என் சுயசரிதை/என் இளமை பருவ சரித்திரம்

விக்கிமூலம் இலிருந்து

இந்நூல் என் தந்தை தாயார்

ப. விஜயரங்க முதலியார்

ப. மாணிக்கவேலு அம்பாள்

ஞாபகார்த்தமாக பதிப்பிக்கப்பட்டது.


என் இளம் பருவ சரித்திரம்

“பம்மல் விஜயரங்க முதலியார் இரண்டாவது விவாகத்தின் நான்காவது குமாரன் திருஞான சம்பந்தம் 1873-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் 1-ந்தேதிக்குச் சரியான ஆங்கீரச வருஷம் தை மாதம் 21ந்தேதி சனிக்கிழமை உத்திராட நட்சத்திரத்தில் ஜனனம் சென்னப்பட்டணத்தில்” என்று நான் தகப்பனார் விஜயரங்க முதலியார் எழுதி வைத்துவிட்டுப்போன குடும்ப புத்தகத்தில் அவர் கையெழுத்திலிருக்கிறது. நான் இப்போது இதை எழுதத் தொடங்கும்போது வசிக்கும் ஆச்சாரப்பன் வீதி 70-ஆம் நெம்பர் வீட்டில் முதற்கட்டில் வடகிழக்கு மூலையில் உள்ள அறையில் நான் பிறந்ததாக என் தாயார் எனக்கு சொன்னதாக ஞாபகமிருக்கிறது.

பூவுலகில் மனிதனாய் பிறக்கும் ஒவ்வொருவனைப்பற்றியும் இரண்டு விஷயங்கள் நிச்சயமாய் கூறலாம், அவன் ஒரு நாள் பிறந்திருக்கவேண்டும். அவன் ஒருநாள் இறக்க வேண்டுமென்பதாம், ஆயினும் இவ்விரண்டு விஷயங்களைப்பற்றியும் அவன் நேராகக் கூறுவதற்கில்லை. பிறந்ததைப்பற்றி மற்றவர்கள் கூறுவதைத்தான் நாம் ஒப்புக்கொள் வேண்டும். இறந்ததைப் பற்றியும். மற்றவர்கள் பின்கூறவேண்டுமல்லவா?