பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்த் தாத்தா

37

கொள்ள ஆசிரியப் பெருமானை நாடினார். அப்படியே ஆசிரியரும் திருத்தித் தந்தார். ஏதாவதொரு வகையில் ஆசிரியருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென்ற விருப்பம் நாகோஜிராவுக்கு உண்டாயிற்று.

ஒருநாள் ஆசிரியரைப் பார்த்துச் சொன்னார்: “நீங்கள் தமிழிலுள்ள பழைய நூல்களைப் பதிப்பித்து வருகிறீர்கள். அதனால் உங்களுக்கு லாபம் எதுவும் இல்லை என்று எனக்குத் தெரியும். வேறு வகையில் உங்களுக்கு வருவாய் அதிகமானால் இந்தப் பதிப்பு வேலைகளுக்கும் உதவியாக இருக்கும் என்று தோன்றியது. பள்ளிக் கூடப் பாட நூல்கள் இப்போது தரமாக வருவதில்லை. நீங்கள் எழுதிக் கொடுத்தால் நன்றாக இருக்கும். மூன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் பாரம் வரைக்கான பாட நூல்களை நீங்களே எழுதிக் கொடுத்தால் அவற்றை லாங்மன்ஸ் அச்சகத்தார் வெளியிடுவார்கள். அவர்கள் உங்களுக்குத் தக்க சன்மானம் கொடுப்பார்கள். அதைக்கொண்டு தமிழ்த் தொண்டு செய்து வரலாம்” என்றார். ஆசிரியர் சிறிது யோசனை செய்தார்.

நான் உங்கள் அன்பைப் பாராட்டுகிறேன். என் தொல்லை உங்களுக்குத் தெரிந்திருப்பது எனக்கு ஆறுதலாக உள்ளது. உங்களைப் போன்று வேறு சில அன்பர்களும் நான் பாடப் புத்தகங்களை எழுதவேண்டுமென்று சொன்னார்கள். எனக்குப் பணம் முக்கியமல்ல. என்னுடைய நேரம் முழுவதும் கல்லூரியில் பாடம் சொல்வதிலும் மற்றச் சமயங்களில் தமிழ் நூல்களை ஆராய்வதிலுமே கழிந்து கொண்டிருக்கிறது. பணம் வரத் தொடங்கினால் ஆசை வேறு வழிகளில் ஏற்பட்டுவிடும். பிறகு எனக்கு ஆராய்ச்சி செய்வதற்கு நேரம் இருக்காது. பழைய நூல்களைப் பதிப்பிக்கவும் தோன்றாது. நான் தங்கள் யோசனையை மறுப்பதாக எண்ணக் கூடாது. என் போக்கிலே என்னை விட்டுவிடுங்கள்” என்று நயமாகச் சொன்னார். நாகோஜிராவ், வலிய வருவாய் கிடைத்தாலும் கூட இவர் வேண்டாம் என்கிறாரே! இவருக்குப் பழைய தமிழ் நூல்களில் இருக்கிற ஆசைதான் எத்தனை! என்று எண்ணி வியந்தார்.


ஹால்லக் பிரபு விஜயம்

1898-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கல்லூரிக்கு ஆளுநர் ஹாவ்லக் பிரபு விஜயம் செய்தார். அக்காலத்தில் ஆங்கிலத்திற்கு மதிப்பு அதிகம். ஆங்கிலத்தில் வரவேற்றுப் பேசுவதே நாகரிகம் என்று பலரும் நினைத்த காலம். ஆனால் ஆசிரியப் பெருமானை நன்கு உணர்ந்த கல்லூரி முதல்வர் நாகோஜிராவ் தமிழிலும் ஒரு வரவேற்பு எழுதி வாசித்தளிக்க ஆசிரியருக்கு ஒரு வாய்ப்பு அளிக்க