அம்புலிப் பயணம்/அப்போலோ திட்டம்

விக்கிமூலம் இலிருந்து
7. அப்போலோ திட்டம்

நாசா இயக்கத்தினர் வகுத்த மூன்று திட்டங்களில் இது மூன்றாவது திட்டமாகும். இத்திட்டத்தின்படி ஒரு மனிதனைப் பாதுகாப்பான விண்வெளிக் கலத்தில் சந்திர மண்டலத்திற்கு அனுப்பி மீட்க வேண்டும். மனிதனைச் சந்திரனுக்கு அனுப்புவதற்கு முன்னால் பல புடிகளில் சோதனைகளை மேற்கொள்ளல் வேண்டும். இச்சோதனைகளை முதலில் பூமியின் சுற்று வழியில் செய்து பார்த்தல் வேண்டும். முதலில் ஆளில்லாத விண்கலங்களைக் கொண்டும் அதன் பிறகு மூன்று விண்வெளி வீரர்களைக் கொண்டும் இச் சோதனைகள் செய்யப் பெறுதல் வேண்டும். இந்த விவரங்களை ஈண்டுக் காண்போம்.

அப்போலோ -1: ஆளில்லாத இந்த விண்வெளிக் கலம் பூமியின் சுற்று வழிக்கு அனுப்பப்பெற்றது.[1] கலத்தை விண்வெளிக்கு அனுப்பும் ஊர்தியும் விண்வெளிக் கலமும் அடங்கிய இணைப்பின் ஏற்புடைமையும் (Compatibility) அமைப்பின் உருக்குலையா நிலையும் (Structural integrity) சரியாக அமைகின்றனவா என்பதைச் சோதனை மூலம் சரி பார்ப்பதே இப் பயணத்தின் நோக்கமாகும் மேலும், விண்வெளியில் செல்லும் நிலையில் கலத்தின் பல்வேறு அமைப்புக்கள் சரிவர இயங்குகின்றனவா, விண்வெளிக் கலத்தின்மீதுள்ள கவசம் அதிக வெப்பத்தைத் தாக்குப் பிடிக்கின்றதா, அந்த வெப்பத்துடன் அதனைப் பூமிக்கு எங்கனம் மீட்பது. என்பன போன்ற பிரச்சினைகளை இதில் சோதித்து வெற்றி கண்டனர். இந்த விண்வெளிக் கலம் சாட்டர்ன் - 1 என்ற இராக்கெட்டில் வைத்து அனுப்பப்பெற்று, கென்னடி முனையிலிருந்து தென் அட்லாண்டிக் மா கடலை நோக்கிச் சென்றது.

அப்போலோ-2: இந்த விண்வெளிக் கலமும் ஆளில்லாத கலமாகும். இக் கலமும். சாட்டர்ன் - 1 இராக்கெட்டில் வைத்தே அனுப்பப் பெற்றது.[2] இதுவும் பூமியின் சுற்று வழியிலேயே இயங்கியது. கலத்தின் கருவித் தொகுதியிலிருந்து சேமித்த நிலையிலிருக்கும் திரவ நீரியத்தையும் (Hydrrigen) திரவ உயிரியத்தையும் {Oxygen) பூமியின் இழுவிசை சூன்யமாக இருக்கும்பொழுது தனியாகப் பிரிக்க முடியுமா, கலத்தின் இயக்கம் நின்றுபோனால் அதனைத் திரும்பவும் இயங்கச் செய்ய முடியுமா. என்பவற்றைச் சோதித்தலே இப் பயணத்தின் நோக்கங்களாகும். இவற்றைத் தவிர, நான்காவது சுற்றுவழியில் அழிதலில் கொண்டு செலுத்தும் அமுக்கம், அமைப்புபற்றிய சோதனைகளையும் செய்து பார்த்தல் வேண்டும்.

அப்போலோ -3 ; இந்தப் பயணம் கென்னடி முனையிலிருந்து மேற்குப் பசிபிக் மாகடலை நோக்கி மேற்கொள்ளப் பெற்றது.[3] இந்த விண்வெளிக் கலமும் சாட்டர்ன் - 1இல் வைத்தே இயக்கப்பெற்றது. இந்தப் பயணமும் ஆளில்லாத பயண்மேயாகும். கட்டளைப் பகுதி (Ceramand Module) பணிப் பகுதி (Service Module) இவற்றின் துணை அமைப்புகளிலும், விண்வெளிக் கலத்தின் ஏற்புடைமையிலும், அமைப்பின் உருக்குலையா நிலையிலும் சோதனைகளை மேற்கொள்ளல்; அதிக வெப்பத்துடன் கலம் திரும்பி வருங்கால் விண்கலத்தின் கவசம் சரியாக இருக்கின்றதா என்பதைச் சோதித்தல் ஆகிய நோக்கங்களை நிறைவேற்றலே இப்பயணத்தின் குறிக்கோளாகும். இப்பயணமும் இனிதாக நிறைவேறியது.

அப்போலோ -4 : பயண ஒத்திகை நடைபெற்ற போது - எதிர்பாராமல் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக வர்ஜில் கிரிஸம் (Virgi! Grissom), எட்வர்ட் வொயிட் (Edward White), ரோஜர் சேஃபீ (Roger Chaffee) என்ற மூன்று விண்வெளி வீரர்கள் இறந்த பிறகு[4] மேற்கொள்ளப் பெற்ற ஆளில்லாத முதற் பயணமாகும் இது.[5] அன்றியும், மூன்று விண்வெளி வீரர்களைக் கொண்ட கலத்தைச் சந்திரனை நோக்கி அனுப்ப இருக்கும் சாட்டர்ன் - 5 என்ற மாபெரும் இராக்கெட்டினைக் கொண்டு மேற்கொள்ள இருக்கும் வரலாறு காணாத பயணத்திற்கு முன்னர் அந்த இராக்கெட்டின் துணை கொண்டு மேற்கொள்ளப் பெற்ற முதற் பயணமும் இதுவேயாகும். இதிலும் அம்புலிப் பயணத்திற்கு முன்னர் சோதிக்க வேண்டிய பல்வேறு அமைப்புகள் மீண்டும் சோதித்துச் சரிபார்க்கப் பெற்றன.

அப்போலோ-5 : இந்த விண்வெளிப் பயணத்தை நாசா இயக்கத்தினர் கென்னடி முனையிலிருந்து தொடங்கினர். இந்தப் பயணமும் ஆளில்லாத பயணமே. அப்போலோ - 5 விண்வெளிக் கலம் சாட்டர்ன் - ஐபி என்ற இராக்கெட்டினால் பூமியின் சுற்று வழிக்கு அனுப்பப் பெற்றது.[6] 1909 இல் அப்போலோ தாய்க் கலத்தினின்று இரண்டு விண்வெளி வீரர்கள் முதன் முதலாக அம்புலியில் இறங்கப் போகும் திட்டத்தின்படி மேற்கொள்ள இருக்கும் பயணத்தில் பயன்பட இருக்கும் அம்புலி ஊர்தியில் (Lunar Module) செய்யப் பெற்ற முதல் சோதனை இப் பயணத்தில் செய்யப் பெற்றது. சோதனையின் முடிவுகள் மிகவும் வெற்றிகரமாக இருந்ததால், இதில் இரண்டாவது சோதனையை மேற்கொள்ளத் தேவையில்லை என்றும் தீர்மானிக்கப்பெற்றது.

அப்போலோ - 5 : அப்போலோ - 6 விண்வெளிப் பயணம் சாட்டர்ன் - 5 என்ற இராக்கெட்டினால் தொடங்கப் பெற்ற இரண்டாவது பயணமாகும். இப்பயணமும், கென்னடி முனையிலிருந்துதான் தொடங்கியது.[7] கட்டளைப் பகுதியும் பணிப்பகுதியும் கொண்ட இணைப்பு 4,00,000 அடி (120 கி. மீ.) உயரத்தினின்றும் அம்புலியினின்றும் திரும்புங்கால் எந்த வேகத்தில் வருமோ அதே வேகத்தில் காற்று மண்டலத்தில் துழைந்தது தவிர, அந்த விண்வெளிக் கலம் ஏற்கெனவே குறிப்பிடப் பெற்றிருந்த இட இலக்கினின்றும் எட்டு கி. மீ. தொலைவில் இறங்கியது. 1969 இல் மேற்கொள்ள விருக்கும் அம்புலிப் பயணத்தின் வெற்றிக்கு அறிகுறியாக இப் பயணம் அமைந்ததாக அறிஞர் உலகம் பெருமிதம் கொண்டது: அமெரிக்கரின் சலியாத உழைப்பையும் தொழில் நுணுக்கத் திறனையும் பாராட்டி மகிழ்ந்தது.

அப்போலோ-7 : அப்போலோ - 7 பயணம் அப்போலோ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பெற்ற பயணங்களில் முதன் முதலாக் மேற்கொள்ளப்பெற்ற ஆளுள்ள பயணமாகும். இந்தப் பயணமும் கென்னடி முனையிலிருந்து தான் தொடங்கியது. சாரட்டர்ன் - ஐபி என்ற இராக்கெட்டு மூன்று விண்வெளி வீரர்களைக் கொண்ட அப்போலோ - 7 விண்வெளிக் கலத்தைப் பூமியின் சுற்று வழிக்கு அனுப்பியது.[8] இந்தப் பயணம் கிட்டத்தட்ட பதினொரு நாள்கள் நீடித்தது. இப் பயணத்தில் விண்வெளி வீரர்கள் சென்று வந்த தொலைவு எழுபத்திரண்டு இலட்சம் கிலோ மீட்டர்களாகும் ! திரும்பிய விண்வெளிக் கலமும் அட்லாண்டிக் மாகடலில் ஏற்கெனவே குறிப்பிடப் பெற்றிருந்த இடஇலக்கில் சரியாக வந்து இறங்கியது. இது. பெருமகிழ்ச்சிக்குரிய வெற்றியாகும். இப் பயணத்தில் முதன்முதலாக விண்வெளியினின்றும் அவ்வப்பொழுது கண்ட காட்சிகள் தொலைக் காட்சிப் படங்களாக அனுப்பப்பெற்றன; எரிபொருளாக அமைந்த கலங்களினின்றும் (Puel cells) - குடிநீர் தயாரிக்கப்பெற்றது. ஆட்கள் ஏறிச்சென்ற விண் கலத்தின் இயக்கும் அமைப்பில் அதிக எண்ணிக்கையில் நின்றுபோன விண்கலம் திரும்பத் திரும்ப இயக்கப்பெற்றது. இப்பயணத்திலே ஆகும். அமெரிக்கா மேற்கொண்ட, மூன்று விண்வெளி வீரர்கள் சேர்ந்து சென்ற முதல் விண்வெளிப் பயணம் இதுவேயாகும். இப் பயணத்துடன், அந் நாட்டு விண்வெளி வீரர்கள் விண்வெளியில் கழித்ததும் மொத்தம் 781 மணி நேரம் ஆகும். உண்மையில் இது விண்வெளிப் பயணத்தில் ஒரு புதிய திருப்பம் ஆகும்.

1968ஆம் ஆண்டு நிறைவுபெறும் தறுவாயில் அமெரிக்கா மனிதர்களைச் சந்திரனில் இறக்க வேண்டும் என்ற அந்நாட்டுக் குறிக்கோளின் அருகே சென்றுவிட்டது. மிகவும் பாராட்டுதற்குரிய செய்தியாகும். அமெரிக்காவின் மூன்று விண்வெளி வீரர்கள் தாம் பூமியின் இழுவிசையினின்றும், விடுபட்டு அகப்பற்றும் புறப்பற்றும் நீங்கி வீட்டுலகம் செல்லும் ஆன்மாக்கள் போல் எங்கும் பரந்து கிடக்கும் அகண்ட பெருவெளியில் பூமிக்கு அணித்தாகவுள்ள மற்றோரு துணைக்கோளின் அருகே சென்ற முதல் மனிதர்களாவர். இந்த ஆண்டின் இறுதியில்[9] மூன்று அமெரிக்க விண்வெளி வீரர்கள் கென்னடி - முனையினின்றும் சாட்டர்ன் - 5 என்ற மாபெரும் இராக்கெட்டின் உதவியினால், அப்போலோ - 8 இல் தம் விண்வெளிப் பயணத்தைத் தொடங்கினர். மனிதர்கள் அம்புலிக்கு அருகில் சென்ற முதற் பயணம் இதுவேயாகும். அவர்கள் அம்புலிக்குக் கிட்டத்தட்ட நூற்றுப் பன்னிரண்டு கி. மீட்டர் தொலைவிலிருந்த வண்ணம் பத்து முறை அத் துணைக்கோளை வலம் வந்தனர். பயணம் தொடங்கிக் கிட்டத் தட்ட 147 மணி நேரத்திற்குப் பிறகு அவர்கள் காற்று மண்டலத்திற்குள் திரும்பவும் நுழைந்தனர். பசிபிக் மாகடலில் ஏற்கெனவே குறிப்பிடப்பெற்றிருந்த சரியான இடத்தில் மிகவும் பாதுகாப்பாக அவர்கள் வந்திறங்கினர். இந்த மூன்று விண்வெளி வீரர்களும் நல்ல உடல் நலத்துடனேயே காணப் பெற்றனர். அப்போலோ . 8 பயணத்தின் முழு விவரங்களையும் அடுத்த இயலில் விரிவாகக் காண்போம்.


  1. 1966ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் நாள்.
  2. 1986ஆம் ஆண்டு சூலை 5 ஆம் நாள்.
  3. 1986ஆம் ஆண்டு ஆகஸ்டு 25-ஆம் நாள்.
  4. 1967 ஆம் ஆண்டு சனவரி 27ஆம் நாள்.
  5. 1967ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் நாள்.
  6. 1968ஆம் ஆண்டு சனவரி 32ஆம் நாள்.
  7. 1968ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் நாள்.
  8. 1988ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் நாள்.
  9. 1968ஆம் ஆண்டு திசம்பர் 21-ஆம் நாள்.