கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/09

விக்கிமூலம் இலிருந்து

9. காந்தியடிகள் தத்துவம் கவிக்குயிலை ஈர்த்தது!

கவியரசி சரோஜினிதேவி பிரிட்டிஷ் இந்திய மந்திரி மாண்டேகு சவாலை ஏற்று வெற்றிபெற்ற பின்பு இந்திய மக்கள் அவரை ஒரு தேசியக் கவியாக மதித்துப் போற்றினார்கள்.

கவிக்குயில் பொதுத்தொண்டு, மக்கட்சேவை, ஆகியவற்றைக் காலம் திசை மாற்றியது. இதற்கு முன்பு கவி பாடியதைப் போலல்லாமல் இப்போது நாட்டின் விடுதலையைப் பற்றியும், மக்களின் அவல நிலையினைப்பற்றியும் அடுத்தடுத்து அவர் பாடிக்கொண்டே இருந்தார்.

நாட்டுக்கு எந்தெந்த சக்திகள் தேவையோ, அவற்றையே பல வியூகங்களில் பாடிப்பாடி அவர் மக்களை எழுச்சிப் பெற வைத்தார்! இதனால், கவியரசி ஒரு தேசியக்கவி என்று மக்களால் மதிக்கப்பட்டார்.

'பாரதமாதா பள்ளி' எழுச்சியென்று அவர் பாடிய பாடலிலே ஒன்று மக்களிடையே மாபெரும் மரியாதையை உருவாக்கியது. அந்தப்பாடல் இதுதான்:

"பாரத மாதாவே!
நீ மிக மிக முதியவள். மிக மிகத் துன்புற்றவள்!
குழந்தைகள் பல ஈன்றவள்! எனினும்,
குன்றாத இளமை உடையவள்!
சின்னாள்களாய் ஏனோ துயில் கொண்டனை?
இனியேனும் கண் விழித்துக்கொள்!
சுதந்திர வழி தவறி அடிமை நெறி நடக்கும்
உன் மக்களை நேர்வழியில் செலுத்து!
இன்னும் ஏன் உறங்குகின்றனை?
உன் குழந்தைகளுக்காக விழிக்கலாகாதா?
அரியாசனத்திலிருந்து செங்கோலோச்சிய நீ
இழந்த அரசை மீண்டும் அடையும் காலம்
வந்துற்றது; துயில் நீங்கிக் கண் விழித்திடு!
அரசை ஏற்ற உன் மக்களை மகிழ்வுடன் காத்திடுக!

பாரதமாதாவுக்கு இவ்வாறு கவியரசி பாடிய பள்ளி எழுச்சிக் கீதம், மக்கள் மனதிலே பதிந்து விடியல் காலங்களில் விடிவெள்ளிப் பாடலாக பாடிடும் உயிர்நிலைப் பெற்று விட்டது.

அதே நேரத்தில் காந்தியடிகளின் அகிம்சை தத்துவத்தின் செல்வாக்கு, நாட்டிலே பரவி வேரூன்றிப் பரந்து வந்தது. கவியரசி இந்த புகழைக் கண்டு மனம் பூரித்தார். அந்த மக்கள் மதிப்பு கவிக்குயிலையும் ஈர்த்து விட்டது.

"தீமையைத் தீமையால் அழிக்க முடியாது தீமையை நன்மையால்தான் வெற்றி பெற முடியும்; பகைவனுக்குக் அருள்வாய் நன்னெஞ்சே!” என்ற காந்தியடிகளது தத்துவத்திலே சரோஜினிதேவியின் மனம் நம்பிக்கைக் கொண்டது.

மேற்கண்ட தத்துவ உண்மையை காந்தியடிகள் மக்களது மனதிலே பதியுமாறு ஒவ்வொரு மேடைதோறும் பேசிவந்தார்; பத்திரிகையிலேயும் தவறாது நாளும் எழுதி வந்தார். இந்த அற்புதமான அகிம்சை நெறி நாட்டிலே ஒரு புதிய திருப்பத்தை மாறுதலை நிகழ்த்தியபடியே இருந்தது.

“காந்தியடிகளது இந்த அரசியல் தாரக மந்திரம் கவியரசியை எவ்வாறு ஆட்கொண்டது என்பது சரோஜினி தேவி வேறொரு வாயிலாக நாட்டுக்குத் தெரிவித்திருப்பதைப் படியுங்கள்:

"தீர்க்கதரிசிகளும், புரோகிதர்களும், அவர்களுடைய கொள்கைகளைப் போற்றட்டும்.”

“அரசர்களும், அமைச்சர்களும், அவர்களுடைய வெற்றிச் செயல்களைப் புகழட்டும்; வேண்டாம் என்று கூறவில்லை; ஆனால்;”

“இறைவனே! தோல்வி கண்டோருக்கு ஆறுதல் கொடுத்து அருள்வாய் வளமை அற்றோருக்குத் தைரியம் அருள்வாய்!"

“கவி பாடி, மெய் மறக்கும் பேறு எனக்கு அளித்து அருள்வாய்!”

-என்று ஒரு கவிதையிலே மகாத்மா மந்திரப் பொருளைக் கவி மூலமாக மக்களுக்கு எடுத்துக் காட்டிப் போற்றினார்; அவர் எழுதிய மற்றொரு பாடலிலே மகாத்மா தத்துவம் கீதமாகத் தவழ்ந்தாடுவதையும் பாருங்கள்:

"போரும்-பூசலும் நிறைந்துள்ள இடங்களில் மறத்தை புல், அறியாமையையும் அன்பு வெல்க!"

"வாளேந்தியப் போர் வீரர்கள் போர் முனைக்குச் சென்றால், நான் எனது இனிய பாடல்களையும் ஏந்தி உடன் செல்வேன்!”

"அயர்ந்து, களைத்துச் சோர்ந்து காணப்படும் அவர்கள் கரங்களுக்கு நான் நம்பிக்கை என்ற வலிமையைக் சேர்ப்பேன்!"

"எங்கும் அமைதி நிலவுக, அதனுள் ஆனந்தம் துளிர்த்திடுக. சத்தியம் வெல்க. அன்பும் இன்பும் வையகமெலாம் பரவிடுக."

-என்று கவியரசி சரோஜினிதேவி தேசபக்திப் பாடல்களை பற்பல எழுதிக்குவித்தார் அதனால், மக்கள் அவரைத் தேசியக்கவி என்று போற்ற ஆரம்பித்தார்கள்!

தேச சேவையே, நாட்டுப்பற்றே, சுயராஜ்ஜிய மந்திரமே, அவரது வாழ்க்கையாக மாறிவிட்டது. காந்தியக் கொள்கை மூச்சானது; தான் பின்பற்றும் மதம் அதுவே என்ற உணர்ச்சிக்கு அவர் உந்தப்பட்ட கவிஞர் ஆனார்.