பழங்காலத் தமிழர் வாணிகம்/தமிழகத்தின் மேற்குக்கரைத் துறைமுகங்கள்

விக்கிமூலம் இலிருந்து


7. தமிழகத்தின் மேற்குக்கரைத் துறைமுகங்கள்

பாரத தேசத்தின் மேற்குக் கரையில் இருந்த பழய காலத்துத் துறைமுகப் பட்டினங்களைக் கூறுவோம். அவை குடகடலின் (அரபிக் கடலின்) கரையில் இருந்தன. அக்காலத்தில் வடக்கே இருந்த பேர்போன துறைமுகம் மின்னகரம் என்பது. மின்னகரம் சிந்துநதி கடலில் சேரும் புகர் முகத்தில் இருந்தது. அதற்குத் தெற்கே புரோச் (Broach) என்னும் பாரிகச்சத் துறைமுகமும், சோபாரா ' சூரத்துத்' துறைமுகமும் இருந்தன. இந்தத் துறைமுகங்களில் அராபிய, யவன வாணிகர்கள் மேற்கிலிருந்து வந்து வாணிகம் செய்தார்கள். இந்தத் துறைமுகங்கள் அக்காலத்தில் அப்பகுதிகளையரசாண்ட சதகர்ணி (சாத வாகன) அரசர்களுக்குரியவை. இந்தத்துறைமுகங்களைக் கைப்பற்றச் சாகர் என்னும் அரசர்கள் சதகர்ணி அரசர்களோடு அடிக்கடி போர் செய்து கொண்டிருந்தார்கள். இத்துறைமுகங்கள் சில காலம் சதகர்ணிகளுக்கும் சில காலம் சாகர்களுக்கும் உரியதாக இருந்தன. கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் இவ்விதமாக இந்தத் துறைமுகப் பட்டினங்கள் இருவர் ஆட்சியிலும் மாறிக் கொண்டிருந்தன,

அக்காலத் தமிழகம், மேற்குக் கரையில் துளு நாட்டையும் (தென் கன்னட வட கன்னட மாவட்டங்கள்) தன்னகத்தே கொண்டிருந்தது. தமிழகத்தின் மேற்குக் கரையில் வடகோடியிலிருந்த அக்காலத்துத் துறைமுகப் பட்டினம் மங்களூர். மங்களூர் இப்போதும் சிறிய துறைமுகமாக இருக்கின்றது. ஆனால் சங்க காலத்தில் அது பெரிய பேர் போனத் துறைமுகமாக இருந்தது. துளு நாட்டை அக்காலத்தில் நன்னன் என்னும் பெயருள்ள வேள் அரசர்கள் அரசாண்டார்கள். மங்களூருக்குத் தெற்கே இருந்த துறைமுகப் பட்டினம் நறவு. இதுவும் துளு நாட்டைச் சேர்ந்திருந்தது.

நறவுக்குத் தெற்கே தொண்டி, பரக்கெ, நீல்கண்ட முதலான துறைமுகங்கள் இருந்தன. இவை சேர நாட்டைச் சேர்ந்த துறைமுகங்கள். இத்துறைமுகங்களைப் பற்றிக் கூறுவோம்.

மங்களூர்

சங்க காலத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்தது துளுநாடு, துளுநாட்டை நன்னன் என்னும் பெயருள்ள அரசர் பரம்பரையரசாண்டு வந்தது. துளு நாட்டின் முக்கியத் துறைமுகமாக இருந்தது மங்களூர், நேத்திராவதி ஆறு கடலில் கலக்கிற இடத்தில் மங்களூர் இருந்தது. இப்போதும் மங்களூர் சிறு துறைமுகப் பட்டினமாக இருக்கிறது. மங்களூரில் இருந்த மங்கலாதேவி கோயில் பேர்போனது. சிலப்பதிகாரம் மங்கலாதேவி கோயிலைக் கூறுகின்றது.

மங்களூர் துறைமுகத்தில் யவன வாணிகர் வந்து வாணிகம் செய்தார்கள். தாலமி என்னும் யவனர் இந்தத் துறைமுகப்பட்டினத்தை மகனூர் என்று கூறியுள்ளார். மங்களூரைத்தான் இவர் இப்படிக் கூறியுள்ளார். பிளைனி என்னும் யவனர் இதை 'நைத்ரியஸ்' (Nitrias) என்று கூறியுள்ளார். நைத்ரியஸ் என்பது நேத்திராவதியாறு. நேத்திராவதி ஆற்று முகத்துவாரத்தில் இருக்கிறபடியால் இதை நைத்ரியஸ் என்று கூறினார் போலும். மேலும், இவர் இந்த இடத்தில் கடற்கொள்ளைக்காரர் இருந்தனர் என்றும் கூறுகின்றார். மங்களூருக்கு மேற்கே கடலில் ஒரு சிறு தீவில் குறும்பர்கள் இருந்தனர். அவர்கள் கடம்ப மரத்தைக் காவல் மரமாக வளர்த்திருந்தார்கள். அவர்கள் வாணிகத்துக்காக வெளிநாடுகளிலிருந்து வரும் கப்பல்களைக் கொள்ளையடித்தனர். அதனால் சேர நாட்டுத் துறைமுகப் பட்டினங்களுக்கு யவனக் கப்பல்கள் வருவது தடைப்பட்டன. அப்போது, இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் தன் இளைய மகனான செங்குட்டுவன் தலைமையில் கடற் படையையனுப்பிக் கடற்கொள்ளைக் குறும்பரையடக்கினான். இச்செய்திகளைப் பதிற்றுப்பத்து இரண்டாம் பத்து, ஐந்தாம் பத்துகளால் அறிகின்றோம்.

நறவு

துளு நாட்டிலே மங்களூர்த் துறைமுகத்துக்குத் தெற்கே நறவு என்னும் துறைமுகப் பட்டினம் இருந்தது. இதுவும் துளு நாட்டைச் சேர்ந்தது. துளுநாட்டு நன்னன் ஆட்சியில் இது இருந்தது. நறவு என்னும் சொல்லுக்கு கள், மது என்னும் பொருளும் உண்டு. ஆகையால் நறவு என்னும் பெயர் உள்ள இந்தப் பட்டினத்தைத் தமிழ்ப் புலவர் 'துவ்வா நறவு' (உண்ணப்படாத நறவு) என்று கூறினார். சேர மன்னர் துளு நாட்டு நன்னனை வென்று துளுநாட்டு ஆட்சியைக் கைக் கொண்டபோது, ஆடு கோட் பாட்டுச் சேரலாதன் (சேரன் செங்குட்டுவனுடைய மாற்றாந்தாயின் மகன்) இந்த நறவுத் துறைமுகப் பட்டினத்தில் இருந்தான் என்று பதிற்றுப் பத்து (6 ஆம் பத்து 10 ஆம் செய்யுள்) கூறுகின்றது. யவன நாட்டுக் கப்பல் வாணிகர் இங்கு வந்து வாணிகம் செய்தார்கள். அவர்கள் நறவை 'நவ்ரா' என்று கூறினார்கள்.

தொண்டி

இது மேற்குக் கடற்கரையில் சேரநாட்டில் இருந்த தொண்டி. (பாண்டி நாட்டில், கிழக்குக் கடற்கரையிலும் ஒரு தொண்டி இருந்தது.) ஐங்குறு நூற்றில் நெய்தற் பத்தைப் பாடிய அம்மூவனார் தொண்டிப்பத்து என்னும் தலைப்பில் பத்து செய்யுட்களைப் பாடியுள்ளார். இவர் பாடிய தொண்டி இந்தச் சேரநாட்டுத் தொண்டியாகும். இந்தத் தொண்டிப் பட்டினம் கொங்கு நாட்டை யரசாண்ட பொறையர்களின் ஆட்சியிலிருந்ததாகத் தெரிகின்றது . பொறையர் சேர அரசர்களின் இளைய வழியினர். கொங்கு நாட்டையரசாண்ட அவர்களுக்கு, உள் நாடாகிய கொங்கு நாட்டில் துறைமுகப் பட்டினம் இல்லாதபடியால், சேர நாட்டுத் துறைமுகப் பட்டினமாகிய தொண்டியை வைத்திருந்தனர் என்று தோன்றுகின்றது. சேரன் செங்குட்டுவனுடைய தம்பியாகிய (மாற்றாந்தாயின் மகன்) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், வடக்கே தண்டாரணியத்திலிருந்து கொண்டு வந்த வருடைப் பசுக்களைத் தொண்டிக்குக் கொண்டு வந்து தானங் கொடுந்தான்,

'தண்டாரணியத்துக் கோட்பட்ட வருடையைத்
தொண்டியுட் டந்து கொடுப்பித்து.'

(6 ஆம் பத்து. பதிகம்)

சங்க காலத்திலிருந்த பொய்கையார் என்னும் புலவர் இந்தத் தொண்டியில் வாழ்ந்தவர். (புறம் , 48), தொண்டித் துறைமுகத்தில் அக்காலத்தில் யவன வாணிகர் எந்து வாணிகம் செய்தனர். தாலமி (ptolemy) என்னும் யவனர் இந்தத் தொண்டியைத் தைண்டிஸ் (Tyndis) என்று கூறியுள்ளார். இங்கு நடந்த வாணிகத்தைப் பற்றி வேறொன்றும் தெரியவில்லை.

மாந்தை

சேரநாட்டுத் 'துறைமுகப் பட்டினமாகிய மாந்தை துறைகெழு மாத்தை', 'கடல்செழு மாந்தை' என்று கூறப்படுகின்றது. மாந்தை மரந்தை என்றும் கூறப்பட்டது. மாந்தைப் பட்டினத்தில், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பொன் வயிரம் மணி முதலான பெருஞ் செல்வத்தை ஆம்பல் கணக்கில் (ஆம்பல் என்பது கணிதத்தில் பெருந்தொகையைக் குறிப்பது) புதைத்து வைத்திருந்தான் என்று மாமூலனார் கூறுகிறார். இந்தப் பெருஞ் சேரலாதன் கடற்கொள்ளைக்காரர் குறும்பரை அடக்கினவன்.

'வலம்படு முரசிற் சேரலாதன்
முந்நீரோட்டிக் கடம்பறுத் திமயத்து
முன்னோர் மருள வணங்குவிற் பொறித்து
நன்னகர் மாந்தை முற்றத்து ஒன்னார்
பணிதிறை தந்த பாடுசால் நன்கலம்
பொன் செய்பாவை வயிரமொடு ஆம்பல்
ஒன்றுவாய் நிறையக் குவைஇ அன்றவண்
நிலத்தினத் துறந்த நிதியம்'

(அகம், 127: 3-10)

இந்தத் துறைமுகத்தைப் பற்றி வேறொன்றும் தெரியவில்லை .

முசிறித் துறைமுகம்

முசிறித் துறைமுகப்பட்டினம் சேர நாட்டுத் துறைமுகப் பட்டினங்களில் பேர்போனது. அக்காலத்தில் அது, கிழக்குக் கடற்கரையில் உலகப் புகழ் பெற்றிருந்த காவிரிப் பூம்பட்டினம் போல மேற்குக் கரையில் உலகப் புகழ் பெற்றிருந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உண்டான பேரியாறு மேற்குக் கடலில் விழுந்த இடத்தில் முசிறித் துறைமுகம் அமைந்திருந்தது. சேர நாட்டுத் தலைநகரமாக அக்காலத்தில் இருந்த வஞ்சி (கரூர்) நகரம், பேரியாறு கடலில் விழுந்த இடத்துக்கு அருகில் பெரியாற்றின் கரை மேல் இருந்தது, வஞ்சி நகரத்திலே சேர அரசர் வாழ்ந்திருந்தார்கள். (இந்தச் சேரர் வஞ்சி, கொங்கு நாட்டு வஞ்சி (கரூர்) அன்று. சேர நாட்டிலும் கொங்கு நாட்டிலும் வஞ்சி என்றும் கரூர் என்றும் பெயர் பெற்றிருந்த இரண்டு ஊர்கள் சங்க காலத்தில் இருந்தன.) சேர நாட்டுத் தலை நகரமான வஞ்சிமா நகரத்துக்கு மேற்கே கடற்கரையில் பேரியாறு கடலில் சேர்ந்த புகர் முகத்தில் முசிறித் துறைமுகப் பட்டினம் இருந்தது.

முசிறித் துறைமுகத்தில் முக்கியமாக மிளகு ஏற்றுமதியாயிற்று. யவனக் கப்பல்கள் மிளகை வாங்குவதற்காகவே முசிறிக்கு வந்தன. யவனர் முரிறியை முசிறிஸ் என்று கூறினார்கள். வால்மீகி இராமாயணம் முசிறியை முரசி பதனம் என்று கூறுகின்றது. முசிறி வட மொழில் 'முரசி' ஆயிற்று. முசிறிக் கடலில் முத்துச் சிப்பிகளும் உண்டாயின. சிப்பியிலிருந்து முத்து கிடைத்தது. முசிறியில் உண்டான முத்துக்களைக் கவ்டல்லியரின் அர்த்த சாத்திரம் கௌர்ணெயம் என்று கூறுகின்றது. பேரியாற்றுக்குச் சூர்ணியாறு என்றும் பெயருண்டு. சூர்ணியாற்றின் முகத்துவாரத்தில் உண்டானபடியால் இந்த முத்து கௌர்ணெயம் என்று பெயர் பெற்றது. சௌர்ணெயம் என்னும் பெயர் திரித்து கௌர்ணெயம் என்றாயிற்று. முசிறிக் கடலில் உண்டான முத்துக்கள் முசிறிப் பட்டினத்தின் ஒரு பகுதியான பந்தர் என்னும் இடத்தில் விற்கப்பட்டன. முசிறிப் பட்டினத்தைச் சேர்ந்த பந்தரில் முந்துக்களும் கொடுமணம் என்றும் இடத்தில் பொன் நகைகளும் விற்கப்பட்டன் என்று பதிற்றுப் பத்து கூறுகிறது.

'இன்னிசைப் புணரி இரங்கும் பௌவத்து
நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தாக்
கமழுந் தாழைக் கானலம் பெருந்துறை'

(6 ஆம் பத்து 5)

பந்தரிலும் கொடுமணத்திலும் முத்துக்களும் நன்கலங்களும் (நகைகள்) விற்கப்பட்டன என்று 7 ஆம் பத்து 7 ஆம் செய்யுள் கூறுகின்றது.

'கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்
பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம்'

என்று 8 ஆம் பத்து (4: 5-6) கூறுகின்றது. பந்தர் என்பது அரபு மொழிச் சொல். பந்தர் என்றால் ஆவணம், கடை வீதி என்பது பொருள், அக்காலத்திலேயே அரபியர் இங்கு வந்து வாணிகஞ் செய்தார்கள்.

கி.மு. முதல் நூற்றாண்டில் தென்மேற்குப் பருவக் காற்றை ஹிப்பாலஸ் என்னும், யவன மாலுமி அரபு வாணிகரிடமிருந்து அறிந்து கொண்டு, அக்காற்றின் உதவியினால் நடுக்கடலினூடே கப்பலை முசிறிக்கு ஓட்டிக் கொண்டு வந்தான், தென்மேற்குப் பருவக் காற்றின் உதவியை யவனர் அறிவதற்கு முன் கப்பல்களைக் கரையோரமாகச் செலுத்திக் கொண்டு வந்தார். அதனால் நெடுங்காலம் பிரயாணஞ் செய்ய வேண்டியிருந்தது. பருவக்காற்றின் உதவி கண்டு பிடித்த பிறகு யவனக் கப்பல்கள் நேரே முசிறித் துறைமுகத்துக்கு விரைவாகவும், கால தாமதம் இல்லாமலும் வரத் தொடங்கின. இந்தப் பருவக் காற்றுக்கு ஹிப்பலஸ் என்ற பெயரை (அதைக் கண்டு படித்த ஹிப்பலஸ் என்பவன் பெயரை ) யவனர் சூட்டினார்கள்.

யவனக் கப்பல்கள் பவழம், கண்ணாடி, செம்பு, தகரம், ஈயம் முதலான பொருள்களைக் கொண்டுவந்து முசிறியில் இறக்குமதி செய்து இங்கிருந்து பல பொருள்களை ஏற்றுமதி செய்து கொண்டு போயின. ஏற்றுமதியான பொருள்களில் முக்கியமானதும் அதிகமாகவும் இருந்தது மிளகுதான். யவனர் மிளகை ஏராளமாக ஏற்றுமதி செய்து கொண்டு போனார்கள். ரோம் நாட்டில் மிளகு பெரிதும் விரும்பி வாங்கப்பட்டது. யவனர் மிளகை ஆவலோடு விரும்பு வாங்கினபடியால் அதற்கு ' யவனப் பிரியா' என்று பெயர் உண்டாயிற்று. பெரிய யானைக் கப்பல் வாணிகம் பொன்னைக் கொண்டு வந்து விலையாகக் கொடுத்து மிளகை வாங்கிக் கொண்டு போனார்கள். தாயங் கண்ணனார், யவனர் பொன்னைக் கொடுத்து மிளகை ஏற்றிக் கொண்டு போனதைக் கூறுகிறார்.

'கள்ளியம் பேர்யாற்று வெண்ணுரை உலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னோடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி'

(அகம், 149: 8-11)

சுள்ளியம் (பேரியாறு-பெரியாறு: நன்கலம் - நல்ல மரக்கலம்; கறி-மிளகு.)

முசிறிந் துறைமுகம் ஆழமில்லாமல் இருந்தபடியால் யவனரின் பெரிய கப்பல்கள் கரைக்கு வர முடியாமல் கட லில் தூரத்திலேயே நின்றன. ஆகவே தோணிகளில் மிளகை ஏற்றிக் கொண்டுபோய் யவனக் கப்பல்களில் ஏற்றிவிட்டு அதன் விலையாகப் பொன்னை வாங்கிக் கொண்டு வந்தார்கள். பரணர் இதை இவ்வாறு கூறுகின்றார் .

'மனைக்குவைஇய கறிமூடையால்
கலிச் சும்மைய கரை கலக்குறுந்து
கலந்தந்த பொற்பரிசம்
கழித்தோணியார் கரைசேர்க்குந்து
.........
முழங்குகடல் முழவின் முசிறி'

(புறம், 343: 3-10)

(மனைக்குவை இய-வீடுகளில் குவித்து வைக்கப்பட்ட: கறி மூடை - மிளகு மூட்டை : கலம் தந்த - யவன மரக்கலங்கள் கொண்டு வந்த: பொற்பரிசம் - விலையாகிய பொன்)

கிரேக்கரும் ரோமரும் மட்டும் மிளகை வாங்கவில்லை. அக்காலத்தில் உலகத்திலே எல்லா மக்களும் மிளகை வாங்கினார்கள். அக்காலத்தில் மிளகாய் கிடையாதபடியால் எல்லாரும் மிளகை உணவுக்காகப் பயன்படுத்தினார்கள். பாரத நாட்டு மக்களும் மிளகைப் பயன்படுத்தினார்கள். முசிறித் துறைமுகத்திலிருந்து மீளகு கொண்டு போகப்பட்டபடி யால் ரிளருக்கு 'மரிசி' என்று பெயர் உண்டாயிற்று. முசிறி என்னும் பட்டினத்தின் பெயர் தான் மரிசி என்று மருவிற்று. உலகப் புகழ் பெற்றிருந்த முசிறித் துறைமுகப் பட்டினம் கி.பி. 14 ஆம் நூற்றாண்டின் இடையில் வெள்ளப் பெருக்கினால் அழிந்து விட்டது. கி.பி. 1341 இல் பெய்த பெரு மழையின் காரணமாகப் பேரியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு முசிறிப் பட்டினம் வெள்ளத்தில் மூழ்கி மறைந்து போயிற்று. அதனால் அதனையடுத்துட்ட புதிய காயல்களும் துருத்திகளும் (மணல் தீவு) ஏற்பட்டன. முசிறித் துறை முகம் முழுகிப்போனபடியால் அதற்கு அருகில் பிற்காலத்தில் கொச்சித் துறைமுகம் ஏற்பட்டது.

குறிப்பு: முசிறிப் பட்டினத்துக்கு முயிரிக்கோடு என்றும் மகோதை என்றும் மகோதைப் பட்டினம் என்றும் சங்க காலத்துக்குப் பிறகு பெயர் கூறப்பட்டது.

வைக்கரை

இது முசிறிக்குத் தெற்கேயிருந்த துறைமுகப் பட்டினம். கோட்டயத்துக்கு அருகிலே இருந்தது. இந்தத் துறை முகத்தைத் தாலமி என்பவர் பக்கரே (Bakarei) என்று கூறுகிறார். இந்தத் துறைமுகத்தைப் பற்றி அதிகமாக ஒன்றும் தெரியவில்லை.

மேல்கிந்த

தாலமி என்பவர் இதை மேல்கிந்த (Melkynda) என்றும், பெரிபுளூஸ் என்னும் நூல் நெல்சித்த என்றும், பிளைனி என்பவர் நியாசிந்த என்றும் கூறுகின்றனர். தமிழில் இதை என்ன பெயரிட்டுக் கூறினார்கள் என்பது தெரியவில்லை. இது வைக்கரைக்குத் தெற்கே இருந்தது. இதைப் பற்றியும் ஒன்றும் தெரியவில்லை.

விழிஞம்

இலங்கொன் (Elankon) என்னும் துறைமுகப் பட்டினத்தைத் தாலமி என்னும் யவனர் கூறியுள்ளார். இது ஆயோய் (ஆய்) நாட்டில் இருந்ததென்று கூறுகின்றார். ஆய் நாடு பாண்டிய நாட்டில் இருந்தது. பொதிகை மலையை சூழ்ந்திருந்தது ஆய்நாடு. ஆய் மன்னர் பாண்டியருக்குக் கீழடங்கிச் சிற்றரசராக இருந்தார்கள். ஆய் நாட்டில் இருந்த துறைமுகத்தைத் தாலமி இலங்கொன் என்று குறிப்பிடுவது விழிஞம் என்னும் துறைமுகப் பட்டினமாகும். விழிஞம் மிகப் பழமையான சரித்திரப் புகழ்பெற்ற துறைமுகப் பட்டினம்.