வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்/பணத்தை எப்படிச்

விக்கிமூலம் இலிருந்து

5
பணத்தை எப்படிச் சம்பாதிப்பது?


பத்து லட்சம் டாலர் ஒரு வியாபாரத்தில் நஷ்டமடைந்தவன் “எப்படிப்பணம் சம்பாதிப்பது” என்று ஒரு புத்தகம் எழுதினால் எப்படியிருக்கும்? அந்தப் புத்தகத்தை யாராவது வாங்குவார்களா? அல்லது அவர் சொல்லியிருப்பதையாவது நம்புவார்களா? இப்படி நடக்குமா என்பார்கள்; ஆனால், நடந்து விடுகிறதே! பி.டி. பேர்னம் என்பவர் கடிகாரம் உற்பத்தி செய்யும் தொழிலை ஆரம்பித்தார். கடிகார உற்பத்தி மூலம் அவருக்கு லாபம் ஏற்படுவதற்குப் பதில் பத்து லட்சம் டாலர் நஷ்டம் ஏற்பட்டுவிட்து. பணம் நஷ்டம் அடைந்ததும் அவர் மனமுடைந்துபோனார். அவர் தம்மனத்தைத் தேற்ற “எப்படி பணம் சம்பாதிக்கலாம்? என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதினார். அதை அச்சடித்து ஒரே நாளில் ஏராளமான பிரதிகளையும் விற்றார் அதுவரை எல்லா வகையிலும் தோல்வி கண்ட அவருக்கு அந்தப் புத்தகம் எழுதிய பிறகே பணம் சம்பாதிக்கும் வழி தெரிந்தது.

பேர்னம் அமெரிக்காவைச் சேர்ந்தவர். அவர் இளைஞராக இருக்கும் போது, அவரிடம் ஐந்து ஆயிரம் டாலர் இருந்தது. அதைக் கொண்டு ஏதாவது வியாபாரம் செய்யலாம் என்று எண்ணினார். ஒரு நண்பனுடன் சேர்ந்து இயந்திரங்களுக்கு உபயோகிக்கும் கிரீஸ் என்ற எண்ணெயை உற்பத்தி செய்ய முற்பட்டார், அவருடன் கூட இருந்த நண்பன் பணத்தை மோசம் செய்து அவரை ஓட்டாண்டியாக்கிவிட்டுச் சென்றான். தோல்வியும் நஷ்டமும் கண்ட பேர்னம் மனம் உடையாமல் சிலரை நாடி பணம் சம்பாதித்தார். அதைக்கொண்ட கெடி காரம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை வைத்தார். அதில்தான் பத்து லட்சம் டாலர் நஷ்டம் ஏற்பட்டது. அதன் பிறகுதான் அவர், “எப்படிப் பணம் சம்பாதிப்பது?” என்ற புத்தகத்தை எழுதினார் இந்த புத்தகத்தின் மூலம் அவருக்கு 200 டாலர் கிடைத்தது. அதைக் கொண்டு சர்க்கஸ் கம்பெனி ஒன்றை அமைத்தார். அதில் பல தந்திரங்களை கையாண்டார். விளம்பரங்களை ஒரு புது முறையாகச் செய்வார். அதைக் கண்டு மக்கள் ஏராளமாகக் கூடி விடுவார்கள். ஆனால், உண்மையில் அவர் விளம்பரம் செய்தபடி இருக்காது. இதை அவர் வெகு நகைச்சுவையாக எடுத்துக் காட்டுவார். அதாவது, தான் செய்வது மோசமானதுதான் என்பதை சொல்லாமல் சொல்வார். ஆனால் மக்கள் அவருடைய நகைச்சுவை முறையைக் கண்டு அவர் செய்த மோசத்தை மறந்து விடுவார்கள்.

பேர்னம் சர்க்கஸ் கம்பெனியையும் சிக்கனமான முறையிலேயே நடத்தி வந்தார். மிருகங்களை வைத்திருப்பவர்களையும், சர்க்கஸ் வேலை செய்பவர்களையும் கூட்டி, கூலிக்கு அமர்த்திக்கொண்டு கம்பெனி நடத்தி வந்தார். அவர் இப்படிச் சிக்கனமாகத் தொழில் நடத்தியதின் மூலம் வெகு விரைவிலேயே பெரிய பணக்காரர் ஆனார், அவர் தம்முடைய எழுபதாவது வயதில் சொந்தத்திலேயே மிருகங்களை வாங்கி, சம்பளத்திற்கு ஆட்களை அமர்த்தி “பேர்னம் அண்டு பைலி சர்க்கஸ் கம்பெனி” ஒன்றை ஏற்படுத்தினார்.

ஆரம்பத்தில், பேர்னம் தொழிலில் நஷ்டமடைந்தாலும் பிற்காலத்தில் நஷ்டம் என்ற பேச்சே அவர் அகராதியில் இல்லாமல் செய்துகொண்டார். அவருக்கு இந்த சாமர்த்தியம் எற்பட்டதே "எப்படி பணம் சம்பாதிப்பது?” என்ற புத்தகம் எழுதிய பிறகு தான் என்று சொல்ல வேண்டும்.