பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92


கெங்கேயிருந்தோ எதிர்பாராத இடத்திலிருந்தெல்லாம் எதிர்ப்புக் கிளம்பும். இவைகளைக் கண்டு அஞ்சாமல் அயராமல், பணி புரியும் பண்பு வாலிபருக்குத் தேவை.

🞸🞸🞸

மனிதன் மனிதனாக வாழ வழி கண்டுபிடிக்கும் மகத்தான வேலை, வாலிபர்கள் முன் இருப்பது. நாட்டின் இயற்கை வளத்தையும், மக்களின் மன வளத்தையும் பெருக்கும் பெரும் வேலை இருக்கிறது. புதிய வாழ்வு அமைக்கும் பொறுப்புள்ள வேலை; இதற்குப் பல பொருள் பற்றிய அறிவும் எதையும் பகுத்தறியும் தன்மையும். காரணம் கண்டே எதையும் ஏற்றுக்கொள்ளும் போக்கும் அறிவுடன் தொடர்புகொண்ட ஆற்றலும், மக்களிடம் மட்டற்ற அன்பும், அவர்களை வாழச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையும், அவர்கள் அனைவரும் வஞ்சிக்காமல், சுரண்டாமல், அடக்கி ஆளாமல், அடிமைப்படாமல் வாழக்கூடிய விதத்தில் நாட்டின் வளத்தையும் முறையையும் புதுப்பிக்கமுடியும் என்ற எண்ணமும், பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல் என்ற எண்ணமும், வாலிபர்களுக்குத் தேவை.

🞸🞸🞸

வாலிபர்கள் ஆசிரியர்களாக வேண்டும். உலகத்தைக் கிராமத்தாருக்குக் காட்டவேண்டும். வாலிபர்கள் வைத்தியர்களாகவேண்டும். உடல் உள்ளம் இரண்டிலும் உள்ள நோய் தீர்க்கும் மருந்தளிக்கவேண்டும். வாலிபர்கள் பாலம் அமைக்க, நீர்த்தேக்கம் அமைக்க, உழவு முறையை மாற்றப் பணிபுரியவேண்டும். பழமையின் பிடியிலிருந்து மக்களைப் பக்குவமாக விடுவித்துப் புதுமையின் சோபிதத்தைக் காட்டிப் புத்துலகு அமைக்கவேண்டும் வாலிபர்கள். இதற்கான திறமும் தீரமும் தேவை. அறிவு ஆராய்ச்சி தேவை. இதற்கான வெளி உலகத் தொடர்பு தேவை.