உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
240 ||

அப்பாத்துரையம் - 33



அந்த நரகவாதையை..’ அதற்குமேல் அவனால் சிந்திக்க முடியவில்லை. அவன் உடல் வியர்த்தது. அவன் உறுப்புக்கள் நடுங்கின.

அவன் உடலைவிட இளைஞன் உடலில் நடுக்கம் மிகுதியாயிருந்தது. அவன், “அண்ணா, நான் இந்தப் பேயிட மிருந்து தப்பக்கூட உன்னை அதனிடம் ஒப்படைக்க விரும்பவில்லை. இது என்னிடமே இருக்கட்டும். உனக்கு வேண்டாம். ஏற்கெனவே பழிச் செயல்கள் செய்த நானே மீதிப் பழியையும் சுமந்து செல்வதாக இருக்கட்டும் பொன்னான உன் வாழ்வை அது கறைப்படுத்த வேண்டாம்.” என்றான்.

கீவ் நடுக்கம் தீர்ந்தது. அவன் வெள்ளை இளைஞனைப் பிடித்து ஆதரவாக ஒரு திண்ணையின் பக்கம் கொண்டு சென்றான். “தம்பி! இதோ, என்னைப் பார்; நான் துணிந்து வந்திருக்கிறேன்; பழியச்சம் என்னை ஒன்றும் செய்யாது; அதைக் காட்டிலும் ஒரு பெரிய ஆற்றல் என்னை ஆட்டிப் படைக்கிறது; நான் அதை வாங்கத்தான் போகிறேன். என்றான்.

“அப்படி என்ன ஆற்றல் இருக்கிறது. உலகில்?” என்று வியப்பே உருவாகக் கேட்டான் இளைஞன்.

“காதல்!” என்றான் கீவ்.

கீவிடம் வெள்ளியாக ஒரு வெள்ளிதான் இருந்தது. “உன்னிடம் சில்லறை இருக்கிறதல்லவா?” என்று கேட்டான். இளைஞன் உயிரைப் புதைத்து வைத்திருப்பதுபோல, தன் மடியில் ஐந்து காசுகளைச் செருகி வைத்திருந்தான். வெள்ளியைக் கொடுத்து முதலில் அவற்றைக் கீவ் வாங்கினான்; பின் ஒரு காசு இளைஞனிடம் சென்றது. முன் ஐம்பது வெள்ளியின் சின்னமாக அவனிடம் வந்த புட்டிச்சாத்தன், இப்போது ஒரே ஒரு காசின் சின்னமாக அவனிடமே திரும்பி வந்தது.

அவன் வீடு திரும்பும்வரைகூடக் காத்திருக்கவில்லை. புட்டி கையில் வந்ததே. “என் பெரு நோய்க் கூறு நீங்கி நான் உடல் நலம் பெறுக,” என்று புட்டிச் சாத்தனிடம் கூறினான்.

வீடு வந்து சேர்ந்தபின் அவன் குளிப்பறை சென்றான். உடலிலிருந்த புள்ளி மறைந்து போய்விட்டது. அவன் துள்ளிக் குதித்தான்.