உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கன்னட நாட்டின் போர்வாள் ஐதரலி

|| 183

வீரன் ஹைதரின் கைவரிசையே முனைப்பாயிருந்தது என்பது பின்னாட்களிலேயே அவர்களுக்குத் தெரியவந்தது. ஆனால், மைசூர் அமைச்சன் நஞ்சிராஜன் இவ்வீர இளஞாயிற்றின் பெருமையை முற்றிலும் உணர்ந்துகொண்டான். அவனுக்கு மானியம் அளித்து நிலவரியை நேரிடையாகப் பிரிக்கும் உரிமையும் தந்தான். அத்துடன் மன்னர் பெயரில் தனிப்படை திரட்டும் உரிமையும் அவனுக்குத் தரப்பட்டது. அமைச்சரோ டொத்த துணையமைச்சராக அவன் படிநிலை உயர்ந்தது.

1750-க்குள் போர் நாஸிர்ஜங் பகதூருக்கு எதிராகத் திடீரென்று திரும்பிற்று. அரசியல் சூழ்ச்சிகளில் வல்ல டியூப்ளே தன் கைவரிசையைத் திடுமெனச் செஞ்சிக் கோட்டை மீது திருப்பினான். நவாப்புகள் ஆர்க்காட்டைத் தலைநகராகத் தேர்ந்தெடுக்குமுன், சிவாஜி காலமுதல் அதுவே தமிழகத்தின் தலைநாயகக் களமாக இருந்து வந்தது. பிரஞ்சுப் படைத்தலைவன் புஸி அதைக் கைப்பற்றியதனால் கடப்பை, கர்நூல் முதலிய பகுதிகளிலுள்ள வலிமை வாய்ந்த குறுநில மன்னர் பிரஞ்சுச் செல்வாக்குக்கு உடன்பட்டனர். அவர்கள் உதவியுடன் நாஸிர்ஜங்கு சூழ்ச்சிப் பொறியில் சிக்கவைக்கப்பட்டான். சின்னாட்களில் அவன் சதிகாரர் கைப்பட்டு இறந்தான்.

முஸபர்ஜங் இப்போது பிரஞ்சு உதவியுடன் நிஜாமானான். முகமதலி ஆர்க்காட்டை விட்டுத் திருச்சிராப்பள்ளிக்கு ஓட வேண்டியதாயிற்று. இங்கும் அவன் சந்தாசாகிபி முற்றுகையிடப்பட்டான். இச்சமயத்தில், முகமதலி ஆங்கிலேயர் உதவி நாடினான். இது முதல், முகமதலி, இறந்துபோன நாஸிர்ஜங் மரபினர் ஆகியவர் பக்கமாக ஆங்கிலேயரும் கருநாடகப்போரில் ஈடுபட்டனர்.

பொதுவாக இச்சமயத்திலும் இதற்குச் சில நாள் பின்னரும் பிரஞ்சுத் தலைவர்களைவிட ஆங்கிலத் தலைவர்கள் அரசியல் திறமையும் போர்த் திறமையும் குன்றியவர்களாகவே இருந்தார்கள். ஆயினும், ஹைதரைப்போலக் குடிமக்கள் மரபிலிருந்து எழுந்த ராபர்ட் கிளைவ் என்ற வீரன் இப்போது ஆங்கிலேயர் மதிப்பை உயர்த்த முன் வந்தான். அவன் அரசியல் கவறாட்டத்தில் எதிர் கவறாட்டமாடி, ஆர்க்காட்டைக் கைப்பற்றினான். முகமதலி மீட்டும் தவிசேறினான்.