உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கன்னட நாட்டின் போர்வாள் ஐதரலி

|| 193

அஞ்சிடி துருக்கம் முதலிய கோட்டைகள் நஞ்சிராஜன் குடும்ப மானியங்களாய் அமைந்திருந்தன. அவற்றின் மேற்பார்வைக்காக எழுநூறு குதிரை வீரரையும், இரண்டாயிரம் பயிற்சி பெற்ற காலாட்களையும், பயிற்சி முற்றுப் பெறாத நாலாயிரம் படை வீரரையும் மட்டுமே நஞ்சிராஜன் இப்போது தன்னுடன் வைத்துக் கொண்டான்.

1755-இல் ஹைதர் திண்டுக்கல் மாவட்டத்தின் படைத்துறை ஆட்சியாளராக அமர்வு பெற்றான். இங்கே அவன் பிரஞ்சுப் படைத் தலைவர்களைத் தருவித்து, அவர்கள் மேற்பார்வையில் தன் படைகளை நன்கு பயிற்சி செய்வித்தான். அத்துடன் இவ்விடத்திலேயே அவன் ஒரு வெடிமருந்துச் சாலை அமைத்து, அதில் வெடிமருந்துச் சரக்குகளையும் படைக் கருவிகளையும் தொகுத்துத் திரட்டினான். இங்ஙனம் மைசூர் அரசு தளர்ச்சியுற்றுவரும் நாட்களிலே, அத்தளர்ச்சியைத் தடுக்க ஹைதர் அரும்பெருமுயற்சி செய்தான். இம்முயற்சியே அவனை அச்சிறிய அரசின் அருகே ஒரு அரசாக்கிற்று. எவர் எதிர்ப்பும் இல்லாமலேயே மக்கள் சக்தி அவனைக் கன்னட நாட்டின் புகழ் ஏணியின் முதல் படியில் கொண்டு வந்து விட்டது.

அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் நடைபெற்ற மூன்று நிகழ்ச்சிகள், அவனைத் திடுதிடுவென்று அப்புகழேணியின் படிகளில் ஏற்றி, புகழ்மேடையில் இடம் பெறுவித்தது.

1750-இல் நிஜாமாகத் தவிசேறிய முசபர்ஜங் ஓர் ஆண்டுக்கு மேல் ஆட்சி செய்யவில்லை. அடுத்த ஆண்டிலேயே நாஸிர்ஜங்கின் தம்பியான சலாபத்ஜங் என்பவன் மீர் அசப் உத்தௌலா என்ற பட்டத்துடன் நிஜாமானான். பிரஞ்சுக்காரர் உதவியுடன் அவன் ஹைதர் மீது படையெடுத்து, மீண்டும் மீண்டும் கொள்ளையிட்டு நாட்டைப் பாழாக்கி வந்தான். மன்னன் ஐந்து இலட்சம் வெள்ளியை உடனடிக் கையுறையாகக் கொடுத்து, இன்னும் இருபத்தேழு இலட்சம் தருவதாக வாக்களித்துத் தலை தப்பினான். ஆனால், வாக்களித்த தொகைக்காக நாட்டின் வடபகுதி முழுதும் ஈடுவைக்கப் பட்டிருந்தது. மராட்டியக் காவற்படை வீரர் ஆங்காங்கே தங்கி, மனம்போல மக்கள் செல்வத்தைச் சூறையாடி வந்தனர்.