166
தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 1 தமிழ்நாடு செய்த தவப்பேறாக இப்புகார் நகரத்திற் பிறந்தமை யொன்றே இம்மூதூரின் பழம் பெருமைக்குச் சிறந்த சான்றாகும்.
இவ்வாறு கற்புடைத் தெய்வமாகப் போற்றப்படும் கண்ணகி இந்நகரில் தோன்றுவதற்கு முன்னரே தம் கற்பின் திறத்தால் நாட்டினை உய்விக்கவல்ல பத்தினிப் பெண்டிர் பலர் இப்புகார் நகரத்திற் பிறந்து சிறப்புடைய நல்வாழ்வு நடத்தி யுள்ளார்கள்.
பாண்டியன் பேரவையில் வழக்குரைத்து வென்ற கண்ணகியார் பாண்டியனோடு உயிர் துறக்கும் நிலையிலுள்ள கோப்பெருந்தேவியை நோக்கித் தான் பிறந்த ஊராகிய புகார் நகரத்தில் வாழ்ந்த பத்தினிப் பெண்டிர் எழுருவடைய வரலாறு களைத் தொகுத்துக் கூறி, "மட்டார் குழலார் பிறந்த அப்பதியிற் பிறந்த யானும் நிறையுடையேன் என்பது உண்மையானால் மதுரையை அரசோடு ஒழிப்பேன்" என வஞ்சினங் கூறுவதாக அமைந்தது சிலப்பதிகாரத்திலுள்ள வஞ்சினமாலை என்ற கலிவெண்பாட்டாகும். கண்ணகியாற் பாராட்டப் பெற்ற கற்புடை மகளிர் எழுவர் இப்புகார் நரகத்திற் பிறந்து வாழ்ந்தார்கள் என்ற இவ்வரலாறு இந்நகரத்துக்கேயன்றி இந்த நாடு முழுவதற்கும் சிறப்பளிப்பதாகும்.
கலைச்செல்வி மாதவி
நாடகக் கணிகை மரபிற்பிறந்து ஆடல் பாடல் அழகு மூன்றும் ஒருங்கே வாய்க்கப்பெற்று நாடக நன்னூலை நன்கு பயின்று மன்னன் பேரவையிலே ஆடிக்காட்டி ஆயிரத்தெண் கழஞ்சு நிறையுள்ள பசும்பொன்மாலையைப் பரிசாகப் பெற்ற கலைச் செல்வியாகிய மாதவி, தன் காதற் கொழுநனாகிய கோவலன் மதுரையிற் கொலையுண்டமை கேட்டு ஆற்றாது இவ்வுலக இன்பங்களை வெறுத்து அறவண அடிகள் அறவுரைப் படி புத்த சமயத்தைப் பின் பற்றித் துறவடைந்ததும், கோவலனுக்கு மகளாய் அவள் வயிற்றிற் பிறந்த மணிமேகலை தன் இளம் பருவத்திலேயே துறவுபெற்றுத் தவக்கோலமுடைய வளாய்ப் புகார் நகரத்தும், இலங்கையிலும், வஞ்சி நகரத்திலும் சென்று புத்தசமய அறவுரைகளை எடுத்துரைத்து ஏழைகளின்