பழங்காலத் தமிழர் வாணிகம்/இலங்கைத் துறைமுகங்கள்

விக்கிமூலம் இலிருந்து

8. இலங்கைத் துறைமுகங்கள்

மணிபல்லவம் (ஜம்புகொல பட்டினம்)

ணிபல்லவம் என்றும் ஜம்புகொல பட்டினம் என்றும் பெயர் பெற்ற மிகப் பழைய துறைமுகப் பட்டினம் இலங்கையின் வடகோடியில் இருந்தது. இது இப்போதைய யாழ்ப்பாணத்துக்கு வடக்கே இருந்த ஒரு சிறு தீவு. மணிமேகலைக் காவியம் இதை மணிபல்லவம் என்றும் இலங்கைப் பாலி மொழி நூல்கள் ஜம்புகொல பட்டினம் என்றும் கூறுகின்றன. சம்பில் துறை என்றும் இது கூறப்பட்டது. அக்காலத்தில் பேர்போன துறைமுகப் பட்டினமாக விளங்கிய இங்கு வாணிகப் பொருள்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்யும் இடமாக இல்லை. கப்பல் போக்குவரத்துக்குரிய துறையாகவும் , தமிழ் நாட்டிலிருந்து கிழக்கே நெடுந்தூரம் போகிற கப்பல்கள் வந்து தங்கி குடிநீர் எடுத்துக் கொள்ளும் இடமாகவும் இருந்தது. இத்துறைமுகத்திலிருந்து தெற்கே இலங்கையின் அக்காலத்துத் தலை நகரமான அநுராதபுரத்துக்கு (அநுரைக்கு) நெடுஞ்சாலையிருந்தது.

இலங்கையை யரசாண்ட தேவனாம்பிரிய திஸ்ஸன் (கி.மு. 247-97) என்பவர் இந்தியாவை அக்காலத்தில் அரசாண்ட அசோக சக்ரவர்த்தியிடம் தூதுக் குழுவை அனுப்பின போது அத்தூதுக்குழு மணிபல்லவத் துறைமுகத்திலிருந்து கப்பலேறிப் புறப்பட்டது. புறப்பட்டு ஏழு நாள் வடக்கே கடற்பிரயாணஞ் செய்து தாமலித்தி துறைமுகத்தையடைந்து அங்கிருந்து கங்கையாற்றில் புகுந்து பாடலிபுரத்துக்குச் சென்று அசோக சக்கரவர்த்தியைக் கண்டது. (மகா வம்சம் XI:23-24) பிறகு, மீண்டும். அதே வழியாகக் கப்பலில் பிரயாணஞ் செய்து ஜம்புகொவு பட்டினத்தையடைந்தது. (மகாவம்சம் X1:33)

அசோக சக்கரவர்த்தி புத்தகயாவிலிருந்த போதி மரத்தின் கிளையை வெட்டிச் சங்கமித்திரையின் தலைமையில் இலங்கைக்கு அனுப்பினபோது சங்கமித்திரையும் அவருடைய பரிவாரமும் போதி (அரச) மரக்கிளையுடன் மரக்கலம் ஏறி ஜம்புகொலப் பட்டினத்துக்கு வந்து இறங்கினார். (மகாவம்சம் XIX: 23) தேவனாம்பிரிய திஸ்ஸன் அமைச்சர்களுடனும் பரிவாரங்களோடும் ஜம்புகொல துறைக்கு அருகில் பன்னசாலை (பர்ணசாலை - ஓலைக் கொட்டகை) அமைத்துக் கொண்டு அங்குத் தங்கியிருந்து போதி மரக் கிளையையும் சங்கமித்திரையையும் வரவேற்றன். அவன் தங்கியிருந்த இடம் சமுத்த பன்னசாலை (சமுத்திர பர்ணசாலை) என்று பெயர் பெற்றது (மகாவம்சம் XIX: 26). பிறகு அந்த அரசன் அந்த இடத்தில் மண்டபம் கட்டினான். (மகாவம்சம் XIX: 27, 28) போதி மரக்கிளையுடன் அனுப்பப்பட்ட. எட்டு போதிமரக் கன்றுகளில் ஒன்றை அவன் அந்த இடத்தில் நட்டான், (மகாவம்சம் XIX: 60) பிறகு இந்த போதிமரத்துக்குக் கீழே புத்தருடைய பாத பீடிகையமைக்கப்பட்டது. இதற்கு மணிப்பல்லவங்கம் (மணிப்பலகை, மணிப்பீடம்) என்று பெயர். மணிப்பல்லங்கம் என்னும் பெயர் பிற்காலத்தில் மணி பல்லவம் என்று திரிந்து வழங்கிற்று என்று தோன்றுகின்றது. இந்தப் புத்த பீடிகையை மணிமேகலைக் காவியம், மணிப்பீடிகை என்றும் தருமபீடிகை என்றும் கூறுகின்றது.

காவிரிப்பூம் பட்டினத் துறைமுகத்திலிருந்து தெற்கே முப்பது யோசனை தூரத்தில் மணிப்பல்லவத் துறை இருந்தது (மணிமேகலை 6: 211-13). தமிழகத்திலிருந்து (சோழ நாடு பாண்டிய நாடுகளிலிருந்து) கிழக்கே வெதுதூரத்திலிருந்த சாவக நாட்டுக்கு (கிழக்கிந்தியத் தீவுகளுக்கு) வாணிகத்தின் பொருட்டுச் சென்ற தமிழக நாவிதர்கள் மணிபல்லவத் துறையில் தங்கி அங்குப் புத்தபட்டு பீடிகைக்கு எதிரில் இருந்த கோமுகி என்னும் ஏரியிலிருந்து குடிநீரைக் கப்பல்களில் எடுத்துக் கொண்டு பிறகு பிரயாணத் தொடங்கினார்கள்.

பாண்டி நாட்டுக் கப்பல் வாணிகர் சாவசத் தீவுகளுக்கு வாணிகத்தின் பொருட்டுக் கடலில் சென்றபோது இடைவழியில் மணிபல்லவத் துறையில் தங்கிச் சென்றார்கள் (மணி 14: 79-84).கோவலன் மகள் மணிமேகலை பௌத்த மதத்தைச் சேர்ந்த பிறகு மணிபல்லவஞ் சென்று அங்கிருந்த புத்தபாத பீடிகையை வணங்கி மீண்டும் தன் ஊருக்குத் திரும்பி வந்தாள் (மணி 25: 120-127). இலங்கையின் வட பகுதியாகிய இப்போதைய யாழ்ப்பாண தேசம் அக்காலத்தில் நாகநாடு என்று பெயர் பெற்றிருத்தது. அந்த நாகநாட்டை அக்காலத்தில் அரசாண்ட வளைவாணன் என்னும் நாககுல மன்னன் மகள் பீலிவளை என்பவள் மணிபல்லவத் துறையிலிருந்து புறப்பட்டுக் காவிரிப் பூம்பட்டினத்துக்கு வந்து கடற்கரைச் சோலையிலே தங்யிருந்தபோது அப்பட்டினத்தில் இருந்த வடிவேற்கிள்ளி என்னும் சோழன் அவளுடன் உறவு கொண்டான். சில காலங்கழித்து அவள் தன்னுடைய ஊருக்குத் திரும்பிப் போனாள். அங்கு அவள் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து, அக்குழந்தையை மணிபல்லவத் துறையில் வந்து தங்கின கம்பலச் செட்டி என்னும் கப்பல் வாணிகனிடம் கொடுத்து அக்குழந்தையைச் சோழனிடம் சேர்க்கும்படி அனுப்பினாள். கம்பலச் செட்டி குழந்தையுடன் கப்பலில் புறப்பட்டுக் காவிரிப்பூம் பட்டினத்துக்கு வந்தபோது இடைக் கடலில் கப்பல் கவிழ்ந்து குழந்தை இறந்து போயிற்று (மணி 25; 178-192). சோழ நாட்டிலிருந்து சாவக நாட் டுக்குச் சென்ற மணிமேகலை சாவக நாட்டு அரசன் புண்ணிய ராசனைக் கண்டு அவனோடு புறப்பட்டு மணிபல்லவத்துக்கு வந்து அங்கிருந்த புத்தபாத பீடிகையை வணங்கினாள் (மணி 25: 120-127). இலங்கையிலிருந்து சோழ நாட்டுக்கும் காஞ்சிபுரத்துக்கும் வந்த பௌத்த பிக்குகள் ஜம்பு கொல பட்டினத்திலிருந்து கப்பலேறி வந்தார்கள். இவ்வாறு எல்லாம் பழைய நூல்களில் மணிபல்லவ-சம்பு கொல பட்டினம் கூறப்படுகின்றது. மாதிட்டை

இது இலங்கையின் மேற்குக் கரையில் மன்னார் குடாக் கடலில் பாண்டி நாட்டுக்கு எதிர்க் கரையிலிருந்த பேர் போன பழைய துறைமுகப் பட்டினம். மாதிட்டை என்பது மகாதிட்டை என்றுங் கூறப்பட்டது. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் இலங்கையை யரசாண்ட முதல் சிங்கள அரசனான விசயன், பாண்டியன் மகளை மணஞ்செய்து கொண்டான். அவனுடைய எழுநூறு தோழர்களும் பாண்டி நாட்டில் பெண் கொண்டு திருமணஞ் செய்து கொண்டார்கள். மண மகளிர் பாண்டி நாட்டிலிருந்து இலங்கைக்குக் கப்பலில் சென்ற போது அவர்களும் அவர்களுடன் சென்ற பரிவாரங்களும் பதினெட்டு வகையான தொழில்களைச் செய்தவர்களின் குடும்பங்களும் மாதிட்டைத் துறைமுகத்தில் இறங்கிச் சென்றார்கள் என்று மகாவம்சம் கூறுகின்றது. (மகாவம்சம் VII:58) கி.மு. முதல் நூற்றாண்டில் இலங்கையையரசாண்ட சோழ நாட்டுத் தமிழனாகிய ஏலேலன் (ஏலாரன்) மீது துட்டசுமுது என்னும் அரசன் இலங்கையில் போர் செய்தபோது ஏலேலனுக்கு உதவியாகச் சோழ நாட்டிலிருந்து படை திரட்டிக் கொண்டு போன பல்லுகன் என்னும் அரசன் மாதிட்டைத் துறைமுகத்தில் இறங்கினான், (மகாவம்சம் XXV:80) வட்டகாமணி அரசன் (கி.மு. 44-29) இலங்கையையரசாண்டபோது ஏழு தமிழ் நாட்டு வீரர்கள் படையெடுத்துச் சென்று இலங்கையில் போர் செய்தார்கள். அவர்கள் (கி.மு. 29) மாதிட்டைத் துறையில் இறங்கினார்கள் என்று மகாவம்சம் கூறுகின்றது. (மகா, XXXIII:39) அந்தத் தமிழர்கள் வட்டகாமணி அரசனை வென்று சிங்கள நாட்டைப் பன்னிரண்டு ஆண்டு (கி.மு. 29-17) வரையில் அரசாண்டார்கள்.

மாதிட்டை பிற்காலத்தில் மாதோட்டம் என்று பெயர் கூறப்பட்டது. தேவாரத்தில் மாதோட்டம் என்று கூறப்படுகின்றது. மாதோட்டத்தில் பாலாவி ஆற்றின் கரைமேல் உள்ள திருக்கேதீச்சுரத்தைத் திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். மாதிட்டையாகிய மாதோட்டம் மிகப் பழங்காலத்திலிருந்து முக்கியமான துறைமுகப் பட்டினமாக இருந்தது.