அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/362-383

விக்கிமூலம் இலிருந்து

33. சாதி

இச்சாதியென்னும் மொழி சாதித்தோர் சாதிப்போரென்பதில் சாதியெனக் குறுகி தமிழ்பாஷையாகிய திராவிடத்தை ஓர் கூட்டத்தார் சாதிக்கும் வார்த்தை ஒலியைக்கொண்டு “திராவிடசாதியாரென்றும்” கன்னடபாஷையை ஓர் கூட்டத்தார் சாதிக்கும் வார்த்தை ஒலியைக் கொண்டு “கன்னடசாதியாரென்றும்” மராஷ்டக பாஷையை ஓர் கூட்டத்தார் சாதிக்கும் வார்த்தை ஒலியைக்கொண்டு “மராஷ்டக சாதியாரென்றும்” ஆந்திரபாஷையை ஓர்கூட்டத்தார் சாதிக்கும் வார்த்தை ஒலியைக்கொண்டு “ஆந்திரசாதியாரென்றும்” பூர்வத்தில் வழங்கிவந்தார்கள்.

இதனிலக்கணமோவென்னில் “சாதிப்போர் என்பதில் சாதி-பகுதி, ப்-சந்தி, ப்-இடைநிலை, ஆர் - விகுதியாகி சாதிப்போ” ரென முடிந்தது. நன் நூல் சூத்திரம், 353. சாதியாரென்பதில் சாதி-பகுதி, ய்-சந்தி, ஆர்-விகுதியாகக்கொண்டு சாதியாரென முடிந்தது.

பூர்வத்தில் ஆந்திரசாதி, கன்னடசாதி மராஷ்டகசாதி, திராவிடசாதியென அவரவர்கள் சாதிக்கும் பாஷையை வழங்கிவந்தார்கள். நீரென்னசாதி யென்னும் வினாவிற்கு கன்னடசாதி, மராஷ்டக சாதியென தாங்கள் சாதிக்கும் பாஷையை விடை பகர்வதற்கும்; நீரென்ன குலமென்னும் வினாவிற்கு வைசியகுலம், சூத்திரகுலமெனத் தன் குடும்பத் தொழிலை விடைபகர்வதற்கும்; அவனென்ன வருணமென்னும் வினாவிற்கு கறுப்பு வருணம், கறுப்பும் வெள்ளையுங் கலந்த வருணமெனக் காணாதோன் நிறத்தை விடை பகர்வதற்கும்; நீரென்ன சமயமென்னும் வினாவிற்கு தன்மபோத காலத்தைக் குறிப்பதாயின் பௌத்த சமயமென்றும், அருங் கலைகளை வகுக்குங்காலமாயின் அருகசமயமென்றும், தன்னையாயும் சாதன காலமாயின் சைவசமயமென்றும் வியாரங்களாம் அறப்பள்ளிகளில் தங்கியுள்ள சமணமுநிவர்கள் தங்கடங்கள் ஞானசாதன காலங்களையும், போதனசாதன காலங்களையும், கலை நூல் வரையுஞ் சாதன காலங்களையும் குறிப்பிடுவான்வேண்டி பௌத்த சமயமென்றும், அருகசமய மென்றும், சைவசமயமென்றும் வழங்கிவந்தார்கள்.

அதன்பின்னர் வேஷபிராமணர்கள் அதிகரித்து யாதார்த்த பிராமணர்கள் நசிந்தபோது வேஷப்பிராமணர்கள் பௌத்தர்களை நசித்து தங்கள் வேஷப் பிராமணத்தை நிலைக்கச்செய்துகொள்ளுவதற்கு தங்களை உயர்ந்தசாதி பிராமணர்களென்றும், தங்களது பொய்வேஷங்களையும், பொய்மதங்களையும் அறிவிலிகளுக்கு உணர்த்திவரும் விவேகமிகுத்த பௌத்தர்களைத் தாழ்ந்த சாதி பறையரென்றும் வகுத்துவிட்டு பூர்வத்தில் பௌத்தர்களால் வகுத்திருந்தத் தொழிற்பெயர்களாம் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரரென்பவற்றை பிராமணசாதி, க்ஷத்திரிய சாதி, வைசிய சாதி, சூத்திரசாதியென வழங்கியபோது இத்தேச பௌத்தர்கள் பிராமணசாதனத்தை சாதிப்போர்களை பிராமண சாதியாரென்றும், க்ஷாத்திரியசாதன சம்மாரகர்த்தர்களை க்ஷத்திரிய சாதியாரென்றும், வைசிய சாதன வியாபாரஞ் சாதிப்போர்களை வைசியசாதியாரென்றும், சூஸ்திரசாதன வேளாளஞ் சாதிப்போர்களை சூஸ்திரசாதியார் என்றும் அவனவன் சாதிக்கும் சாதனப்பெயரென்று எண்ணி ஆந்திர சாதி, கன்னடசாதி, மராஷ்டகசாதி, திராவிட சாதியென பாஷைகளை வழங்கி வந்ததுடன் அவரவர்கள் சாதிக்குந் தொழில்களையும் பிராமணசாதி, க்ஷத்திரியசாதி, வைசியசாதி, சூத்திரசாதியென வழங்கிவந்தவற்றுடன் வடமொழியில் பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் சூத்திரனென்றும் தென்மொழியில் அந்தணன், அரசன் வணிகன் வேளாளனென்றும் பூர்வ பௌத்தர்களால் வகுத்திருந்தத்தொழிற்பெயர்கள் இவ்வேஷப் பிராமணர்களுக்கு விளங்காததினால், பிராமணனொருசாதி அந்தணனொரு சாதியென்றும், க்ஷத்திரியனொருசாதி அரசனொருசாதியென்றும், வைசியனொருசாதி வாணியனொருசாதி யென்றும், சூத்திரனொருசாதி வேளாளனொரு சாதியென்றும் வழங்கிக்கொண்டுவந்ததுமன்றி நாளதுவரையிலும் வழங்கி வருகின்றார்கள். இவ்வேஷப்பிராமணர்களுக்கு மற்றசாதியோர்களைப்பற்றி யாதொரு அக்கரையும் முயற்சியுங் கிடையாது. தங்களுக்கு எதிரிகளாக நின்று தங்கள் வேஷப்பிராமண தந்திரங்களையும் தங்கள் பொய்மதப் போதகங்களையும் விவரமாக சகலருக்கும் பறைந்துவந்த பௌத்தர்களைத் தாழ்ந்த சாதிப் பறையர்களென்று தாழ்த்தி அவர்களைத் தலையெடுக்க விடாமலும் அவர்கள் எவ்வழியாற் சீர்பெறுகின்றார்களோ அவ்வழிகளுக் கெல்லாம் இடுக்கங்களை உண்டு செய்துவருவதுமல்லாமல் அன்னிய தேசத்திலிருந்து இவ்விடங் குடியேறிவருபவர்களுக்கும் இவர்களைப் பற்றி இழிவாகக் கூறி இன்னும் தாழ்ச்சியடையச் செய்துவருகின்றார்கள். தங்களை உயர்ந்த சாதி பிராமணர்களென்றும், தங்களுக்கு எதிரிகளாய பௌத்தர்களை தாழ்ந்தசாதிப் பறையர்களென்றுங் கூறிவழங்கிவந்தபோதிலும் சாதியென்னும் மொழி தோன்றிய விவரமும் அதன் பொருளும் இவர்களுக்கு இன்னுந் தெரியவேமாட்டாது.

மேற்சாதி கீழ்ச்சாதியென்னும் பொய்க்கதைகளை ஏற்படுத்தி தங்கள் சொல்வல்லபத்தால் மெய்போலும்மே மெய்ப்போலும்மே சொல்லிவந்த போதிலும் இம்மேற்சாதி கீழ்ச்சாதியென்னும் பொருளற்றக் கற்பனாகதைகள் விவேகிகள் தோன்றுங்கால் பொய் பொய் பொய்யெனப் பொருந்த விளங்கிப்போம். சாதி, சாதியென்பது அவர்கள் சாதனத்தைக் குறிக்கும் மொழியேயாம். தற்காலம் அம்மொழியை ஜாதி ஜாதியென வழங்கி பொருள்கெட்டு மயங்கச் செய்திருக்கின்றார்கள்.

- 4:39; மார்ச் 8, 1911 -