன்றுமிலை என்ற முடிவை மேற்கொண்டார்! திருமணத்திற்குச் சம்மதித்தார்! வாதப் பிரதிவாதங்கள் நெருப்புப்போல எதிர்த்துக் கிளம்பின.

இருப்பினும், பிராமணப் பெண் நான் அவரை விரும்புகிறேன். நாயுடு வகுப்பினரான அவர் என்னை விரும்புகிறார்! இடையே உங்களுடைய அனுமதி எமக்குத் தேவையில்லை; எவர் தடுத்தாலும் விடேன்; மணப்பேன்; என்று சரோஜினி வீர தீர திருமண முரசு கொட்டினார்!

கோவிந்தராஜுலு பிரம்மசமாஜத்தைச் சேர்ந்த சிந்தனையாளர்; பொருளற்ற சடங்குகளை எதிர்த்தவர்; அதனால் பிரம்மசமாஜத்து முறைப்படியே தம்பதிகள் இருவருடைய திருமணமும் நடந்தேறியது.

கவிக்குயில் சரோஜினி நாயுடு திருமணம், கலப்புத் திருமணமாக நடந்து முடிந்தது; சீர்திருத்தவாதிகள் போற்றினார்கள்; பழமை விரும்பியான வருணாசிரம அடிமைகள் மற்றும் சிலர் தூற்றினார்கள். இல் வாழ்க்கையை கோவிந்தராஜுலு-சரோஜினிதேவி இருவருமே இன்பமாகத் தொடர்ந்தார்கள்.