முன்னுரை
மாக்ஸிம் கார்க்கியைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கத் தேவையில்லை. வெளிநாட்டுக் கதாசிரியர்களிலேயே தமிழ் மக்களின் மனத்தைக் கவர்ந்து பேராதரவு பெற்று விட்டவர்களில் கார்க்கியே முதன்மையானவர் என்று சொல்லலாம். உலகத்தின் முற்போக்கு இலக்கியத்திற்கு மாக்ஸிம் கார்க்கியே பிதாவாக விளங்குகிறார். மக்களின் போராட்டத்தை எட்ட நின்று பார்த்து ஒட்டிப் பழகாமல், மக்களது உணர்ச்சிகளைப் பிரதிபலிப்பதாகப் பாவனை செய்யும் சீர்திருத்தவாதியாகவோ. உபதேசி அவதாரமாகவோ கார்க்கி விளங்கவில்லை. மக்களது போராட்டத்தில் அவர் பங்கு கொண்டார், நசுக்கப்பட்ட மக்கள் குலத்தின் மத்தியிலேயே பிறந்து, அந்த நரக வாழ்வைத் தாமும் அனுபவித்து, அதற்கு விடுதலை காணும் இயக்க சக்தியோடு தோளோடு தோள் நின்று போராடிய வீரன் மாக்ஸிம் கார்க்கி. இவரது கதைகளின் உயிர் மூச்செல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களின் மனத்திலே எப்படி மனிதத் தன்மை சிறந்து விளங்குகிறது, எப்படிப் போராட்ட சக்தி உள்ளடங்கி நீறுபூத்த நெருப்பாக இருக்கிறது, என்பனவற்றை விளக்கி, அசுத்தமும் அசூயையும் புகுந்து பாழடையாத மனித இதயம் நசுக்கப்படும் மக்களிடம் தான் இருக்கிறது என்பதையும், அந்த மனித இதயத்தைச் சுரண்டல் என்னும் பளுவிலிருந்து விடுதலை பெறச் செய்ய, அந்த இதயத்தின் மீது படர்ந்துள்ள சாம்பலை விசிறி அகற்றி அதைக் கனன்றெரியச் செய்ய விடு