பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
9. புல்லாணி எம்பெருமான்

கொல்லணை வேல் வரிநெடுங்கண்
கௌசலைதன் குலமதலாய்!
குனிவில் ஏந்தும்
மல்லணைந்த வரைத் தோளா!
வல்வினையேன் மனமுருக்கும்
வகையே கற்றாய்
மெல்லணைமேல் முன்துயின்றாய்!
இன்று இனிப்போய்
வியன் கானமரத்தின்நீழல்
கல்லணைமேல் கண்துயிலக்
கற்றனையோ காகுத்தா!
கரிய கோலே!

என்று குலசேகரர் பாடுகிறார். தனயனான ராமன் காட்டுக்குப் புறப்பட்டான் என்றவுடனே, தந்தை தசரதன் புலம்புவதாகப் பாட்டு. அரண்மனையில் பிறந்து, அரண்மனையில் வளர்ந்து ஹம்ஸதூளிகா மஞசத்தில் உறங்கிய பிள்ளை இனி காட்டிலே கல்லையே அணையாகக் கொண்டல்லவா உறங்கப்போகிறான் என்ற உடனே உள்ளத்தில் எழும் தாபம் வெளிப்படுகிறது. ஆனால் இந்தப் பிள்ளை, கல்லை மாத்திரம்தானா அனையாகக் கொள்கிறான்? புல்லையுமேதான் அனையாகக் கொள்கிறான். கதை நமக்குத் தெரியும். சீதையை எடுத்துச் சென்று இலங்கையில் அசோகவனத்தில் சிறை வைத்து விடுகிறான் இராவணன். அவள் இருக்கும் இடத்தை அறிந்து வந்து சொல்கிறான் அனுமன். உடனே ராமன் சுக்ரீவனது வானரப் படையின் துணையுடன் இலங்கை மீது படை எடுக்கிறான். இடையிலே இருக்கிறது கடல். கடல் கடந்துதான் இலங்கை செல்ல வேணும். லிபீஷணன் ஆலோசனைப்படி வருணனை வழிபட முனைகிறான். அதற்காகத் தருப்பையையே சயனமாக்கி அதிலிருந்து வருணனை வேண்டுகிறான். இதைக் கம்பன் சொல்கிறான்.