சங்க இலக்கியத் தாவரங்கள்/071-150

விக்கிமூலம் இலிருந்து
 

சிறுமாரோடம்-செங்கருங்காலி
டையோஸ்பைரஸ் எபெனம் (Diospyros ebenum,Koen.)

கபிலர் கூறும் ‘சிறுமாரோடம்’ (குறிஞ். 78) என்பதற்குச் ‘செங்கருங்காலிப்பூ’ என்று உரை கண்டார் நச்சினார்க்கினியர். ‘மாரோடம்’ என்பது இதன் பெயர். இது தழைத்திருப்பதைக் குறிக்கப் ‘பசுமாரோடம்’ எனவும், இதன் மலர் மணத்தைக் குறிக்க ‘நறுமாரோடம்’ எனவும், மலரின் அளவைக் குறிக்கச், ‘சிறுமாரோடம்’ எனவும் புலவர் இதனை விதந்து பாடியுள்ளனர். இது ஒரு பெரிய மரம். உயரமாக வளரும். இதன் மலர் மஞ்சள் நிறமானது. சிறந்த நறுமணம் உடையது.

சங்க இலக்கியப் பெயர் : சிறுமாரோடம், மோரோடம்
உலக வழக்குப் பெயர் : கருங்காலி, ஆச்சா மரம், மாரோடம்
ஆங்கிலப் பெயர் : ரோஸ்உட் (Rosewood)
எபெனி (Ebeny)
தாவரப் பெயர் : டையோஸ்பைரஸ் எபெனம்
(Diospyros ebenum,Koen.)

சிறுமாரோடம்-செங்கருங்காலி இலக்கியம்

‘குல்லை பிடவம் சிறுமாரோடம்’ என்றார் கபிலர் (குறிஞ். 78) இதில் வரும் ‘சிறுமாரோடம்’ என்பதற்கு நச்சினார்க்கினியர், ‘செங்கருங்காலிப்பூ’ என்று உரை கூறியுள்ளார். பாலை பாடிய பெருங்கடுங்கோ, ‘நறுமோரோடமோடு’ என்பர் (நற்றி. 337:5). இதற்கு ‘நறிய செங்கருங்காலி மலர்’ என்றார் அதன் உரைகாரர். ‘பசுமோரோடமொடு ஆம்பல் ஒல்லா’ என்பது, ஐங்குறு நூறு (93:2) ‘மாரோடம்’ என்பது இதன் பெயர் போலும். தழைத்திருப்பதைக் குறிக்கப் ‘பசுமோரோடம்’ எனவும், நறுமணத்தைக் குறிக்க ‘நறுமோரோடம்’ எனவும், மலரின் அளவைக் குறிக்கச் ‘சிறுமாரோடம்’ எனவும் பாடினர் என்பது ஒக்கும். இம்மலர் நறுமணம் உடையது. இதனை மகளிர் கூந்தலில் அணிவர். இதன் நறுமணத்தை விவரிக்கும் அழகிய பாடல் ஒன்று நற்றிணையில் காணப்படுகின்றது: தலைவன் பொருள் வயிற் பிரிதலுற்றான். அவன் குறிப்பறிந்த தோழி,

‘உலகம் படைத்த காலம் முதலாகப் பொருளீட்டி வாழ விரும்புவோர், தம்மை அடைக்கலம் புகுந்தாரைக் (தலைவி) காத்து உடனுறைந்து, அவளது கூந்தலின் பெரும்பயன் கொள்ளாது மறந்தனர் போலும். அவளது கதுப்பில் நறுமணம் வீசுகின்றது. வேனிற் காலத்துப் பூத்த மோசி மல்லிகை மலரையும், பாதிரியின் சிறந்த மலரையும், மாரோடத்தின் நறிய மலரையும், கொய்து ஒருங்கே அடைத்து வைத்திருந்த பூஞ்செப்பைத் திறந்து வைத்தாற் போலும், நறிய மணம் வீசும் அவளது கூந்தலில் முகம் புதைத்து நுகர்ந்து மகிழும் பெரும்பயனைத் துறக்க எண்ணினர் போலும்’ என்கிறாள்.

“உலகம் படைத்த காலை தலைவ!
 மறந்தனர் கொல்லோ சிறந்திசி னோரே
 முதிரா வேனில் எதிரிய அதிரல்
 பராரைப் பாதிரிக் குறுமயிர் மாமலர்
 நறுமோரோடமொடு உடன் எறிந்து அடைச்சிய
 செப்பிடந்தன்ன நாற்றம் தொக்கு உடன்
 அணிநிறங் கொண்ட மணிமருள் ஐம்பால்
 தாழ் நறுங்கதுப்பில் பையென முழங்கும்
 அரும்பெறற் பெரும் பயம் கொள்ளாது
 பிரிந்துறை மரபின் பொருள் படைத்தோரே”
-நற். 337

இச்செங்கருங்காலி மரம் மிக வலிமையானது. வேலைப்பாடுகள் கூடிய மர வேலைக்குப் பெரிதும் பயன்படுவது. இதன் மலர் பசிய மஞ்சள் நிறமானது. சிறந்த நறுமணம் உடையது.

சிறுமாரோடம்—செங்கருங்காலி தாவர அறிவியல்

|-style="vertical-align:text-top;"

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : ஹெட்டிரோமீரி, எபனேலீஸ் அகவிதழ் இணைந்தவை.
தாவரக் குடும்பம் : எபனேசி (Ebenaceae)
தாவரப் பேரினப் பெயர் : டையோஸ்பைரஸ் (Diospyros)
தாவரச் சிற்றினப் பெயர் : எபெனம் (ebenum)
தாவர இயல்பு : பெரிய, உயரமான மரம். பசிய காடுகளில் வளர்கிறது.
தாவர வளரியல்பு : மீசோபைட். பசிய இலையுள்ளது. வறண்ட நிலத்தில் வளரும்,
இலை : தனி இலை, சுற்றடுக்கில் வளரும்.
மஞ்சரி : நுனி வளராப் பூந்துணர் முதிய கிளை நுனியில் காணப்படும்.
மலர் : பசிய மஞ்சள் நிறமான மலர்கள். இரு பாலானவை. பெண் பூக்கள், ஆண் பூக்களைக் காட்டிலும் பெரியவை. 4-5 அடுக்கு மலர்கள்.
புல்லி வட்டம் : சிறியது. பிளவுபட்டது.
அல்லி வட்டம் : 4-5 இதழ்கள், புனல் வடிவானவை. முதிராப் போதுகளில் இதழ்கள் வலமாக முறுக்கியிருக்கும்.
மகரந்த வட்டம் : ஆண்மலரில் 4 மகரந்தத் தாள்கள் உள்ளன. அல்லது 16 வரையிலும் காணப்படும்.
தாதுப்பை : நீளமானது. குத்துவாள் போன்றது.
சூலக வட்டம் : பெண் பூக்களில் 4-5 சூலிலைகளை உடையது. பெரும்பாலும் ஒரே ஒரு சூல் காணப்படுகிறது.
சூல் தண்டு : சூல்தண்டும், சூல்முடியும் 1-4 பிளவுள்ளவை. ஆண் பூவில் அருகியுள்ளது.
கனி : உருண்டை அல்லது முட்டை வடிவானது. பெரிதும் புல்லி முதிர்ந்து, மரம் போல் சூழ்ந்திருக்கும். உள்ளே சதைப் பற்று குழகுழப்பானது.
விதை : நீண்டு அடியில் குறுகியிருக்கும். தட்டையானது. வித்திலைகள் மெல்லியவை. பட்டையாக இருக்கும்.

இதன் மரம் மர வேலைக்கு உகந்தது. மிக வலிமையானது. மரத்தின் நடுவில் வைரம் பாய்ந்த பகுதி கறுப்பாக இருக்கும். ‘ரோஸ் உட்’ என்றும் ‘இந்திய எபெனி மரம்’ என்றும் பெயர்படும்

டையோஸ்பைரஸ் என்னும் இப்பேரினத்தில் 24 சிற்றினங்கள் தமிழ்நாட்டில் வளர்கின்றன. பெரும்பாலும் இவை வறண்ட மலைப் பகுதிகளில் பசுமைக் காடுகளிலும் வளரும் மரங்களும், பெரும்புதர்களும் ஆகும். பல சிற்றினங்களின் மரங்கள் மர வேலைக்குப் பயன்படுகின்றன.