16
அணியறுபது
இனிய குண நலன்களாகிய அரிய அணிகலன்கள் இந்நூலுள் ஒளி நிறைந்துள்ளன. உரிமையுடன் அணிந்து கொள்பவர் உயர்ந்து திகழ்வர். மனிதன் உள்ளே குணம் ஏறிவர அவனுடைய வாழ்வுகள் உலகில் மணம் ஏறி மாண்பு சுரந்து வருகின்றன.
- அழகு அதிசய உயர்வை அருளுகிறது.
நெஞ்சினிக்க வாயினிக்க நேர்ந்த செவியினிக்கச்
செஞ்சொல் அமிர்தம் திரட்டியே-கஞ்சமலர்
அன்னை மகிழ அணிதந்தான் பாண்டியனாம்
மன்னர் பெருமான் மகிழ்ந்து.
(4)
அரிய அறிவின் சுவைகள் இதில் மருவியுள்ள மருமம் அறிய வந்தது. தன்னை உண்டவரை அமிர்தம் நெடிது வாழச்செய்தல் போல் தன்னை உணர்ந்தவரை உயர்ந்து ஒளி மிகுந்து வாழச் செய்யும் சிறந்த மதுர மொழிகளால் இந்நூல் அமைந்துள்ளது. அந்த உண்மையை உரைகள் உணர்த்தி உறுதி கூர்ந்து நிற்கின்றன.
கஞ்சமலர் அன்னை = சரசுவதி தேவி.
கல்வியறிவின் அதிதேவதை ஆகிய இத்தாய் நல்ல உணர்வொளிகள் உள்ள நூல்கள் வெளிவரின் பெருமகிழ்வு கொள்வள் ஆதலால் அந்த உவகை நிலை ஈண்டு உரிமையாய் உணர வந்தது.
நெஞ்சு இனிக்க என்றது உணருந்தோறும் உள்ளம் உவந்து உயர்ந்து சிறந்து வருதலை.