அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/369-383

விக்கிமூலம் இலிருந்து

40. எத்தேசம் சீரும் சிறப்பும் பெறும் எத்தேசமக்கள் சுகமும் ஆறுதலும் பெறுவார்கள்

வித்தியா விருத்தியும் விவசாய விருத்தியுமுள்ள தேசம் சீரும் சிறப்பும் பெறும். வித்தையும், புத்தியும், ஈகையும், சன்மார்க்கமும் நிறைந்த மக்கள் சுகமும் ஆறுதலுமுற்ற வாழ்க்கைப் பெறுவார்கள். அதாவது தேசமக்கள் தங்கள் தங்கள் முயற்சியை நீர்வளம் நிலவளம் முதலியவற்றில் செலுத்த வேண்டும். ஆகாயத்தை நோக்கி மழையைப் பார்ப்பதுடன் அந்தந்த பண்ணை பூமிகளினருகே நீர் தோன்றுமிடங் கண்டு கருணை தங்கிய கவர்ன்மென்றாரால் கண்டுபிடித்துள்ள நீர் இயந்திரங்களைக் கொண்டு நீர்வளத்தைப் பெருக்கிக் கொள்ளல் வேண்டும். அதனால் வளம் பெற்ற பூமிகளை வரப்புயரச் செய்யல் வேண்டும் அவ்வகைச் செய்தும் எத்தேசத் தானியம் இத்தேசத்தை சீரும் சிறப்பும் பெறச்செய்யுமெனக் கண்டறிந்து அவைகளை விதைத்தல் வேண்டும். இத்தியாதி விவசாய விருத்திக்கும் நாளொன்றுக்கும் முக்காலணா கூலி ஓரணாகூலிக்கு ஏனவாயப் பறையன் அகப்படுவான் இளிச்சவாயப்பள்ளன் அகப்படுவான் என்னும் உலோபத்துவமும் சாதிகர்வம் வையாது பண்ணை பூமியானது பாப்பானுடைய தாயினும் அவன் பெரியசாதியின் போர்வையைப் பூராவாக அப்புறப்படுத்திவிட்டு அவனே ஏர்பிடித்து உழுது பூமியைப் பழுக்கவழுகக் கலக்கி விதைவிதைத்து பிள்ளைகளை வளர்ப்பதுபோல் விளையும் பயிறுகளையுங் கண்ணுங் கருத்துமாகக் கார்த்து விருத்தி செய்யல் வேண்டும்.

அத்தகைய விருத்தியால் தேச செழிப்புண்டாவதுடன் சாதிபேத நாற்றமற்ற பர்ம்மா தேசத்தோர் அரிசியும், சாதிபேத நாற்றமற்ற அமேரிக்கா தேசத்தோர் கோதுமையும், உலகெங்குஞ் சென்று உண்ண உதவுவதுடன் தங்கள் தேசங்களின் பெயரையுஞ் சிறப்படையச் செய்வதுபோல் இத்தேசத்துள் விருத்திபெறுந் தானியங்கள் மற்றய தேசங்களுக்கு உபகாரமாவதுடன் இத்தேசப் பெயரும் உலகெங்கும் விளங்கும். ஒவ்வோர் மனிதனும் பூமியின் விருத்தியை நாடிப் பணங்களைச் செலவு செய்வதுடன் தங்கள் கண்ணையுங் கருத்தையும் அதனிடம் நிறுத்தல் வேண்டும், அதுவே விவசாய விருத்தியின் சிறப்பென்னப்படும். வித்தியாவிருத்தியாங் கைத்தொழில்களிலோ மண்ணினாற் செய்யுங் கைத்தொழில்களும், கல்லினாற் செய்யுங் கைத்தொழில்களும், மரத்தாற் செய்யுங் கைத்தொழில்களும், உலோகங்களாற் செய்யுங் கைத்தொழில்களும், பஞ்சினாற் செய்யுங் கைத்தொழில்களும், தோலினாற் செய்யுங் கைத்தொழில்களும் அனந்தமுண்டு. அத்தகைய வித்தியா விருத்திகளுக்குப் பணங்களை செலவிட்டு ஒவ்வோர் தொழிலையும் விருத்தி செய்ய வேண்டும். அவ்வகை விருத்தியை நாடுவோர் சாதியாசாரம் இல்லாதவர்களை மட்டிலும் அதில் சேர்க்கப்படாதென்பாராயின் அதனழிவிற்கு அடிப்படை அப்பொறாமெயென்றே அறிந்து கொள்ள வேண்டும். அங்ஙனஞ் சேர்த்துக் கொள்ளினும் பெரியசாதிகள் என்போரே பெரிய பெரிய காக்காய் பிடிக்கும் பெரியதன உத்தியோகத்திலிருத்தல் வேண்டும். சிறியசாதிகள் என்று அழைக்கப்படுவோர் சிறியத்தொழிலையே பெறவேண்டும் என்பாராயின் அதுவுங் கைத்தொழில் விருத்திக்குக் கேடாக முடியும். அதாவது காக்காய் பிடிக்கும் வேஷதாரிகள் கைத்தொழில் செய்வதற்கும், அதன் மேற்பார்வை இடுவதற்கும் உதவவே மாட்டார்கள். காரணமோ என்னில், ஒவ்வோர் தொழிலாளியும் அந்தந்தத் தொழிலில் சிறுவயதினின்று உழைத்து விருத்தி பெற்று விவகாரம் அறிந்தவனே அந்தந்த தொழிலுக்கதிகாரியும், அந்தந்தத் தொழிலைப் பார்வையிடுபவனுமாய் இருத்தல் வேண்டும். அதனால் வேலையின் நுட்பமும், வேலைகள் செய்வோர் முன்னேற்றமும் கண்டு வித்தியாசாலையை விருத்திக்குக் கொண்டுவருவான். அதனாற் சகல கைத்தொழில்களும் விருத்தியடைவதுடன் விருத்தி பெற்ற பொருட்கள் பலதேசங்களுக்குஞ் சென்று தேசத்தின் வித்தியா சிறப்பு விளங்கும்.

இத்தகையாய் விருத்திபெறும் விவசாயமும், சித்திபெறும் வித்தையுமே அத்தேசத்தை சீருஞ் சிறப்பும் பெறச்செய்யும்.

எத்தேச மக்களாயினும் தங்கள் எண்ணங்களையும் நோக்கங்களையும் வித்தியா விருத்தியினிடத்திலேயே வைத்தல் வேண்டும். அஃது கோவில் சுற்றும் வித்தையல்ல, குளமுழுகும் வித்தையல்ல, குறுக்குபூசும் வித்தையல்ல, நெடுக்குப்பூசும் வித்தையல்ல, சந்தன பொட்டு வித்தையல்ல, சாந்துபொட்டு வித்தையல்ல, மஞ்சள் திருசுன்ன வித்தையல்ல, சிவப்பு திருசுன்ன வித்தையல்ல, பேரிலந்தங் கொட்டை வித்தையல்ல, துளசிக்கட்டை வித்தையல்ல, குடுமி வைக்கும் வித்தையல்ல, நூல்போடும் வித்தையல்ல, மந்திரம் பண்ணும் வித்தையல்ல, மணிகுலுக்கும் வித்தையல்ல, அவனை வேண்டிக்கொள்ளும் வித்தையல்ல, இவனை வேண்டிக்கொள்ளும் வித்தையல்ல, பெரியபூசை வித்தையல்ல, சிறியபூசை வித்தையல்ல, ஆட்டிக்கும் வித்தையல்ல, கோழியறுக்கும் வித்தையல்ல, இத்தியாதி வித்தைகளும் மதக்கடைபரப்பி வஞ்சித்தும் பொய் சொல்லியும் பொருள் பறித்தும் சீவிக்கும் மதக்கடை, சாமிக்கடை, சோம்பேரிகளின் வித்தைகளாகும். அத்தகைய மதக்கடை சாமிக்கடை சரக்குகளை நம்பிப் பின்பற்றுவோர் அவர்களிலும் சோம்பேரிகளாகி அல்லலடைய வேண்டியவர்களேயாவதுடன் அத்தகையோர் தேசமும் பாழடையுமென்பது சத்தியம். ஆதலின் சுகமும் ஆறுதலும் அடைய வேண்டிய மக்கள் மண்வித்தையிலும், உலோகவித்தையிலும், மரவித்தையிலும், பஞ்சுவித்தையிலும், சித்திரவித்தையிலும், ஓடதிவித்தையிலும், வியாபார வித்தையிலுங் கருத்தை இருத்தி விடாமுயற்சியிலிருப்பார்களாயின் அம்மக்கள் சுகமும் ஆற்றலும் பெறுவார்கள். அத்தகையோர் தங்கள் தங்கள் புத்தியையும் விருத்தி செய்துக்கொண்டு ஈகையாம் தன்ம சிந்தையுடையவர்களாகி, சன்மார்க்கத்தைப் பின்பற்றுவார்களாயின் அத்தேசத்தோர் குருவிசுவாசமும், இராஜவிசுவாசமும் பெருகி சதா சுகமும் ஆறுதலும் பெற்று ஆனந்தத்தில் லயிப்பார்கள். ஆனந்தத்தில் லயிப்பார்கள்.

- 6:13; செப்டம்பர் 4, 1912 -