❖ மறைமலையம் - 3 ❖ |
மருத்துவர் ஒருவர் (Dr. James Esdaile, M.D.) நோயாளி ஒருவனுக்கு மிக வீங்கிப்பெருத்த விதைகள் இரண்டை நோயின்றி அறுத்தெடுத்து நலப்படுத்தின வரலாற்றினை இங்கே மொழி பெயர்த்துக் காட்டுகின்றாம்.
பன்றி விற்பனை செய்த ஒருவன் மற்றொருவனை அடித்துப் படுகாயப்படுத்தின குற்றத்திற்காக ஏழு ஆண்டுகளுக்குக் கடுங்காவலில் வைக்கப்பட்டான். அவ்வாறு வைக்கப்பட்டபின் சில காலத்தில் அவனுக்கு இரண்டு விதைகளும் மிக வீங்கிப் பெருத்து அவன் நடத்தல் இருத்தல் எழுதல் முதலான எவ்வகை நடமாட்டமும் செய்தற்கு இயலாதபடி அவனுக்குப் பெருந்துன்பத்தை விளைவித்தன. அதுகண்டு சிறைக்கோட்டத் தலைவர் அவனை அறமருத்துவக் கழகத்திற்கு அனுப்பினர். அங்கிருந்த வெள்ளைக்கார மருத்துவர் அவனை ஒரு நாற்காலியில் இருத்தி, அவனுடைய விதைகளில் ஒன்றைக் குத்தி நீரை வெளியே எடுத்துவிட்டு, அதனுள்ளுக்கு ஏற்றவேண்டிய கார மருந்தை ஏற்றிவிட்டார். அக்காரமருந்து உட்சென்றதும் அதனால் உண்டான எரிவு பொறுக்கமாட்டாமல் கண்களை இறுக மூடிக்கொண்டு, கறை நரம்பை இரண்டு கைகளாலும் பிடித்து நெருக்கினபடியாய் மிகவுந் துன்புறுவானானான். அதனைக் கண்டு அவன்பால் இரக்கமுற்ற அவ்வெள்ளைக்காரர் தங்கீழ் அலுவல் பார்க்கும் வங்காளி மருத்துவரை நோக்கி “யோகநித்திரையில் செலுத்தப் படுவோரைப் பார்த்திருக்கின்றீரா?” என்று கேட்க அவர் “மருத்துவக்கல்விக் கழகத்தில்” அஃது ஆராயப்பட்டதைப் பார்த்தேன்; என்றாலும், அஃது அப்போது பலிக்கவில்லை.” என்றார். அதன்மேல் அவ்வெள்ளைக்கார மருத்துவர் “அக்கலைப் பயிற்சியைப் பற்றி யான் நூல்களிற் கற்றறிந்திருக்கின்றேன்; ஆனால் எவரும் அதைப் பழகப் பார்த்திலேன். இப்போது அதனை இவன்மேற் செய்து பார்க்க மிகவும் விரும்புகின்றேன்.
இஃது எனக்குப் பலியாமற் போனாலும் போகலாம்.” என்று சொல்லிக் கொண்டே அந்நோயாளி நாற்காலியில் இருந்த படியாகவேயிருக்க, அவனுடைய இரண்டு முழங்கால்களையும் தம் இரண்டு முழங்கால்களுக்கு இடையே வைத்துக்கொண்டு, தம் கைகளைக் கீழ்நோக்கிய படியாய் விரித்துநீட்டி அவன் முகத்திலிருந்து வயிற்றின் கொப்பூழ் வரையில் அவனைத்