உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4. மெலீகரின் வீர மறைவு

(மெலீகர் ஜேஸனுடன் சென்று பொன்மறியின் கம்பிளியைக் கைப்பற்ற உதவிய ஆர்கோநாவ வீரருள் ஒருவன். காதலுக்குப் பலியான பெண்டிர் கதைகள் பல. மெலீகர் அதேவகையில் வாழ்விழந்த ஒரு ஆடவன். தாயும் மனைவியும், கண்டு மகிழ, அவன் தன் காதலிக்கும் நாட்டுக்கும் கடமையாற்றி

மாண்டான்.)

குழந்தை ஒன்று வேண்டுமென்று தவங்கிடந்தாள் கிரேக்க மாதாகிய அல்தெயா. இளமை அவளைவிட்டு நீங்கியநேரம் அவள் துயரகற்றி மகிழ்வூட்டும் வண்ணம் வந்து பிறந்தான். மெலீகர். ஆனால், பிள்ளைப்பேற்றின் அயர்ச்சிதீரப் பல

நாளாயிற்று. பிள்ளைபிறந்த ஏழாம் நாள் அவள்

அரைத்துயிலுடன் சாய்ந்து கிடந்தாள். சற்றுமுன் அவள் அடுப்பிலிட்ட கட்டை ஒன்று தளதளவென்று பற்றி எரிந்து கொண்டிருந்தது.

தீயின் ஒளி அவள் கண்களின்முன் நிழலாடிற்று.நிழல் வளைந்து வளைந்து மூன்று கூறுகளாய், ஒவ்வொரு கூறும் ஒரு கிழவி வடிவத்தில் நிலையாகப் படிந்தது. அவள் கூர்ந்து கவனித்தாள். ஆம், அவர்கள் தான் ஊழ் மாதர் மூவர் - மூவரும் உடன்பிறந்தவர்கள். ஒவ்வொரு மனிதர் ஊழையும் ஒரே தறியில் ஒன்றுபட்டு நெய்து உருவாக்குபவர்கள் அவர்களே!

“மூவர் ஏன் என்முன் வரவேண்டும்? இது நல்லறிகுறியா? தீயறிகுறியா?" அவள் மனம் இக்கேள்விகளால் அலைப்புண்டு ஊசலாடிற்று.

“உனக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான்,” என்றது ஒரு குரல். "நீ மகிழ்ச்சியுடனிருக்கிறாய்,” என்றது மற்றொன்று.