உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

-

27

இருபத்து மூன்றாவது தீர்த்தங்கரராகிய பார்சுவநாதர் கி.மு. எட்டாம் நூற்றாண்டில் இருந்தவர். அஃதாவது கி.மு.817 முதல் கி.மு.717 வரையில் இருந்தவர். இவருக்குப்பின்னர் 250 ஆண்டுகளுக்குப் பிறகு வர்த்தமான மகாவீரர் தோன்றி 72 ஆண்டுகள் உயிர்வாழ்ந்திருந்தார். இவர் கி.மு. 599 முதல் கி.மு. 527 வரையில் இருந்தவர். வர்த்தமான மகாவீரர் காலத்திலே, பௌத்தமதத்தை உண்டாக்கிய கௌதமபுத்தரும், ஆசிவக மதத்தை உண்டாக்கிய மற்கலியும் இருந்தார்கள். இவர்களில் மகாவீரர் வயதில் மூத்தவர். மற்கலி, மகாவீரருடன் ஆறு ஆண்டு ஒருங் கிருந்தார். பிறகு மகாவீரருக்கு மாறுபட்டு ஆசிவகமதம் என்னும் புதிய மதத்தையுண்டாக்கினார். இதனால், பௌத்த மதமும் ஆசீவகமதமும் மகாவீரர் காலத்தில் தோன்றிய மதங்கள் என்பதும் இவ்விரு மதங்களுக்கு முற்பட்டது சமணமதம் என்பதும் விளங்குகிறது.

சமண சமயம் பிற்காலத்தில் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிவுண்டது. அவை சுவேதாம்பர சமணம், திகம்பர சமணம், ஸ்தானக வாசி சமணம் என்பன. சுவேதாம்பர சமணத் துறவிகள் வெண்ணிற ஆடை அணிவர். இவரின் ஆலயங்களில் உள்ள தீர்த்தங்கரர் திருவுருவங்களுக்கும் வெண்ணிற ஆடை உடுத்துவர். சுவேதாம்பரம் என்பதற்கு வெண்ணிற ஆடை என்பது பொருள். திகம்பர சமணத் துறவிகள் ஆடை அணிய மாட்டார்கள். கௌபீனமும் உடுத்த மாட்டார்கள். திகம்பரர் என்றால் திசைகளை ஆடையாக உடுத்தவர் என்பது பொருள். (திக்+அம்பரம் = திகம்பரம்) அஃதாவது உடையின்றி இருப்பவர். இவரின் கோயில்களில் உள்ள தீர்த்தங்கரர் திருவுருவங் களும் டையுடுத்தப் பெறாமல் திகம்பரமாகவே (அம்மணமாகவே) இருக்கும். சுவேதாம்பர சமணரும், திகம்பர சமணரும் உருவ வழிபாட்டினர். ஸ்தானகவாசி சமணருக்கு உருவ வழிபாடு உடன்பாடு அன்று; அவர்கள் தம் கோயில்களில் சமண ஆகம நூல்களை வைத்து அவற்றையே தீர்த்தங்கரராகவும், அருகக் கடவுளாகவும் பாவித்து வணங்குவார்கள்.

சுவேதாம்பர, ஸ்தானகவாசி சமணர்கள் வட இந்தியாவில் காணப் படுகின்றனர். திகம்பர சமணர் பண்டைக் காலத்தில் தமிழ் நாட்டிலே பெருந்தொகையினராக இருந்தனர். இப்போதும் தமிழ் நாட்டில் உள்ள சமணர் திகம்பர சமணரே. தமிழ் நூல்களிலே ஜைனர் என்றும், சமணர் என்றும், அமணர் என்றும், ஆருகதர் என்றும் கூறப்படுகிறவர் திகம்பர சமணரேயாவர்.