இயல் தமிழ் இன்பம்/கவிஞர் கண்ட காதலர்களும் தொழிலாளர்களும்

விக்கிமூலம் இலிருந்து

10. கவிஞர் கண்ட காதலர்களும்
தொழிலாளர்களும்

முழு நிலா காயும் ஒரு பருவ நாள் - இரவு நேரம்- ஒரு வெட்ட வெளி. அதில், ஒரு காதல் இணை அதாவது காதலனும் காதலியும் கை கோத்தபடிப் பேசி மகிழ்ந்து சிரித்துக் கொண்டிருந்தனர். காதலியினும் காதலன் சிறிது உயரமாக இருக்கிறான். இன்ப மயக்கத்திலே காதலியின் கூந்தல் சரிந்து கிடக்கிறது. இருவரும் மகிழ்ந்து பேசி நகைக்கும்போது, பெண்ணாதலின் காதலியின் சிரிப்பு ஒலி சிறிதாக இருந்தது. ஆண் ஆதலின் காதலன் ‘கல கல’ என உரக்கச் சிரித்தான். இந்தக் காட்சியைக் கண்ட கவிஞர் (பாவேந்தர் பாரதிதாசன்) இதைப் பின்வரும் பாடலாக வடித்துத் தந்துள்ளார்:

“வெட்ட வெளியினில் நாங்கள் - எதிர்
வேறொரு காட்சியும் கண்டோம்
குட்டைப் பனைமரம் ஒன்றும் - எழில்
கூந்தல் சரிந்ததோர் ஈந்தும்

மட்டைக் கரங்கள் பிணைத்தே - இன்ப
வார்த்தைகள் பேசிடும் போது
கட்டுக்கு அடங்கா நகைப்பைப் - பனை
‘கல கல’ என்று கொட் டிற்றே.”

என்பது பாடல். இங்கே, குட்டைப் பனை மரம்தான் காதலன்; ஈச்ச மரம்தான் காதலி. ஈந்து என்றால் ஈச்ச மரம். பனை மரம் மிகவும் நெட்டையா யிருக்கும். மிகவும் உயரமாய் இருப்பவரைப் பார்த்து ‘பனை மரம் போல் வளர்ந்து விட்டார்’ என்று கூறுவது வழக்கம். ஆனால், சிற்றீச்ச மரமோ, பனை மரம் போல் இன்றி ஓரளவு உயரமே இருக்கும். காதலனும் காதலியும் கைகோத்துக் கொள்ள வேண்டுமெனில், நெட்டைப் பனை மரத்திற்கு ஒத்து வராது. அதனால்தான், ஈச்ச மரத்தோடு கைகோத்துக் கொள்ளக் குட்டைப் பனை மரத்தால் முடிந்தது.

காதலி ஈந்தின் கூந்தல் சரிந்தது எப்படி? பனை மரத்தின் மட்டைகள் நேர்க் கோட்டில் நீண்டு கொண்டிருக்கும். (நாளாகிய பனை மட்டை இற்று விழும் நிலையில் கீழ் நோக்கித் தொங்குவதை இங்கே எடுத்துக் கொள்ள லாகாது). ஈச்ச மரத்தின் மட்டைகளோ எப்போதுமே - இயற்கையாகவே சரிந்த நிலையில் இருக்கும். இந்த இயற்கை நிலைமை, இன்ப மயக்கத்தால் கூந்தல் சரிந்திருக்கும் நிலையை நினைவூட்டுகிறது.

கை கோத்துக் கொள்ளலாவது: குட்டைப் பனை மரமும் ஈந்தும் பக்கத்தில் பக்கத்தில் நெருங்கி யிருப்பதால், பனையின் மட்டைகள் ஈந்தின் மட்டைகளுக்குள்ளும், ஈந்தின் மட்டைகள் பனையின் மட்டைகளுக்குள்ளும் புகுந்து செருகிக் கொண்டிருக்கும் நிலை. இதுதான் கை கோத்துக் கொள்ளுதல் என்பது.

இன்ப வார்த்தைகள் பேசுதல் என்பது, காற்றினால் மட்டைகள் அசையும்போது ஏற்படும் ஒலியாகும்.

காதலி பெண்ணாதலின் அவளது சிரிப்பொலி பெரிதாயில்லை; காதலன் ஆடவனாதலின் சிரிப்பொலி பெரிதாயிருந்தது-என்பதாவது: ஓலை காய்ந்த பனை மட்டைகள் காற்றினால் ‘கல கல’ என்று பேரொலி எழுப்புவதாகும்.‘பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது’ என்னும் பழமொழி ஈண்டு எண்ணத்தக்கது. கட்டுக்கு அடங்கா நகைப்பு என்பது: பனை மட்டைகள் ஓயாது சல சலத்துக் கொண்டிருப்பதாகும். ‘சல சல’ என்பது ‘கல கல’ என்பது போன்ற ஒலிக் குறிப்பாகும். ‘கல கல’ என்று கொட்டிற்று என்பது: ஒருவர் அளவு மீறிப் பேரொலியுடன் தொடர்ந்து சிரித்தால், இன்னொருவர் அவரைப் பார்த்து, ‘போதும் சிரித்தது-நிரம்பக் கொட்டி விடாதே-பல் கொட்டிவிடப் போகிறது’ என்று கூறும் உலகியல் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது. கொட்டுதல் என்பது மிகுதியைக் குறிப்பதற்கு இன்னொரு சான்று வருமாறு: தண்ணீரைச் சிந்தினார்-தண்ணீரைத் தெளித்தார் என்பன சிறிதளவு தண்ணீரையே குறிக்கும். தண்ணீரைக் கொட்டினார் என்பதோ, கலத்திலுள்ள தண்ணீர் முழுவதையுமே குறிக்கும். இவ்வளவு சொல் நயங்களும் பொருள் நயங்களும் கவிஞர் பாரதி தாசனின் இப்பாடலில் அமைந்திருப்பது மிக்க இலக்கியச் சுவை பயக்கின்ற தன்றோ.

பாவேந்தரின் ‘மாவலி புரச் செலவு’ என்னும் தலைப்பில் உள்ள பத்துப் பாடல்களுள் இது ஐந்தாவது பாடலாகும். சிறந்த கற்பனைகளும் உவமைகளும் தற்குறிப் பேற்றமும் சமுதாயக் கருத்தும் தொழிலாளர்கள்பால் பரிவும் இந்தப் பாடல்களில் பொதிந்துள்ளன.

கவிஞர், நண்பர்கள் சிலருடன், ஒருநாள் இரவு நிலா ஒளியில் தோணியில் ஏறிப் பக்கிங்காம் கால்வாய் வழியாகச் சென்னையிலிருந்து மாவலிபுரம் சென்றாராம். நிலா சினம் கொண்டதுபோல் மிகவும் சிவந்து காணப்பட்டதாம். தொழிலாளர் படும் தொல்லையைக் கண்டு அது சிவந்திருக்குமோ என எண்ணிச் சுற்று முற்றும் பார்த்தளாம். தோணியைச் செலுத்தும் தொழிலாளர்கள் படும் தொல்லையைக் கண்டு நெஞ்சம் துடித்தாளாம். அது தொடர்பான இரு பாடல்கள் வருமாறு:-

“தோணிக் கயிற்றினை ஓர் ஆள் - இரு
தோள்கொண் டிழுப்பது கண்டோம்
காணச் சகித்திடவில்லை - அவன்
கரையொடு நடந்திடு கின்றான்
கோணி முதுகினைக் கையால் - ஒரு
கோல் துணியால் இலை போன்ற
தோணியை வேறொரு வன்தான் - தள்ளித்
தொல்லை யுற்றான் பின்புறத்தில்”-

“இந்த உலகினில் யாரும் - நல்
இன்ப மெனும் கரை ஏறல்
சந்த்தமும் தொழி லாளர் - புயம்
தரும் துணை யன்றி வேறே
எந்த விதத்திலும் இல்லை - இதை
இருபது தாம் சொன்னோம்
சிந்தை களித்த நிலாவும் - முத்துச்
சிந்தொளி சிந்தி உயர்ந்தான்”-

இந்தப் பகுதியைச் சேர்ந்த பத்துப் பாடல்களுமே பத்தாயிரம் பாடல்கட்கு ஒப்பாகும். கவிஞரின் இலக்கியச் சிறப்பிற்கும் சமுதாய நோக்கிற்கும் இதனினும் வேறு சான்று வேண்டுமா?