உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. மால கொண்ட பிராமிய எழுத்து

நெல்லூர் மாவட்டத்து கண்டுகூர் தாலுகாவில் மாலகொண்ட என்னும் மலை இருக்கிறது. கொண்ட என்றால் தெலுங்கு மொழியில் மலை என்பது பொருள். இந்த மலையில் ஒரு குகையும் அதன் அருகில் பிராமி எழுத்தும் காணப்படுகின்றன. இவை 1937ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டன. தென் இந்தியக் கல்வெட்டுத் துறையின் 1937- 38 ஆம் ஆண்டு அறிக்கையில் இது கூறப்பட்டிருக்கின்றது.1

இந்தப் பிராமி எழுத்தின் மொழித் தொடர்கள் பிராகிருத மொழித் தொடர்கள். இப்போது ஆந்திரநாட்டில் சேர்ந்துள்ள இந்த இடம் சங்க காலத்தில் தமிழகத்தின் வடஎல்லையைச் சேர்ந்திருந்தது. தமிழகத்தின் வட எல்லை பொதுவாக வேங்கடமலை என்று கூறப்பட்டாலும் அதன் சரியான எல்லை வடபெண்ணை ஆறு. பழைய காலத்துத் தொண்டை நாடு இருபத்து நான்கு கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அக் கோட்டங்களின் முதல் கோட்டம் வடபெண்ணை ஆற்றின் தென் கரையில் இருந்தது. பழந்தமிழகத்தின் வட எல்லையில் இருந்த மால கொண்ட மலையில் உள்ள பிராமி எழுத்தின் வரிவடிவம் இது. (படத்தில் காண்க.)

இதன் சொற்றொடர் இது. அர சாள குல்ஸ தத ஸெடி புதஸ ஸிரி வீரி செ ட்டி நோ தான.

அருவாள குலத்து ந(ந்)த செட்டி மகனான ஸிரி வீரி செட்டியி னுடைய தானம் என்று இதன் பொருள்.

விளக்கம். அரவாள என்பது அருவாள என்னும் சொல். அருவா நாடு அல்லது அருவாள நாடு என்பது தொண்டை மண்டலத்தின் பழைய பெயர். தொண்டை நாடான அருவா நாடு - பழங்காலத்தில் திருவேங்கட நாட்டை (திருவேங்கடக் கோட்டத்தை)த் தன்னுடன் கொண்டிருந்தது. அதன் வட எல்லை வடபெண்ணையாறு. தொண்டை மண்டலமான அருவா நாட்டைத் தாலமி என்னும் கிரேக்கர் அருவர்னொய் (Aruvarnoi) என்று கூறுகின்றார். அருவா நாட்டுக்கு அடுத்து வடக்கேயிருந்த தெலுங்கர் தமிழரை அரவர் என்றும் தமிழ்