கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்/பந்தயத்தில் பங்குபெற பயங்கர விதிமுறைகள்

விக்கிமூலம் இலிருந்து

7. பந்தயத்தில் பங்குபெற பயங்கர விதிமுறைகள்

மதச் சடங்கு போலவும் அதே சமயத்தில் வீர விழா போலவும் விமரிசையாகக் கொண்டாடப்பெறும் விளையாட்டுக்களில் வீரர்கள் போட்டியிட வேண்டுமென்றால், அதற்குரிய விதிகள் மிகவும் கடுமையாகவே இருந்தன. அந்த விதிகளைப் பின்பற்றுகின்ற வீரர்கள்தான் பந்தயக் களத்திற்குள்ளே நுழைய முடியும். பங்குபெற முடியும். விதிகள் அவ்வாறு கடுமையாக அமைந்திருந்தன.

போட்டியிலே கலந்து கொள்கின்ற வீரன், கலப்பற்றவனாக, தூய்மையான கிரேக்கக் குடிமகனாக இருக்க வேண்டும். நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடக்க இருக்கும் பந்தயங்களுக்காக, அவன் பத்து மாதங்கள் இடைவிடா முயற்சியுடன் சிறப்பான பயிற்சியும் செய்திருக்க வேண்டும். திருமணமானவர்கள். குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்றவர்கள் எல்லாம் போட்டியில் கலந்து கொள்ளத் தடை விதிக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு தன்னைத் தகுதியுடையவனாக மாற்றிக்கொண்ட வீரன், தன் பெயர், முகவரி, மற்றும் பரம்பரை பற்றிய உண்மை முழுவதையும் விளக்கி, எல்லிஸ் என்னும் இடத்திற்குச் சென்று, தன் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அந்தப் பெயர்ப் பட்டியலை வைத்துக் கொண்டு, கலே நாடிகை எனும் ஒலிம்பிக் அதிகாரிகள் பத்து பேர் அடங்கிய குழு ஒன்று முகவரி அறிந்து, வீரனைப் பற்றிய முழு உண்மைகளையும் பரிபூரணமாக ஆராய்ச்சி செய்யும்.

அவ்வீரனுடைய பரம்பரை, அவனது குணாதிசயம், இயற்கையான உடல் திறமை, வலிமை, பெருமை அத்தனையையும். தீர விசாரித்து, தெரிந்த பிறகு, அவன் தூய்மையான கிரேக்கன, கலப்பற்றவன் ஒழுக்கசீலன், வலிமையுள்ள உடலாளன் (Athlete) என்று முடிவு செய்து பந்தயத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்புக்குப் பரிந்துரை செய்யும். போட்டியில் பங்குபெற்ற அனைவரும், நாடுகள் சார்பாகப் போட்டியிடாமல், தனிப்பட்ட முறையிலேதான் ஆர்வத்துடன் போட்டியிட முன்வந்தனர்.

ஒலிம்பிக் அதிகாரிகளின் கடுமையானத் தேர்விலே வெற்றி பெற்ற வீரர்கள் அனைவரும், ஒலிம்பிக் பந்தயம் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னே, எல்லிஸ் நகரத்தில் வந்து கூடுவர். அந்த ஒரு மாத காலத்தில், அவர்கள் ஒலிம்பிக் அதிகாரிகளின் நேரடிப் பார்வையின் கீழ், கடுமையான பயிற்சிகள் பெறுவர். உடலுக்கான பயிற்சிகள் மட்டும் கடுமையானதாக இல்லை. உணவு முறையும் அப்படித்தான் அமைந்திருந்தது. மாதக் கணக்காக அவ்வீரர்கள், வெறும் பழங்களையும், தண்ணிரையுமே ஆகாரமாக உட்கொள்ள வேண்டியிருந்தது.

பிறகு, காலம் மாற மாற, உணவு முறையில் உள்ள கடும் விதிகள் தளர்ந்தன. வெறும் பழங்கள் மட்டுமல்லாமல், கறியும் மதுவும் தரப்பட்டன. இத்துடன், தங்கள் தசைகள் எழிலாகத் தோற்றமளிக்கவும் ஏற்ற முறையில் போட்டிகளில் ஒத்துழைக்கவும் உடல் முழுவதும் ஒரு வகை எண்ணெய் தடவிக் கொண்டே பயிற்சிகள் செய்தனர். அந்தக் கால அளவிற்குள், சிறப்புப் பயிற்சி பெற்ற வீரர்களில் சிறந்தவர்களையும், வல்லவர்களையும் மட்டுமே தேர்ந்தெடுத்து, பந்தயத்தில் கலந்துகொள்ள அந்த அதிகாரிகளும் பயிற்சியாளர்களும் அனுமதித்தார்கள். அத்தகைய வீரர்களே போட்டியிடமுடிந்தது.