———————————————————
முதல் தொகுதி / பிரளய தாண்டவம் ★205
கலி பிறந்தது! - இருபதாம் நூற்றாண்டு என்று சொல்லப்படுகிற இயந்திர நூற்றாண்டு வந்தது. மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் அனுபவங்களும் மாறின. உலகமும் மாறியது. கலைகளின் இலட்சியங்களும் மாறின.
சிதம்பரத்தில் ஒருநாள் நள்ளிரவு. பொன்னம்பலத்திற்குள் உமை, வெளியே சென்றிருந்த எம்பெருமானை எதிர்பார்த்து உறங்காமல் வீற்றிருந்தாள். அடிக்கடி வலக்கண் துடித்தது. அவள் அஞ்சினாள். உலகையெல்லாம் அழித்துப் பழகிய கடவுளுக்கு யாரால் என்ன அழிவு வந்துவிட முடியும்? ஆனாலும் உமையால் பயப்படாமல் இருக்க முடியவில்லை. ‘என்னவோ ஏதோ, தீமைக்கு அறிகுறியாக வலக்கண் துடிக்கிறதே?’ என்று நினைந்து மனம் குழம்பினாள். நடு யாமத்திற்கு மேல் ஆகிவிட்டது.
திடீரென்று எம்பெருமான் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அம்பலத்திற்குள் பரபரப்போடு ஓடி வந்தார். அவர் கையில் ஏதோ ஒரு சிறு புத்தகம் இருந்தது.
“பார்வதி புறப்படு புறப்படு! இனிமேலும் இங்கே தாமதிக்கக்கூடாது… நம்முடைய தொழிலை மற்றொருவர் செய்ய விடுகிறதாவது…? அவன் குரலிலே ஆத்திரமும் படபடப்பும் நிறைந்திருந்தன.
“என்ன நடந்தது? ஏன் பதறுகிறீர்கள்? எங்கே புறப்பட வேண்டும்? கொஞ்சம் விவரமாகத்தான் சொல்லுங்களேன்!”
“எல்லாம் பின்பு சொல்கிறேன். நீ இப்போது உடனே இங்கிருந்து கிளம்பப்போகிறாயா? இல்லையா? வாகைலாசத்துக்கு, மூட்டையைக் கட்டிக் கொள்.”
“ஏன் இப்படிப் பழைய பிரளயதாண்டவம் மாதிரி குதிக்கிறீர்கள்? விஷயத்தைச் சொன்னால்தான் நான் புறப்படுவேன்!”
“எல்லாம் உன் யோசனையால் வந்த வினைதான்! நிருத்திய கலையைக் கருவியாக வைத்துக் கொண்டு உலகைப் பிரளயம் செய்யக்கூடாது என்றாய். உன் கருத்துப்படியே அதைக் கைவிட்டு இங்கே உன்னோடு வந்தேன்!…”
“ஆமாம். அதனால் இப்போது என்ன கேடு வந்துவிட்டதாம்!”
“ஒருவகையிலா கேடுகள் வந்திருக்கின்றன? நான் பிரளயதாண்டவத்தால் அழிக்காமல் விட்ட உலகத்தை இச்சீரழிந்த அலங்கோல தாண்டவத்தால் அழித்துவிடுவார்கள் போலிருக்கிறது!” தம் கையிலிருந்த புத்தகத்தைப் பார்த்தவாறே கூறினார் அவர்.
“யார் அவர்கள்? என்ன அலங்கோலம் செய்கிறார்கள் அப்படி?”
“என்ன அலங்கோலமா? இதோ நீயே பார்!” ― எம்பெருமான் தம் கையிலிருந்த புத்தகத்தைக் கோபவேசமாய்ப் பார்வதி தேவியின் பக்கமாக வீசி எறிந்தார்.
பார்வதி அதை எடுத்துப் பார்த்தாள். மறுகணம் முகத்தில் அருவருப்புச் குழக் கண்களை இறுக்கி மூடிக் கொண்டாள். அவள் உடல் நடுங்கிக் குலுங்கி ஓய்ந்தது.