உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8

❖ மறைமலையம் 3 ❖


என்கிறார் பாவாணர் (வடமொழி வரலாறு. முன்னுரை)

தகவார்ந்த தமிழ் எழுதுவதற்குத் தம்மை மேற் கோளாகக் கொள்ளல் சாலும் என்பதை, “யான் தமிழில் எழுதும் ஒவ்வொரு சொல்லையும் சொற்றொடரையும் நீங்கள் சவ்வையாக உன்னித்து வந்தால் தமிழிற் பிழை யின்றிப் பேசவும் எழுதவும் ஆற்றல் பெறுவீர்கள்” என்று கடிதத்தில் பொறித்தமை விளக்கிக் காட்டும். (மறைமலையடி களார் கடிதங்கள்-1).

அடிகளார் நூல்களைக் கற்றால் தமிழின் முழுதுறு பரப்பைக் கற்ற பயன் செய்யும் என்பது அவர் தம்மைத் தாமே மதிப்பிட்ட மதிப்பீடாம். அதனை அவர் தம் திருமகனார் மறை. திருநாவுக்கரசு அவர்கள் “யான் ஐம்பது ஆண்டுகட்கு மேலாக ஏராளமான நூல்களை ஆராய்ந்து கண்ட முடிவுகளை நூல்களாக எழுதியிருக்கின்றேன். பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்தது போல. உண்மை காணும் உணர்ச்சியினால் நடுநின்று ஆராய்ந்திருக்கின்றேன். ஒருவர் தம் வாழ்நாள் முழுவதும் கற்றாலும் அறிய முடியாத உண்மைகளை எல்லாம் எளிதாக எழுதி வைத்திருக்கின்றேன். எல்லாரும் தமிழ் இலக்கியங்கள் யாவற்றையும் கற்குந் தொல்லையை மேற்கொள்ள வேண்டியதில்லை. அது முடியவும் முடியாது. தேவையும் இல்லை. எல்லா நூல்களிலும் உள்ள சிறந்த உண்மைகளையெல்லாம் பிழிசாறாக யான் வடித்துள்ளேன். என் நூல்களைப் படித்தால் போதும். அதனால் தமிழ் முழுதுங்கற்ற பயனை அடையலாம் என்பர்” என்கிறார். (மறைமலையடிகள் வரலாறு 87)

எடுத்துக்கொண்ட கொள்கையில் உறுதிப்பாடு என்பது நினைவும் சொல்லும் செயலும் ஒருப்பட்டு நிற்கும் ஒரு தன்மையாம். அத்தன்மைக்குத் தம்மைத் தாமே சான்றாக்கிக் கொண்டு நிலைப்படுத்திய சான்றோர் மறைமலையடிகளார் என்பது இதுவரை கண்டவற்றால் விளங்கும்.

தனித் தமிழ் ஊற்றம் ஏற்படு முன்னரே தமிழ்ச் சொல் பிறசொல் என்னும் ஆய்வு மேற்கொண்டிருந்தார் அடிகளார்.

1902இல் ‘ஞானசாகரம்’ என்னும் மாதிகையை அடிகளார் தொடங்கினார். ‘தமிழ் வடமொழியினின்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/41&oldid=1628569" இலிருந்து மீள்விக்கப்பட்டது