உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

35

வழக்கில், பறையர் என்னும் குலத்தார்க்குத் தந்தையையும், தம், தன் முதலிய முன்னொட்டுச் சொற்களில் ஒன்றைப்பெற்று அண்ணனையும் விளிவடிவில் மூத்தோன், பெரியோன் என்னு மிவரையுங் குறிப்பதாகும்.

அரசன், ஆசிரியன், தாய், தந்தை, தமையன் என்னும் ஐவரும் ஐங்குரவரென நீதிநூல்களிற் குறிக்கப்படுவர். குரவர் பெரியோர். ஐயன் என்னும் பெயர் ஐங்குரவர்க்கும் பொது வாகும்; தாயைக் குறிக்கும்போது பெண்பாற்கேற்ப ஐயை என ஈறு மாறி நிற்கும். ஆகவே, ஐயன் என்னும் பெயர் பெரியோன் என்னும் பொருளையே அடிப்படையாகக் கொண்ட தாகும்.

ஆசிரியன், அல்லது குரு என்னும் பொருளில், கிறிஸ்தவப் பாதிரிமாரும் ஐயர் என்றழைக்கப்படுகின்றனர்.

பார்ப்பனருக்கு ஐயர் என்னும் பெயர் முனிவர் என்னும் கருத்துப்பற்றி வந்ததாகும். முதன் முதலாய்த் தமிழ்நாட்டிற்கு வந்த காசியபன் போன்ற ஆரியப் பிராமணர், ஒழுக்கத்தால் தமிழ் முனிவரை ஒருபுடையொத்தமை பற்றி ஐயர் எனப்பட்டனர். பின்பு அது விரிவழக்காய், கபிலர், பரணர் போன்றவர்க்கும், தில்லைவாழந்தணர் போன்ற பூசாரியர்க்கும், இறுதியில் எல்லாப் பார்ப்பனருக்குமாக வழங்கி வருகின்றது.

ஆங்கிலேயர் வருமுன் தமிழ்நாட்டிலாண்ட பல தெலுங்கச் சிற்றரசர்க்குத் துரைகள் என்று பெயர். பாஞ்சாலங்குறிச்சித் துரை என்ற வழக்கு இன்னுமுள்ளது. ஆங்கிலேயர் முதலாவது 'கீழிந்தியக் கும்பனி' (East India Company) அதிகாரிகளாய்த் தமிழ் நாட்டில் ஆட்சியை மேற்கொண்டபோது துரைகள் எனப்பட்டனர். பின்பு அப் பெயர் மேனாட்டார் எல்லார்க்கும் பொதுப் பெயராகிவிட்டது.

ஒரு குலத்தலைவனுக்குரிய சிறப்புப்பெயர், நாளடைவில் அக் குலத்தார்க்கே பொதுப் பெயராதல் இயல்பு. நாட்டாண்மையும் ஊராண்மையும்பற்றி யேற்பட்ட நாடன் (நாடான், நாடார்), அம்பலகாரன், குடும்பன் என்னும் தலைவர் பெயர்கள் நாளடைவில் முறையே சான்றார், வலையர், பள்ளர் என்னும் குலத்தார்க்கே பொதுப்பெயர்களாகிவிட்டன. வடார்க்காட்டுப் பகுதியிலுள்ள இடையர்க்கு, அவர் முன்னோருள் ஒருவன் ஓர்