180
அப்பாத்துரையம் - 22
அறிவமைதிக் கொவ்வாத முறையில் அச்சங்களுக்குத் திடீரென்று ஆளாகும் வழக்கமுடையவள் அவள். இதனால் பீதியுற்று நகரின் மேற்குப் பகுதிக்கு ஓடினாள். இங்கே அவள் தன் பழைய செவிலித்தாயின் இல்லத்தில் தன்னைப் புதைத்தாள்.
'இங்கும் அவளுக்கு அமைதி கிட்டவில்லை. அருகேயிருந்த குன்றுகளின் மீதுள்ள ஒரு சிற்றூருக்குப் போகத் திட்டமிட்டாள். ஆனால் அவ்வாண்டில் அத்திசையில் பயணம் செல்வது கோளமைதிகளுக்கு மாறானது என்று கண்டாள்.
'அவள் இத்தகைய மோசமான நிலையில் இக்கட்டான இடத்தில் தங்கும் சமயம் பார்த்து நீங்கள் அவளைச் சந்திக்க நேர்ந்தது. இது பற்றி அவள் எதுவும் வெளியிட்டுக் கூற வில்லையானாலும், அவளுக்கு இது ஒரு பெரு வேதனையா யிருந்தது என்பதை நான் அறிவேன். ஆனால் நன் நினைவுகளைத் தன் உள்ளத்திற் குள்ளாகவே அடக்கி வைத்துக் கொள்வதில் என் தலைவிக்கு யாரும் ஈடில்லை. மற்றவர் தன் மனத்தின் நிலையை அறிவதையே அவள் பொறுக்கமாட்டாள். இந்நிலையில் அவள் உங்களிடமும் மிக விசித்திரமாக நடந்து கொண்டாள் என்பதில் ஐயமில்லை. இதை நீங்களே நேரில் அறிவீர்கள்' என்றாள்.
ஆம், இது அனைத்தும் தோ நோ சூஜோ வருணித்த படியே உள்ளது' என்று கெஞ்சி நினைத்தான். ஆனால் ‘ஒரு குழந்தை பற்றிய பேச்சு இருந்ததே அதைக் காணாமல் சூஜோ மிகவும் வருந்தினதாக அறிகிறேன். இது மெய்தானா?' என்று அவன் கேட்டான். அவளைப்பற்றி மேன் மேலும் அறியும் ஆர்வம் அவனைப் பிடித்து உந்திற்று. உகான் மீண்டும் பேசினாள். 'ஆம்! உண்மையே. அது சென்ற ஆண்டு இளவேனிற் பருவத்தில் பிறந்தது. அது ஒரு பெண், மிக இனிய தோற்ற முடையது' என்றாள்.
'அது இப்போது எங்கே இருக்கிறது? எங்கே கொண்டு வருகிறாய் என்று வேறு யாருக்கும் தெரியாமல் அதை நீ கைப்பற்றி என்னிடம் கொண்டு வரமுடியுமா? இன்றைய என் மாளாத் துயரினிடையே அவளை நினைவூட்டும் சின்னமாக அதைப் பெறுவது ஒரு பெரிய ஆறுதலாயிருக்கலாம்' என்று கேட்டான் கெஞ்சி. 'சூஜோவிடம் இவற்றை நான் கூறுவது இயல்பான கடமையாகவே இருக்கும். ஆனால் இதன் மூலம்