சங்க இலக்கியத் தாவரங்கள்/075-150

விக்கிமூலம் இலிருந்து
 

பித்திகம்
ஜாஸ்மினம் கிராண்டிஃபுளோரம்
(Jasminum grandiflorum,Linn.)

இதனைப் பித்திகம், பிச்சிப்பூ எனவும் வழங்குவர். இதன் அரும்பு சிவந்த புறத்தை உடையதென்றும், பசிய காலை உடையதென்றும் புலவர்கள் கூறுவர். இது முல்லையினத்தைச் சேர்ந்தது. இதற்குச் ‘செம்முல்லை’ என்று உரை கூறுவர் நச்சினார்க்கினியர். இம்மலர் மிகுந்த மணமுடையது. இந்நாளில் இதனைப் பிச்சிப்பூ என்று கூறுவர்.

சங்க இலக்கியப் பெயர் : பித்திகம், தளவம்
தாவரப் பெயர் : ஜாஸ்மினம் கிராண்டிஃபுளோரம்
(Jasminum grandiflorum,Linn.)
உலக வழக்குப் பெயர் : பிச்சிப்பூ, பிச்சி

பித்திகம் இலக்கியம்

குறிஞ்சிப் பாட்டில் தலைவன் பித்திகத்து (பிச்சியினுடைய) அழகிய இதழ்களை உடைய பூவைத் தொடுத்த அழகினை உடைய தொடையாகிய ஒரு வடத்தைச் சுற்றிக் கொண்டு வருகிறான் என்பர் கபிலர்.

“பைங்காற் பித்திகத்து ஆயிதழ் அலரி
 அந்தொடை ஒருகாழ் வளைஇ
-குறிஞ். 117-118

“வஞ்சி பித்திகம் சிந்து வாரம்-குறிஞ். 89

‘பித்திகத்து’ என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘பிச்சியினது’ என்றும் ‘பித்திகம்’ என்பதற்குப் ‘பிச்சிப்பூ’ என்றும் உரை கூறினார். சங்கப் பாடல்களில் பித்திகம் என்ற சொல்லே பெரிதும் பயிலப்படுகின்றதாயினும், பித்திகை என்றும் குறிப்பிடப்படுகின்றது. ‘பித்திகம்’, முல்லை இனத்தைச் சார்ந்தது: செவ்விய அரும்புகளை உடையது. ‘தளவம்’ (குறிஞ். 80) என்பதற்குச் ‘செம்முல்லை’ என்று உரை கூறுவர். பித்திகமும், தளவமும் ஏறத்தாழ ஒன்றேயாகும். இரண்டும் படர் கொடிகள். தளவத்தைச் செம்முல்லை என்றழைப்பதோடு, பிச்சிப்பூ எனவும் வழங்குவர். தாவர இயலில் இவை இரண்டும் சிறிது வேறுபாடு உடையனவாயினும், ஜாஸ்மினம் கிராண்டிஃபுளோரம் என்றே கூறப்படுகின்றன. பித்திக அரும்பின் கால்கள் பசிய நிறமானவை. தளவத்தின் அரும்புகள் முழுவதும் இளஞ்சிவப்பு நிறமானவை. திருக்கடையூர் சிவன் கோயிலின் தல விருட்சம் பிச்சி எனப்படுகின்றது. ஆனால், இது தளவமேயாகும். இதன் அரும்பு செவ்வியதாதலின், சங்க இலக்கியம் இதனைத் தனியாகக் குறிப்பிடுகின்றது.

பித்திகம் பசிய காலை உடையதென்பர் புலவர் பெருமக்கள்.

“பைங்காற் பித்திகத்து ஆயிதழ் அலரி”-குறிஞ். 117
“செவ்வி அரும்பின் பைங்காற் பித்திகத்து”
-நெடுநல். 39


பித்திகத்தின் முகை சிவந்த புறத்தை உடையதென்றும், மாரிக் காலத்தில் மலிந்து பொழிந்த மழை கண்டு பூக்குமென்றும், இயல்பாகவே சிவந்த கண்கள், தலைவி நீராடியதால் மேலும் சிவந்து மாரிப் பித்திக முகைக்கு ஒப்பாயிற்று என்றும் கூறுவார். இவ்வுண்மை, தாவரவியலுக்கும் ஒத்துள்ளது. இதனைப் பின்வரும் அடிகளிற் காணலாம்.

“மலிபெயல் கலித்த மாரிப் பித்திகத்துக்
 கொயல் அருநிலைஇய பெயல் ஏர்மணமுகைச்
 செவ்வெரிந் உறழும் கொழுங்கடை மழைக்கண்”

(வெரிந்-புறத்தை) -அகநா. 42 : 1-3

“மாரிப்பித் திகத்து நீர்வார் கொழுமுகை”
-குறுந் .168 : 1
“பெருங்தண் மாரிப்பேதைப் பித்திகத்து
 அரும்பே முன்னும் மிகச் சிவந்தனவே”
-குறு. 94 : 1-2

“மாரிப்பித் திகத்து ஈர்இதழ் புரையும்
 அம்கலுழ் கொண்ட செங்கடை மழைக்கண்”

-அகநா. 295 : 19-20


பித்திகம், கொடியில் மலர்ந்தாலும், அரும்பாகக் கொய்து வைக்கப்பட்டு மலர்ந்தாலும், அந்திப் பொழுதிலேயே மலரும் இயல்புடையது. இவ்வியல்பினை உணர்ந்திருந்தனர் தமிழ்க்குடி மக்கள். இதனை விளக்குமாறு போல, நெடுநல் வாடையில் அந்தி மாலைச் சிறப்புச் செய்தியொன்று காணப்படுகின்றது.

பொழுது சாய்கிறது; கார் காலமாதலின், கதிரொளியில்லை. அந்திப் பொழுது வந்தவாறும் அறிதற்கில்லை. பசுங்காற் பித்திக அரும்புகளைப் பூந்தட்டிலே இட்டு வைத்திருந்தனர். அந்திப் போது இதுவென்றறிவிக்குமாறு போல, பித்திகப் போதெல்லாம் மலர்கின்றன. அவை விரிந்து, அலரும் செவ்வி மணக்கின்றது. மகளிர் அந்திக் காலம் வந்தது என்றறிந்தனர். இரும்புத் தகளியில் நெய் தோய்ந்த திரியைக் கொளுத்துகின்றனர். நெல்லையும், மலரையும் சிதறி, இல்லுறை தெய்வத்தை வணங்கினர். இவ்வளப்பத்தை மாலைக் காலத்தே அங்காடித் தெருவெல்லாம் கொண்டாடிற்று.

“மடவரல் மகளிர் பிடகைப் பெய்த
 செவ்வி அரும்பின் பைங்காற் பித்திகத்து
 அவ்விதழ் அவிழ்பதம் கமழ்பொழுது அறிந்து
 இரும்பு செய்விளக்கின் ஈர்ந்திரிக் கொளீஇ
 நெல்லும் மலரும் தூஉய் கைதொழுது
 மல்லல் ஆவணம் மாலை அயர”
-நெடுநல். 39-44
(பிடகை-பூந்தட்டு)

‘பித்திகை மலர்களைக் குருக்கத்தி மலர்களுடன் விரவி, உழவர் தனி மகள் மலர் விற்பள்’ என நற்றிணை கூறும்.

“துய்த்தலை இதழ் பைங்குருக் கத்தியொடு
 பித்திகை விரவுமலர் கொள்ளீ ரோஎன
 வண்டு சூழ் வட்டியள் திரிதரும்
 தண்டலை உழவர் தனிமட மகளே”
-நற். 97 : 6-9

இனி, தளவ மலரைச் செம்முல்லை என்று புலவர்கள் கூறுவராயினும், உலக வழக்கில் தளவத்தைப் பிச்சிப்பூ என்று கூறலால், தளவம் பற்றிய சில குறிப்புகளையும் இத்தாவரத்துடன் நோக்குவது ஒக்கும்.